tamilnadu

img

மாருதி மண்பாடேக்கு வீர வணக்கம் :அகில இந்திய விவசாயிகள் சங்கம் அஞ்சலி

அகில இந்திய விவசாய சங்கத்தின் மத்திய கிசான் கமிட்டி உறுப்பினரும், கர்நாடக விவசாய சங்கத்தின் துணைத் தலைவருமானமாருதி மண்பாடே மறைவிற்கு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கர்நாடக விவசாய சங்கத்தின் துணைத் தலைவரான தோழர் மாருதி மண்பாடே கோவிட்-19 தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி, மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 65. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய கிசான் கமிட்டி மற்றும் அகில இந்திய விவசாயிகள் கவுன்சில் உறுப்பினரும், தற்சமயம் கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார்.  

தோழர் மாருதி மண்பாடே மிகவும் ஒடுக்கப்பட்ட குடும்பப் பின்னணியில், விவசாயத் தொழிலாளர் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் கட்சியின் முழுநேர ஊழியராகவேண்டும் என்பதற்காக தான் பார்த்துவந்த அரசாங்க வேலையை உதறி விட்டு 1981-82இல் வெளியேறியவர். அதன்பின் ஜில்லா பரிஷத் தலைவராக இருந்திருக்கிறார். சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருக்கிறார்.

தோழர் மாருதி மண்பாடே கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற அனைத்து இயக்கங்களிலும் முன்னிலையில் நின்று செயல்பட்டவர். குறிப்பாக தேவதாசிப் பெண்களின் விடுதலைக்காக அவர்களை அணிதிரட்டி இயக்கங்களை நடத்தினார். அதேபோன்று தலித் விடுதலை முன்னணியையும் ஏற்படுத்தி அதனுடன் தீவிரமாகச் செயல்பட்டவர். அவர் மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழான தொழிலாளர்களையும், பஞ்சாயத்துத் தொழிலாளர்களையும் அணிதிரட்டியதில் முன்னணி வகித்தார். அதேபோன்று மாநிலத்தில் கரும்பு விவசாயிகள் போன்று ஒவ்வொரு பயிர் பயிரிடும் விவசாயிகளுக்கும் தனித்தனி சங்கங்கள் அமைத்திட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தி வந்தார்.

மதவெறி சக்திகளுக்கு எதிரான போராட்டத்திலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திலும் உறுதியுடன் நின்றார்.

அவருடைய இழப்பு அகில இந்திய விவசாய சங்கத்திற்கும், தொழிலாளர் – விவசாயிகள் இயக்கத்திற்கும் மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கும், சக தோழர்களுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் தன் ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.