சென்னை, ஜூலை 31- தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சா.கந்தசாமி வெள்ளியன்று காலமானார். அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். 1968-ஆம் ஆண்டு வெளியான “சாயாவனம்” நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான சா.கந்தசாமி 1997-ஆம் ஆண்டு எழுதிய “விசாரணை கமிஷன்” என்ற நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதுபெற்றார். நாவல், சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய விமர்சனம் என இடையறாது எழுதிக்குவித்த சா.கந்தசாமியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.
டி.கே.ரங்கராஜன் இரங்கல்
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “என்னுடைய இனிய நண்பர் சா.கந்தசாமி மறைவு அதிர்ச்சியளிக்கிறது. என்னுடைய நெடுநாளைய நண்பரான சா.கந்தசாமி, மிகவும் தனித்துவமான எழுத்தாளர் ஆவார். நடைபயிற்சியின்போது அவரோடு நடத்திய உரையாடல்கள் என்றென்றும் நினைவில் நிற்கத்தக்கவை. யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியவர் அவர். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.