கிரிக்கெட் விளையாட்டில் எந்தவொரு நாடாக இருந்தாலும் விக்கெட்டை வீழ்த்த மற்றும் ரன் ரேட்டை கட்டுப்படுத்த பந்துவீச்சாளரைத் தரம் பார்த்து போட்டிக்கு அனுப்பும். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சற்று மாறுபட்ட மனநிலையுடன் பந்துவீச்சாளர்களைக் களமிறக்கும். அதாவது விக்கெட், ரன் ரேட் கட்டுப்பாடு எல்லாம் வேண்டாம். எதிரணி பேட்ஸ்மேன் எங்களது பந்து வீச்சைக் கண்டு நடுங்க வேண்டும் அல்லது காயத்துடன் பெவிலியன் திரும்ப வேண்டும். இது தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் கணக்கு. ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ இந்த வழிமுறையை அதிகம் பின்பற்றி 15-க்கும் மேற்பட்ட பேட்ஸ்மேன்களை பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரட் லீ-க்கு பிறகு ஷான் டெய்ட் சில மாதம் தன்னுடைய வேலையைக் காட்டினாலும் பெரியளவில் சோபிக்கவில்லை.