tamilnadu

காஞ்சிபுரம், திருப்பூர், தருமபுரி முக்கிய செய்திகள்

காஞ்சியில் பரவலாக மழை
காஞ்சிபுரம், ஆக. 18- காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின்  தாக்கத்தால் பொது மக்கள் அவதியடைந்தனர். மேலும் ஏரிகள் அனைத்தும் வறண்டு போய் குடிநீர் கிடைக்காமல் தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம்  ழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

அரசு பேருந்து  சிறைபிடிப்பு 
மதுராந்தகம், ஆக.18- காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சாலையூர் கிராமத்திற்கு மதுராந்தகத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று சில வருடங்களாக இயக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அதிக வருவாய் இல்லாததால் 80 சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த பேருந்தை வேறு வழிதடத்திற்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பேருந்து மிக விரைவில் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் பொதுமக்கள் அஞ்சுகிறார்கள். இதுகுறித்து சாலையூர் கிராம மக்கள் உயர் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து ஞாயிறன்று கிராம மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது பற்றி தகவல் அறிந்து வந்த போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பேருந்து தொடர்ந்து இயக்கப்படும் என கூறியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு
திருப்பூர், ஆக. 18-திருப்பூரில் புதிய செல்போன் டவர் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ். நகர் பகுதியில் வி.ஆர்.பி.நகர்குடியிருப்பு உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மொட்டை மாடியில் புதிதாக செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனத்தின் சார்பில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வந்தது. இதையறிந்து இப்பகுதி மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சனியன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி செல்போன் டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதையடுத்து ஒன்றுதிரண்ட அப்பகுதி மக்கள் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும், மாநகராட்சி ஆணையரிடமும் மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் மக்கள்அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சிதிலமடைந்த கட்டிடத்தின் மீது செல்போன் டவர் அமைத்தால், அது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் என்ற அச்சம் நிலவுகிறது. மேலும் அருகிலுள்ள வீடுகளுக்கும் கதிர்வீச்சு தாக்குதல் ஏற்படும் நிலை உள்ளது. எனவேஇப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.  தருமபுரி அரசு கலை கல்லூரியில்

அரசியல் அறிவியல் பாடப்பிரிவு தொடக்கம்
தருமபுரி, ஆக.18- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் புதியதாக பிஏ அரசியல் அறிவியல் என்ற பாடப்பிரிவு தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பாக்கியமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2019-2020 கல்வியாண்டில் தமிழக அரசால் இக்கல்லூரிக்கு புதியதாக பிஏ அரசியல் அறிவியல் என்ற பாடப்பிரிவு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்பாடப் பிரிவிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரும் 19ந் தேதி முதல் 23ந் தேதி வரை வழங்கப்படும். இப்பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பொது விண்ணப்பத்தின் விலை ரூ.50.தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பம் இலவசமாக வழங்கப்படும். இலவச விண்ணப்பம் பெறுவோர் அசல் சாதி சான்று காண்பித்து அதன் நகல் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.