கொரோனா தொற்றின் முதல் அலை உலகின் பல நாடுகளை மிரட்டி சென்ற நிலையில், இரண்டாம் கட்ட அலையின் அபாயத்தை அந்நாடுகள் அச்சத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. ஆனால், கொரோனாவின் முதல்கட்ட அலையே இன்னும் இந்தியாவில் முடிந்தபாடியில்லை என்கிறஅவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அதேநேரம், கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேரை பலிகொடுத்துள்ள தமிழகத்தில் மட்டும் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என நாள்தோறும் ஆளும் தரப்பு தம்பட்டம் அடித்துக்கொண்டுள்ளது. அதற்காக பல்வேறு புள்ளி விவர குறிப்புகளை அன்றாடம் அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றனர். அதாவது, நாள் ஒன்றிக்கு 6 ஆயிரம் பாதிப்புகளை தாண்டாத வகையில் முதல்வரின் கட்டுக்குள் கொரோனா தொற்று இருப்பதாக பெரும் பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், இவை எந்தளவிற்கு உண்மை தன்மை வாய்ந்தது என்பதை அரசு தரப்பு வெளியிட்டு வரும் அறிக்கையே தற்போது அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக அரசு தனது “மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை” தளத்தில்(/stopcorona.tn.gov.in) தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை, மாவட்டம் வாரியான எண்ணிக்கை மற்றும் அன்றைய தினம் உயிரிழந்தோர். ஒட்டுமொத்த உயிரிழப்பு போன்ற தகவல்களை வெளியிட்டு வருகிறது. இந்த செய்திக்குறிப்பே கொரோனா பாதிப்பு குறித்தான அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாக ஊடகங்களுக்கும், பொதுமக்கள் பார்வைக்கும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த அறிக்கையில் கொரோனா பாதிப்புகள் குறித்தான புள்ளி விவரங்களில் ஒவ்வொரு நாளும் எண்ணிக்கையை திட்டமிட்டு கூட்டி காட்டுவது அல்லது குறைத்து காட்டுவது போன்ற தில்லுமுல்லுகள் அரங்கேறி வருவது அம்பலத்திற்கு வந்துள்ளது.
அதாவது, கொரோனா பாதித்தோரின் நேற்றைய எண்ணிக்கையுடன், இன்றைய பாதிப்பை சேர்த்து பார்கையில் ஒன்றுக்கொன்று பொருந்தாத வகையில் ஒட்டுமொத்த பாதிப்பு இருப்பது பல்வேறு இடங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, கடந்த செப்.25 ஆம் தேதியன்று மதுரை மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 216 பேர் ஆவார். இதனைத்தொடர்ந்து செப்.26 ஆம் தேதியன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக அரசு தரப்பில் கூறப்படுவது 81 பேர். இந்த இரண்டு எண்ணிக்கையும் கூட்டுகையில் மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 297 ஆக இருக்க வேண்டும்.ஆனால், அரசின் அறிவிக்கையின்படி 16 ஆயிரத்து 287 பேர் என காட்டப்படுகிறது. இதன்மூலம்10 நோயாளிகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் செப்.25 ஆம் தேதியன்று மொத்த பாதிப்பு 13,037, அடுத்தநாள் (செப்.26) பாதிப்பு 73 பேர். ஒட்டுமொத்தமாக 13,110 வர வேண்டும். ஆனால், அரசின் அறிக்கையில் மொத்த பாதிப்பு 13,094 என கூறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 16 பேர் குறைத்து காட்டப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் செப்.25 அன்று மொத்த பாதிப்பு 10,0883, அடுத்தநாள் (செப்.26) பாதிப்பு 96 ஆக மொத்தம்10,179. ஆனால், அரசின் விவரமோ 10,168 பேர் என11 பேர் மாயமாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் செப்.25 மொத்த பாதிப்பு 4,728 பேர், அடுத்தநாள் (செப்.26) 134 புதிய பாதிப்பு, மொத்தம் 4,862. அரசின் விவரமோ 4,853 ஆக 9 பேர் மாயமாகியுள்ளனர். திருவள்ளுவர் மாவட்டத்தில் செப்.25மொத்த பாதிப்பு 31,220 பேர், அடுத்தநாள் (செப்.26) 235 புதிய பாதிப்பு, மொத்தம் 31,455. அரசின் விவரமோ 31,449 ஆக 6 பேர் மாயமாகியுள்ளனர். இதேபோல் வேலூர், தென்காசியில் தலா 2 பேர், அரியலூரில் 3 பேர், திருப்பத்தூரில் ஒருவர் என அன்றைய தினம் மட்டும் 58 பேர் அரசு வெளியிட்ட புள்ளி விவரத்திலேயே திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது.
இவை அன்றைய நாள் மட்டுமல்ல, அதற்கு முந்தைய அனைத்து நாட்களிலும் இவ்வாறுதிட்டமிட்டு பல விவரங்கள் அரசு நிர்வாகத்தால்மறைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அதாவது, செப்.25 வெளியான அரசின் விவரக்குறிப்பை பார்க்கையில், ஈரோடு மாவட்டத்தில் செப்.24ல் மொத்த பாதிப்பு 6,029. மறுநாள் (செப்.25) புதிய பாதிப்பு 151, ஆக மொத்தம் 6,180 என்கிற நிலையில் அரசின் விவரக்குறிப்போ 6,140 என்றே கூறிப்பிடப்படுகிறது. அதாவது,அன்றைய தினம் மட்டும் 40 பேர் கணக்கில் மறைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் மதுரையில் செப்.24ல் மொத்த பாதிப்பு 16,175. மறுநாள்(செப்.25) புதிய பாதிப்பு 71, ஆக மொத்தம்16,246 என்கிற நிலையில் அரசின் விவரக்குறிப் போ 16,216 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 பேர் காணாமல் போயியுள்ளனர். இதைக்காட்டிலும் அதிர்ச்சியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் செப்.24ல் மொத்த பாதிப்பு 31,065. மறுநாள் (செப்.25) புதிய பாதிப்பு 229, ஆகமொத்தம் 31,294 என்கிற நிலையில் அரசின் விவரக்குறிப்போ 31,220 என கூறப்பட்டுள்ளது. இதன்படி 74 நோயாளிகளின் எண்ணிக்கை திட்டமிட்டு மறைத்துள்ளனர். இதேபோல், திருநெல்வேலியில் 13 பேர், திருச்சியில் 10 பேர், திருவாரூரில் 8 பேர், திருப்பத்தூர், கரூரில் தலா 4 பேர்,திருவண்ணாமலையில் 3 பேர் என அன்றைய தினம் மட்டும் 192 பேர் வரை கணக்கில் வராமல் அரசு நிர்வாகம் அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவியுள்ளது.
இதேபோல், செப்.24 ஆம் நாள் வெளியான அரசின் விவரக்குறிப்பை ஆராய்ந்து பார்த்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செப்.23ல் மொத்த பாதிப்பு 8,887. மறுநாள் (செப்.24) புதிய பாதிப்பு42, ஆக மொத்தம் 8,929 என்கிற நிலையில் அரசின் விவரக்குறிப்போ 8,911 என கூறப் பட்டுள்ளது. அதன்படி, 18 நோயாளிகள் குறைத்து காட்டப்பட்டுள்ளனர். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் செப்.23ல் மொத்த பாதிப்பு 8,545. மறுநாள் (செப்.24) புதிய பாதிப்பு 45, ஆக மொத்தம் 8,590 என்கிற நிலையில் அரசின் விவரக்குறிப்போ 8,577 என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 13 பேர் குறைத்து காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் வெளி யிடப்படும் அரசின் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரக்குறிப்பில் திட்டமிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டு, தொற்றாளர்களின் எண்ணிக்கை மறைக்கப்பட்டே வந்துள்ளது.அதேநேரம், இவை ஒட்டுமொத்த எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மாவட்டங்களுக்குள்ளேயே சரிக்கட்டும் நடவடிக்கைகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப் பட்டுள்ளதும் தெரியவருகிறது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் நோயாளிகளின் எண்ணிக்கை மாயமாகும் நேரத்தில், தங்களது தில்லு, முல்லுவை மறைக்கும் வகையில் வேறு சில மாவட்டங்களில் அதனை எவ்வித கூச்ச நாச்சமின்றி கூட்டி காட்டி சரிகட்டும் அவலமும்அரங்கேறியுள்ளது. அதாவது, செப். 25ஆம் தேதியன்று 192 நோயாளிகள் மாயமாகியிருந்ததை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ஆனால், அதேநாள் வெவ்வேறு மாவட்டங்களில் அதே 192 பேர் புதிய நோயாளி களாக எவ்வித கணக்கிலும் வராமல் திட்டமிட்டுஇணைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், செப்டம்பர் 24 ஆம் தேதி 31 நோயாளிகள் சில மாவட்டங்களில் திடீரென காணாமல் போய், அதே 31 நோயாளிகள் வேறு சில மாவட்டங்களில் புதிதாக முளைத்துள்ளனர். மேலும், செப்டம்பர் 21 ஆம் தேதியன்று 33நோயாளிகள் காணாமல் போய் வேறு மாவட்டங்களில் 33 பேர் திடீரென நோயாளிகளாக காட்டப்பட்டுள்ளனர். இதேபோல், செப். 26 ஆம் தேதியன்று 58 நோயாளிகள் காணாமல் போய் வேறு மாவட்டங்களில் 58 பேர் திடீரென நோயாளிகளாக காட்டப்பட்டுள்ளனர். இவ்வாறுமாநில அரசு நோயாளிகளை கூட்டியும், குறைத்தும் காட்டி கொரோனா நோயோடு நோயாளிகளை கபடியாட வைத்து மக்களையும் கோமாளிகளாக்க முயன்றுள்ளது. இவ்வாறுதொடர்ச்சியாக அரசின் புள்ளி விவர குறிப்பில் பெரும் முரண்பாடுகளும், முறைகேடுகளும் அரங்கேறி வருகிறது.ஆரம்பத்தில் படிப்படியாக உயர்ந்து வந்த கொரோனா உச்சம் சமீப காலமாக அதிகபட்சம் 6 ஆயிரத்தைத் தாண்டாமல் தொடர்ந்து கட்டுக்குள் இருப்பதாக காட்டிக்கொள்வதற் காகவே இந்த கபடி ஆட்டத்தை தமிழக அரசுமேற்கொண்டுள்ளது அப்பட்டமாக தெரிய வருகிறது. இவ்வாறு மாநில அரசின் கையாள காத தனத்தை அரசின் தரவுகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இத்தகைய முன்னுக்கு, பின் முரணாக மோசடியாக இருக்கும் அரசின் தரவுகளை ஏன் நம்ப வேண்டும் என்னும் கேள்வியே எழுந்து நிற்கிறது.
பொதுமுடக்கத்தில் இருக்கும் போதே 7 ஆயிரம் வரை சென்ற பாதிப்பின் எண்ணிக்கை, தளர்வுகள் அளித்த பின்னர் எவ்வாறு 6 ஆயிரத்தைத் தாண்டாமல் இருந்தது என்பதற்கான விடை தற்போது நம்மால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். சமூக பரவல் கிடையாது, கொரோனா தமிழகத்தில் மட்டும் கட்டுக்குள் இருக்கிறது, கட்டுக்குள் இருக்கிறது என முதல்வர் முதல்அமைச்சர் மற்றும் அவர்களது அடிபொடிகள் வரை கூறிக்கொள்வது இந்த புள்ளி விவரங்களை வைத்தே. ஆனால், அவை எவ்வாறு மோசடியாக புனையப்பட்டது என்பது ஆள்பவர்களுக்கே வெளிச்சம்.
உயிர்ப் பலியிலும் மோசடி
கொரோனா எண்ணிக்கையில் குளறுபடிகள் அரங்கேறி வரும் அதேவேளையில் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையிலும் மோசடிகள் அரங்கேறி வருகிறது. தமிழக அரசு கடந்த 21 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அரசு அளித்த தகவலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 21 ஆம் தேதி வரையிலான மொத்த பலி எண்ணிக்கை 523, இதற்கடுத்த நாள் ஒருவர் பலி. இதன்படி மொத்த பலி 524 என்ற நிலையில் அன்றையதினம் 526 என இருவரின் எண்ணிக்கையை கூட்டி காட்டியுள்ளது. அதேபோல், சென்னையில் செப்.25 ஆம் தேதியின் மொத்த பலி எண்ணிக்கை 3128. செப்.26 ஆம் தேதி புதிய உயிரிழப்பு 23 பேர் என மொத்தம் 3151 ஆக இருக்க வேண்டும். ஆனால், அரசு அளித்த விவரத்தில் 3149 என குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு இருவரின் உயிரிழப்பை குறைத்து காட்டியுள்ளது.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் செப்.22 ஆம் தேதியின் மொத்த பலி எண்ணிக்கை 302. ஆனால், அதற்கு முந்தைய நாள் (செப்.21) மொத்த பலி 298. புதிய உயிரிழப்பு இருவர் என்கிற நிலையில் மொத்தம் 300 பேர் என்கிற நிலையில் 302 என கூறப்பட்டள்ளது. இதன்மூலம் அன்றைய உயிரிழப்புகளை குறைத்து காட்டி, மொத்த எண்ணிக்கையில் கூட்டி காட்டப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் செப்.25 ஆம் தேதி பலி எண்ணிக்கை 85. இதன்பின் செப்.26 ஆம் தேதி உயிரிழப்பே கிடையாது என அறிவித்துவிட்டு மொத்த எண்ணிக்கையில் மட்டும் ஒருவரை புதிதாக சேர்ந்து 86 என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த வாரத்தில் மட்டும் சுமார் இருபதிற்கும் மேற்பட்டோரை கூட்டியும், குறைத்தும் காட்டி மோடி மஸ்தான் விளையாட்டை தமிழகத்தின் எடப்பாடி அரசு அரங்கேற்றியுள்ளது.
நமது சிறப்பு நிருபர்