சேலம், ஜுலை 20- மேட்டூர் அணை உபரி நீர் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு, விவசாயப் பணிகளுக்கென குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேட்டூர் அணையிலிருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலம் மாவட்டத்தில் 16,433 ஏக்கர் நிலமும், நாமக்கல் மாவட்டத்தில் 11,337 ஏக்கர் நிலமும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் நிலமும் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகின்றது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதைத் தொடர்ந்து, அணைக்கு வரும் 1,15,000 கன அடி நீரும் காவிரி ஆற்றின் வழியாக உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இதனால், மேட்டூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி வட்டங்களுக்குட்பட்ட காவிரி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சற்று மேடான பகுதிக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும் படியும், காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் தங்களது கால்நடைகள் மற்றும் உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளும் படியும், தெரிவித்தார்.