நாகர்கோவில், ஜூன் 6-நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசியநெடுஞ்சாலையில் கரியமாணிக்கபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரபகுதி மக்கள் இறந்தால் எரியூட்டுவதற்கென, கரியமாணிக்கபுரம் கிராம எல்லையில் 10க்கும் அதிகமான சுடுகாடுகள் பல்வேறுசமுதாய ஊர் மக்களால் அமைக்கப்பட்டுள்ளது.இங்குள்ள ஒரு சுடுகாட்டு கொட்டகையில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக, அப்பகுதி மக்கள் கோட்டாறு காவல் துறையினருக்கு வியாழனன்று காலை தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவஇடத்துக்கு வந்த நாகர்கோவில் ஏ.எஸ்.பி ஜவஹர், கோட்டாறு ஆய்வாளர் அன்பு பிரகாஷ் ஆகியோர் விசாரணைநடத்தினர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கழுத்தில் கத்தி குத்து காயங்களுடன், பெட்ரோல் ஊற்றிஎரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.