tamilnadu

img

கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அவதி

கடலூர், ஆக. 12- மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செல்வதற்கு சக்கர நாற்காலி இல்லாததால் மாற்றுத்திறனாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். கடலூரில் புதிய ஆட்சியர் அலுவலகத்தில், 50க்கும் மேற்பட்ட மாவட்ட அளவிலான துறைவாரியான அலுவலகங்கள் செயல்படுகிறது. மேலும் இந்த வளாகத்திற்குள் முதலமைச்சர் காப்பீடு திட்டம் முதற்கொண்டு ஆதார், இ சேவை மையம், விவசாயிகளுக்கான, பல்வேறு துறைகள் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் உள்ளிட்டவையும் செயல்படுகின்றன. ஆனால் மாற்று திறனாளிகள் வந்து செல்வதற்கான வழி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவர்களை அழைத்துச் செல்வதற்கு சக்கர நாற்காலிகளோ, அதற்கான உதவியாளரோ இல்லை. மாற்றுத்திறனாளிகளை அவர்களுடன் வருபவரே தூக்கி சுமந்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் மாற்றுத்திறனாளிகள் அச்சத்துடனேயே வருகின்றனர். எனவே சக்கர நாற்காலியும், உதவியாளரையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.