நாகர்கோவில், அக்.6- முகநூல் பதிவு ஒன்றை பகிர்ந்ததற்காகவும், 2018 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட ஒரு பதிவை காரணம் காட்டியும் சிபிஎம் கிளை செயலாளர் ஜெயன் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அவரை விடுவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த ஜெயன் என்பவர் அந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராகவும், சிஐடியுவின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் வட்டார செயலாளராகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். இவர் மத்திய அரசின்மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பல போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். அவற்றை முகநூலில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் முகநூலில் வந்த ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதோடு இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு பதிவு செய்திருந்த ஒன்றை அவர் நீக்கிய பிறகும், அதை பதிவிறக்கம் செய்து அதையும் காரணம் காட்டி காவல் நிலையத்தில் பாஜகவினர் இவருக்கு எதிராக புகார் அளித்தனர். இந்த பொய்ப்புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்து ஜெயனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் வகையில் தொடர்ந்து வன்முறை பேச்சுக்களையும், ஆபாச கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாகவும், மக்களை பிளவுபடுத்தும் வகையிலும் வன்முறை கருத்துக்களை பதிவு செய்யும் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட காவல் துறை, மக்கள் பிரச்சனைகளுக்காகவும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை முகநூலில் கண்டித்தும் பதிவு செய்து வரும் ஜெயனை கைது செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே பாஜகவினரால் வேண்டுமென்றே புனையப்பட்ட வழக்கிலிருந்து ஜெயனை விடுவித்து அவரை விடுதலை செய்ய மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.