tamilnadu

img

வடலூர் காவல் ஆய்வாளரை கைது செய்யக்கோரி சிபிஎம் போராட்டம்

லாக்கப் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வடலூர் காவல் ஆய்வாளரின் ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்யக்கோரி சிபிஎம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் கிராமத்தை சேர்ந்த ரேவதி என்பவரின் கணவர் சுப்பிரமணி கடந்த 29.02.2015 அன்று நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு சென்ற நிலையில் காவல் துறை ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்களால் சித்திரவதை செய்து அடித்து கொல்லப்பட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவுவாக இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது. காவல்  ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் மூன்று பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு இது கொலையாகாத மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த மனுவின் மீது விசாரணையில் 22.08.2022-ஆம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் மீது கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவுகள் மாற்றம் செய்யப்பட்டு கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்சி/எஸ்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில் வழக்கு நிலுவையில் உள்ள சூழ்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா மீண்டும் கடலூர் மாவட்டத்தில் வடலூர் காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணியில் சேர்ந்துள்ளார். இவரது ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தியும், தற்காலிக பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க கோரியும், கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமையில் கடலூர் நகர அரங்கில் இருந்து 500க்கு மேற்பபட்டோர் பேரணியாக புறப்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.