நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை மொத்த பாதிப்பு ஆயிரத்தைத் தொட்டுள்ளது. இந்தச் சூழலில், நாகை நகராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை அவர் பணிக்கு வந்து சென்றிருப்பதால், நாகை நகராட்சி அலுவலகத்தை எதிர்வரும் 12-ஆம் தேதி வரை மூட நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் அறைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூன்று நாளைக்கு மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது நகராட்சி அலுவலகமும் மூடப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.