tamilnadu

img

ஒடிசாவில் ஏப்ரல் 30வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒடிசா மாநிலத்தில் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அம்மாநில  முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். 
கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை  மத்திய அமல்படுத்தியுள்ளது, இந்த ஊரடங்கு வரும்  14 ஆம் தேதியுடன் வருகிறது.  ஆனால் நாட்டில் நோய்த்தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று பல மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 5 எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். 
பின்னர் நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் ஊரடங்கை நீட்டிக்க பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதாக பிரதமர் மோடி கூறினார். எனினும் வரும் 11 ஆம் தேதி நடைபெறும் மாநில முதல்வர்களுடனான பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இதுதொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தகவல் வெளியானது. 
இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவப்படாத நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். 
ஒடிசாவில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை முதல் மாநிலமாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது ஒடிசா அரசு. வரும் ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிலையங்களும் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.