tamilnadu

ஈரானைத் தொடாதே... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

படையினர் இருக்கிறார்கள். உண்மையில் ஈரானை தனிமைப்படுத்த முயற்சித்த அமெரிக்கா, தற்போது இராக்கில் தானே தனிமைப்பட்டு நிற்கிறது.ஈரானின் மதத் தலைவரான அயத்துல்லா அலி கோமேனி, அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். சுலைமானியின் இறுதிநிகழ்ச்சி நடந்தவுடனே இராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஈரான் பதிலடியின் துவக்கமாகும்.

இந்த நிகழ்வுகளின் பின்னணியில் ஒட்டுமொத்த மேற்கு ஆசியாவும், வளைகுடா பிரதேசமும் பெரும் பதற்றத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்நிலையில் ஈரானை தங்களது பொது எதிரியாகக் கருதுகிற இஸ்ரேலும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவின் பின்னால் நின்றுகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இராக்கிலும் சிரியாவிலும் அமெரிக்கா மேற்கொண்ட தலையீடுகள், உண்மையில், இந்த நாடுகளில் ஈரானின் செல்வாக்கு வளர்வதற்கு உதவி செய்துள்ளது. லெபனானிலும் ஈரானின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தீமையின் அச்சு என்று அமெரிக்காவால் கூறப்பட்ட ஈரான் உள்ளிட்ட நாடுகள் தற்போது அமெரிக்காவை எதிர்க்கிற “எதிர்ப்பின் அச்சு” என்பதாக மாறியுள்ளன. இதில் இராக்கின் ஷியா பிரிவு போராளிக் குழுக்கள், சிரியா மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவையும் சேர்ந்து கொண்டுள்ளன. இத்தகைய பின்னணியில், ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் எந்தவொரு ஆக்கிரமிப்பும் இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் மிகக்கடுமையான முரண்பாட்டையும், மோதலையும் தீவிரப்படுத்தும். 

இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதலின் உடனடி விளைவுகள் கடுமையாக உள்ளன. ஏற்கெனவே எண்ணெய் விலைகள் கூர்மையான முறையில் அதிகரித்துள்ளன. பேரல் ஒன்றுக்கு 70 டாலராக எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிற இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மோசமான செய்தியாகும்.எனினும், சுலைமானி படுகொலை தொடர்பாக மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது, அமெரிக்காவை எந்தவிதத்திலும் கடிந்துகொள்ளக்கூடாது என்ற விதத்திலேயே, மிகவும் தவறான முறையில் அமைந்திருக்கிறது. இந்தப் படுகொலையை கண்டனம் செய்வதற்கு மோடி அரசு மறுத்துள்ளது. ஈரான் இராணுவத் தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்று அறிந்து கொண்டோம் என ஒரு வெற்று வாக்கியத்தை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. ஈரான் எண்ணெய்யை வாங்கக் கூடாது என்று கடந்தாண்டு முதல் தடுத்து நிறுத்திய அமெரிக்கத் தடைகளுக்கு மோடி அரசு ஏற்கெனவே தனது ஒத்துழைப்பை நல்கி வருகிறது. அமெரிக்காவுடனான இத்தகைய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, மோடி அரசு, சவூதி அரேபியாவுடனும் இஸ்ரேலுடனும் மிக நெருக்கமான உறவினை மேற்கொண்டிருக்கிறது. இப்படி செய்வதன் மூலம் மோடி அரசு இந்திய தேசத்தின் சொந்த நலன்களுக்கே தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது. 

மோடி அரசாங்கம், இந்தியாவின் தேசிய நலன்களே அனைத்தையும் விட பெரிது என்பதை கட்டாயம் மனதில் கொள்ள வேண்டும்; ஈரான் மீதான ஆக்கிரமிப்புக் கொள்கை மிகவும் தீங்கானது என்பதையும் இந்தியா ஒரு போதும் அதில் ஒரு பங்கேற்பாளராக இருக்காது என்பதையும் மிக நேரடியாகவும் தெளிவாகவும் அமெரிக்காவிடம் மோடி அரசு அறிவிக்க வேண்டும். 

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்,(ஜனவரி 8, 2020) 
தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

;