tamilnadu

img

சாதனையாளரின் கால் நூற்றாண்டு பயணம்...

‘‘தாயின் கண்ணீர் குழந்தையை காப்பாற்றுவதில்லை. உங்களின் ரத்தம் மட்டுமே”என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது என்கிறார் இரா. எத்திராஜன்.  50 வயதாகும் எத்திராஜன் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டெர்மினல் ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் வசித்து வரும் இவர் டேபிள் டென்னிஸ் வீரராவார். கால் நூற்றாண்டு காலமாக ரத்ததானம் செய்து வரும் இவர் சர்வதேச டேபிள் டென்னிஸ் பயிற்சியாளரும்கூட.அந்த விளையாட்டின் மீதான காதல் காரணாக   வங்கிப்பணியில்இருந்து விரைவில் விருப்ப ஒய்வு பெறவுள்ளார்.அப்படிபட்ட நபருடன் ஒரு நேர்காணல்.

தானத்தில் சிறந்தது எது? எப்படி?

ரத்ததானமே மிகச் சிறந்த தானம். ஒருமுறை ஒருவர் அளிக்கும் ஒரு யூனிட் ரத்தம் நாலு பேரின் விலை மதிக்க முடியாத உயிரை காக்கும் திறன் கொண்டது. இதை பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டது எப்படி?

தினசரி மற்றும் வார நாளேடுகளில் வரும் மக்கள் விழிப்புணர்வு செய்திகளை சிறுவயது முதலே படிக்கும் பழக்கம் உண்டு. படிப்பது மட்டும் அல்லாமல் அதை பாதுகாத்து மற்றவர்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே என்னு டைய பணியாக இன்றளவும் செய்து வருகிறேன். 1990 ஆம் ஆண்டுகளில் ரத்த வங்கிகளில் ரத்த பற்றாக்குறை காரணமாக பல முக்கிய அறுவை சிகிச்சைகள் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்படு வதை அறிந்து மிகவும் வருந்தினேன். அதற்கான காரணத்தைத் தேடி ஆய்வு செய்த பிறகு நானே ரத்ததானம் செய்ய முன் வந்தேன். முதன்முதலாக 1994 ஆம் ஆண்டில் ரத்த தானம் வழங்கினேன். அப்போது “தாயின் கண்ணீர் குழந்தையைக் காப்பாற்றுவது இல்லை. உங்களின் ரத்தம் மட்டுமே” எனும் ஒரு வாசகத்தை படித்தேன். அது என் மனதை மிகவும் பாதித்தது?.

தங்களின் முக்கிய நோக்கம் என்ன?

ரத்ததானம் வழங்குவதால் விளையாட்டு வீரர்களுக்கு சக்தி குறைந்துவிடும் என்ற கருத்து பெரும்பாலான வீரர்களிடம் உள்ளது. அது இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு விளையாட்டு வீரரான நானே ரத்த தானம் அளிக்க வேண்டும் என்று முன் வந்தேன். இதனால் விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் எவ்வித அச்சமுமின்றி ரத்ததானம் அளிக்க ஆர்வத் தோடு முன்வருவார்கள் என்பதாகும்.

உங்களால் மறக்க முடியாத நிகழ்வு எது?
மறைந்த எனது தந்தை கமலநாதனின் கண்கள் மட்டுமின்றி உடலையும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் முழு விருப்பத்தோடு தானம் வழங்கியதும். 2001 ஆம் ஆண்டு நிறுவனங்க ளுக்கிடையே நடைபெற்ற டேபிள் டென்னிஸ் முக்கியப் போட்டியில்  பங்கேற்க இருந்தேன். அந்தப் போட்டிக்கு முன் தினம் ஒருவருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை வழங்கி விட்டு அடுத்த நாளே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற தும்  ரத்த தானத்தின் மூலம் நூற்றுக்கும் மேற் பட்ட உயிர்களை காத்து உதவியதும் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங் களாகும்.

ஊக்கம், உற்சாகம் எங்கிருந்து வந்தது?
 

பல்வேறு சமூக சிந்தனையாளர்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் ஊக்கத்தால் உற்சாகம் அடைந்தேன். அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழக அரசியல் தலைவர்களில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி, முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம், இடதுசாரி இயக்கங்களின் தலைவர்களும் சுதந்திரப் போராட்ட தியாகிகளுமான என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, கே பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவர் வீ. சாந்தா உள்ளிட்டோர் எனக்கு தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தனர்.

மக்களுக்கு கூறும் செய்தி என்ன?

அடிப்படையில் நான் ஒரு டேபிள் டென்னிஸ் வீரர். சென்ட்ரல் பாங்க் ஆப் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக 23 ஆண்டுகாலமாக வென்று சாதனை படைத்திருக்கிறேன்.நிறுவனங்களுக்கிடையே மற்றும் வங்கிகளுக்கிடையே நடைபெற்ற  நூற்றுக் கணக்கான போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி இருக்கிறேன்.  பண்டிகை என முக்கிய நாட்களில் ஏற்படும் சில விபத்து மற்றும் நோய்களால் அவதிப்படும் போதுகூட மருத்துவமனைக்குச் செல்லாமல் தள்ளிப் போடும் சூழ்நிலை இன்றளவும் தொடர்கிறது. எனவே இந்த கருத்தை மாற்றுவதற்கு நான் தானாகவே முன் வந்து என்னுடைய பிறந்த நாள், பண்டிகை நாட்கள், வருடத்தின் முதல்நாள், தேசிய ரத்த தான தினம் என பல முக்கிய தினங்களில் ரத்த தானத்தை கடந்த 25 ஆண்டு காலமாக செய்து வருகிறேன். மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலமாக மட்டுமே இனி மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என்ற மிகப்பெரிய அறிவியல் உண்மையை உணர்ந்து அனைவரும் விஞ்ஞான ரீதியான உலகத்தை நோக்கி பயணித்து ரத்ததானம் மட்டுமின்றி கண், உடல் உறுப்புக்கள் தானத்தை தாராளமாக வழங்க முன் வர வேண்டும்.

எதிர்காலத் திட்டம் என்ன?

டேபிள் டென்னிஸ் வீரனாக பல சாதனைகளை முறியடித்து இருக்கிறேன். என்னைப் போன்று மேலும் பலரை உருவாக்க சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் சார்பாக நடந்த பயிற்சியாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். எனவே, வங்கிப் பணியில் இருந்து இம்மாதம் விருப்ப ஓய்வு பெறுகிறேன். இந்த ஓய்வு காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி இளம் வீரர்களை உருவாக்கி இந்தியாவின் பெருமையை மேலும் பறைசாற்ற விரும்புகிறேன். ரத்ததானம் செய்ய வேண்டியதின் அவசியத்தை விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல. பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எத்திராஜனின் விழிப்புணர்வு மற்றும் பயிற்சியாளர் பணிகள் சிறக்க அனைவரும் வாழ்த்துவோம்.