tamilnadu

img

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செமன் ஸ்டேஷன் ஊழியர்கள் இன்று பணிக்கு செல்கின்றனர்

திருவள்ளூர், ஜூலை 10- செமன் ஸ்டேஷன் நிறுவனத்தில் தொழிலாளர்க ளுக்கு பணி மறுக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முதல் (ஜூலை 11) ஊழியர்கள் பணிக்கு செல்கின்றனர். சோழவரம்  அருகில் உள்ள அலமாதியில் மத்திய அரசு நிறுவனமான செமன் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இங்கு 50 தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் கடந்த ஐந்து வருடங்களாக வேலை செய்து வருகின்றனர். புதியதாக வந்த ஒப்பந்ததாரர் இதுவரை கொடுத்து வந்த ஊதியம் வழங்க முடியாது எனக்கூறி பணி வழங்க மறுத்தார். இதனை தொடர்ந்து சிஐடியு தலைமையில் ஜூலை 1 முதல் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் வெள்ளியன்று (ஜூலை 10) செமன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அதில், சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன், செயலாளர் கே.ராஜேந்திரன், துணை நிர்வாகிகள் ஜி.சம்பத், பி.நடேசன், ஏ.ஜி.சந்தானம், சி.பாலாஜி, அ.து.கோதண்டன், நிர்வாக மனிதவள அதிகாரி மோகன், பொன்னேரி வட்டாச்சியர் மணிகண்டன், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், ஊரடங்கு காலம் என்பதால் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை வழங்கவும், ஊதிய விவகாரம் குறித்து சமரச தீர்பாணையத்தில் பேசி முடிவிற்கு வரும் வரை பழைய நிலையே நீடிக்கும் எனவும் உடன்பாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவிற்கு வந்தது. இதனை தொடர்ந்து ஜூலை 11 முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர்.