கள்ளக்குறிச்சி, ஜூலை 23- கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட கள்ளக் குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய வட்டங்களுக்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். சங்கராபுரம் வட்டம் கொசுப்பாடி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் ஏழுமலை முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கடும் சிரமப்பட்டு வந்த நிலையில் அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நவீன பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியை துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார். மேலும் சின்ன சேலத்தைச் சேர்ந்த பலவேசமுத்து என்பவரின் மனைவி பொன்னம்மாள் என்பவருக்கு ரூ 8200 மதிப்புள்ள டிஜிட்டல் ஸ்மார்ட் மின்சார மடக்கி ஊன்று கோலும், பிரெய்லர் பயன்பாட்டிற்கான கடிகாரமும் வழங்கினார். இம்முகாமில் துணை ஆட்சியரிடம் உதவி கோரி மாற்றுத் திறனாளிகள் 41 மனுக்கள் அளித்தனர். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும், முடநீக்கியல் தொழில் நுட்ப வல்லுநருமான கண்ணன் மற்றும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய வட்டங்களின் சமூகநல வட்டாட்சியர்களும், பிற அதிகாரிகளும் பங்கேற்றனர்.