tamilnadu

img

'காபி டே' நிறுவனர் சித்தார்த்தா உடல் மீட்பு 

கடன் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்ட கபே காபி டே’  உரிமையாளரும் முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனான சித்தார்த் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக முன்னாள் முதல்வரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். இவர் கடந்த, 1993ல், கபே காபி டே என்ற நிறுவனத்தை துவக்கினார். குடும்பத் தொழிலான, காபி கொட்டை ஏற்றுமதியில் ஈடுபட்ட வந்த அவர், நாடு முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களை துவக்கி, கோலோச்சி வந்தார். கடந்த, 37 ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில் கால்பதித்தார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட  பின்னடைவால்  கடன் நெருக்கடியில்  சிக்கி திணறி வந்தார். 

எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த சில நாட்களிலேயே சித்தார்த்துக்கு சொந்தமான நிறுவனங்கள், கபே காபி டே ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.  இந்நிலையில் திங்களன்று சித்தார்த்தா தனது காரில் பெங்களூருவில் இருந்து சிக்கமகளூருவுக்கு சென்றார். சக்லேஷ்புரா அருகே சென்றபோது ஓட்டுனர் பசவராஜிடம், மங்களூருவுக்கு செல்லும்படி சித்தார்த்தா கூறினார். அதன்படி டிரைவர் காரை மங்களூருவுக்கு ஓட்டிச் சென்றார். இரவு 7.15 மணியளவில் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் கார் சென்றபோது காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். காரில் இருந்து இறங்கிய சித்தார்த்தா தனது செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் காருக்கு திரும்பிவரவில்லை. இதையடுத்துபசவராஜ், சித்தார்த்தின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.  இதையடுத்து ஓட்டுனர் பசவராஜ், சித்தார்த் மாயமாகிவிட்டதாக கூறி கங்கனாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் கமிஷனர் அனுமந்தராயா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

சித்தார்த் ஆற்றில் குதித்து இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள், மீனவர்கள் உதவியுடன் நேத்ராவதி ஆற்றில் போலீசார் தேடிப் பார்த்தனர். இரவு முழுவதும் தேடியும் சித்தார்த் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
இந்நிலையில், சித்தார்த்தாவின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் நேத்ராவதி ஆற்றில் இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவரது மரணம் உறுதியானது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.