tamilnadu

காங்கிரஸ் தலைவர் சோனியா மீது வழக்கு

பெங்களூரு, மே 21- பிரதமர்-கேர்ஸ் நிதி குறித்து அவதூறு மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எந்தவொரு அவசர நிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (பி.எம் ‘கேர்ஸ்) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூடங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த மே 11-ஆம் தேதி பிரதமர்-கேர்ஸ் நிதி குறித்து தவறான, ஆதாரமற்ற தகவல்களை காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில்  வழக்கறிஞர் கே.வி.பிரவீன் இது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட சில காங்கிரஸ் தலைவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153,  505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.