கொச்சி, மே 27-நடைபாதைகளில் வியாபாரம் செய்யும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் கல்வி புகட்டும் பணியை கேரள கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதிக்கு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வெளிமாநிலங்களிலிருந்து பலர் நடைபாதை வியாபாரம் செய்ய குடும்பத்தோடு வருவது வழக்கம். இங்குள்ள நோர்த்து பாலத்தின் அடியில் முகாமிடும் நாடோடிகளான இவர்களது குழந்தைகளுக்கு கல்வி பெறும் சூழல் அமையவில்லை. அவர்கள் அப்பகுதிக்கு வந்திருப்பதை அறிந்த உடன் யூனியன் எல்.பி.பள்ளி ஆசிரியர்கள், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் பிற மொழி தெரிந்த தன்னார்வலர்களுடன் அங்கு சென்றனர். அங்குள்ள அனைவரையும் அழைத்து குழந்தைகளுக்கு கல்வி புகட்ட வேண்டியதன் தேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பலரும் அவர்களது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டினர். ஆனாலும், அவர்களிடம் மனமாற்றம் ஏற்படும் வரை அந்த முயற்சி தொடர்ந்தது. இறுதியில் விருப்பம் தெரிவித்த உடன் குழந்தைகளை குளிப்பாட்டி புத்தாடை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பணியை ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் மேற்கொண்டனர். தில்லிக்கு நாடோடி கள் திரும்பி செல்லும் வரை அவர்களது குழந்தைகள் தூக்கணார்வட்டம் யூனியன் எல்.பி.பள்ளியில் படிப்பார்கள்.
கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன. கேரளத்துக்கு வரும் இவர்களது குழந்தைகளும் சீருடை அணிந்து அரசுப்பள்ளிக்கு செல்கிறார்கள். பாடம் படிக்கிறார்கள். வேளா வேளைக்கு உணவு கிடைக்கிறது. வெளி மாநிலங்களிலிருந்து கேரளா வரும் வெளி மாநில குழந்தைகள் எக்காரணம் கொண்டும் கல்வியை இழந்துவிடக்கூடாது என்கிற அரசின் உறுதியான நிலைப்பாட்டின் பகுதியாகவே கேரளத்தில் இது நடந்துகொண்டிக்கிறது.தூக்கணார்வட்டம் எஸ்.என்.ஏ. மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆர்யன் குப்தா ஒன்பது பிரிவுகளில் ஏ பிளஸ் மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் இம்முறை கேரளத்தின் சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஜிதேஷ் பாண்டே காயத்ரி தம்பதியின் மகள் நயனா தூக்கணார்வட்டம் எஸ்.என்.மேல்நிலைப்பள்ளியில் மாணவியாவார். இவர் மலையாளம் இரண்டாம் தாள் உட்பட அனைத்து பாடங்களிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எஸ்எஸ்எல்சியிலும், இப்போது பிளஸ் டூவிலும் ஏ பிளஸ் பெற்றுள்ளார். இதே பள்ளியில் படிக்கும் நயனாவின் தங்கை நந்தனா இம்முறை எஸ்எஸ்எல்சி தேர்வில் 8 பாடங்களில் ஏ பிளஸ் பெற்றுள்ளார்.
வெளிமாநிங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மொழி வரம்புகளை தாண்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. கற்றல் திறன் குறைந்த குழந்தைகளை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்க பள்ளிகளில் வள (சுநளடிரசஉந) ஆசிரியர்கள் உள்ளனர். உடல் ஊனம் காரணமாக பள்ளிகளுக்கு செல்ல முடியாத குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று பயிற்றுவிக்கும் வள ஆசிரியர்களும் உள்ளனர். பழங்குடி கிராமங்களிலிருந்து வரும் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காண ஒவ்வொரு பகுதியிலும் தன்னார்வலர்கள் உள்ளனர். இந்த பிரிவில் குழந்தைகளுக்கு தனியாக சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தேவையான தொகையை அரசு வழங்குகிறது. சமூக பொருளாதார வரம்புகளால் ஒரு குழந்தைகூட கல்வி உரிமையை இழந்துவிடக்கூடாது என்கிற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த நோக்கம் நிறைவேறியிருக்கிறது என்பதை இந்த ஆண்டின் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்டூ பொது தேர்வு முடிவுகள் நிரூபித்துள்ளன. அரசு கரம்பற்றியபோது தயங்கிய ஏராளமான குழந்தைகள், இன்று கல்வியின் இனிமையை சுவைக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் உடல் மற்றும் மொழி தடைகளை கடந்து, பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொண்டு, கல்வியை தொடர்வதற்கான தகுதியை பெற்றுள்ளனர்.