tamilnadu

img

பல்கலைக்கழக சுதந்திரத்தின் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது....

ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பான ஏபிவிபிமாணவர் அமைப்பு கொடுத்த புகார்- நிர்ப்பந்தத்தின் பேரில் எழுத்தாளர் அருந்ததிராய் எழுதிய ‘வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ என்கிற நூல் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனை கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இணைய வழியாக கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் வே.வசந்திதேவி, மக்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி, சு.வெங்கடேசன், ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.நாகராசன், இந்திய மாணவர் சங்க மாநிலச்செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கண்டனக் கூட்டத்தை அமைப்பின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைத்து நடத்தினார். கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது:

முனைவர் வே.வசந்திதேவி 
அருந்ததிராயின் புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து தன்னிச்சையாக நீக்கியது பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான, சமூகத்தின் மீதான, மாணவர்களின் சிந்திக்கும் உரிமையின் மீதான தாக்குதலாகும் இந்துத்துவச் சக்திகளின் தலையீடு கல்வித்துறையில் சமீபகாலமாக தொடர்ந்து நடக்கிறது. ஏபிவிபி என்கிற ஓர் அமைப்பு புகார் சொன்னவுடனே பாடத்திட்டத்தை துணைவேந்தர் தன்னிச்சையாக நீக்கியிருப்பது எவ்வகையிலும் ஏற்க முடியாதது. பல்கலைக்கழகங்கள் வேலைவாய்ப்புகளை மனதில் கொண்டு மட்டும் உருவாக்கப்படவில்லை. மாணவர்களின் அறிவுச்சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் பல்கலைக்கழகத்திற்கு இருக்கிறது. ஆனால் துணைவேந்தரின் செயல் அதற்கு செய்கிற துரோகம் ஆகும்.

நான் 1992 முதல் 98 வரை அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினேன். அப்போதும்கூட சிலகுறுக்கீடுகள் இருக்கத்தான் செய்தது. ஆனால் இப்போது இருப்பதைப் போல கல்வித் திட்டத்திற்குள் புகுந்து அதைமாற்றச் சொல்வது போன்ற குறுக்கீடுகள் அப்போது இல்லை. கல்வித் திட்டத்தில் ஒரு பாடத்தை சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் ஒரு நடைமுறை உள்ளது. ஆட்சிமன்றக் குழு, நிலைக்குழு, சிண்டிகேட் குழு ஆகியவை முடிவு செய்தால்தான் எதையும் செய்ய முடியும். ஆனால்இவை எதையும் கலந்து கொள்ளாமல் துணைவேந்தர் செயல்பட்டிருப்பது, ஒரு மதவாதக் கும்பல் சொன்னவுடனேயே பாடத்திட்டத்தை நீக்கி இருப்பது பல்கலைக்கழக அமைப்புக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவாலாகும். அறிவின் ஊற்றுக்கண்ணான பல்கலைக்கழகங்களின்மீது தாக்குதலை நடத்துவது சரியல்ல. இது எத்தனை பெரிய அவமானம் ... தலைகுனிவு? தமிழகத்தைப் பற்றிஉலகெங்கும் இருக்கும் கல்வியாளர்கள் என்ன நினைப்பார்கள்? ஒரு பல்கலைக்கழகம் ஒரு காவி கும்பலின் புகாருக்கு இப்படி அடிபணிந்து விடுவது சரியானதுதானா? அங்கு வேலை பார்க்கும் பேராசிரியர்களுக்கு இது அவமானம் இல்லையா? இது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல. அப்புறம் எதற்காக அதை நீக்க வேண்டும். ஒரு அற்புத இலக்கியத்தை படிக்கிற வாய்ப்பை மாணவர்கள் இழந்துவிடக் கூடாது. தடை செய்வதால் எந்த புத்தகத்தையும் சமூகத்திடமிருந்து விலக்கி வைத்துவிட முடியாது. அது பரவிக் கொண்டுதான் இருக்கும். பழங்குடிகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், இயற்கை வளங்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு உள்ளாவது, பழங்குடி மக்களை வேட்டையாடுவது எனத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அநியாயத்தை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது. இந்தத் தாக்குதல் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும். தமிழகம் ஒரு போதும் இதை அனுமதிக்கவே கூடாது. மாணவர், இளைஞர் இயக்கங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். 

கனிமொழி எம்.பி., 
நாட்டிலுள்ள மக்களோ, அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ, சிந்தனையாளர்களோ, சமூகச் செயல்பாட்டாளர்களோ சொல்லி அந்த புத்தகம் நீக்கப்படவில்லை. ஒரேஒரு மாணவர் அமைப்பு புகார் தெரிவித்ததை ஏற்று பல்கலைக்கழகம் எந்த நடைமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அருந்ததிராயின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கி இருப்பது ஏற்புடைய செயலல்ல. இப்புத்தகம் பள்ளி பாடப்புத்தகத்தில் வைக்கப்படவில்லை. முதுகலைப் படிப்பில்தான் வைக்கப்பட்டுள்ளது. முதுகலை படிக்கும் மாணவர்கள் எல்லா கருத்துக்களையும் தெரிந்துகொள்ளக் கூடியவர்கள். அந்த மாணவர்களிடையே ஒரு தெளிவு இருக்கும். எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதை மறுக்கவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். சிந்திக்கக்கூடிய வயதை அடைந்தவருக்கு அந்தப் பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்கி இருப்பது முறையல்ல. எதைப் படிக்க வேண்டும் .. எது சினிமா... எது கலை என்று எல்லாவற்றுக்கும் இவர்கள்தான் அனுமதி தர வேண்டுமா? மாணவர்களின் கேள்வி கேட்கும் சிந்தனையை தடை செய்வதுதான் இவர்களின் நோக்கம். அதற்காக ஜாதியையும் மதத்தையும் தூண்டிவிட்டு எந்த கருத்தையும் யாரும் சொல்லக்கூடாது, விவாதமே நடத்தக்கூடாது, அப்படி செய்தால் எங்கள் மனம் புண்பட்டுவிடும் எனத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் இந்தப் புத்தகத்தை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வைத்திருப்பது. எத்தனையோ சர்வாதிகாரிகள் பலபுத்தகங்களை தடை செய்திருக்கிறார்கள். ஆனால் அதனால் அந்த புத்தகங்களை தடுத்துவிட முடிந்ததில்லை. தமிழ்நாட்டில் கூட சமீபத்தில் அதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம் . சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக குரல்கொடுப்பவர்கள்,  அதற்காகப் போராடுபவர்கள், போராடும்மக்களின் குரலாக இருப்பவர்கள் ஆகியோரை தடுத்துநிறுத்திவிட வேண்டும் என அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக நாம் இருந்துவிட முடியாது. அவர்கள் உருவாக்க நினைக்கிற இந்தியாவை இந்து ராஷ்டிரத்தை உருவாக்கிட முடியும் என்று வெற்றியின் உச்சியில் நின்றுகொண்டு இப்பொழுது தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு ஒரு போர்க்களத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. இதில்  நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி முறியடிக்க வேண்டும். 

வீ.மாரியப்பன் 
நாட்டின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் இதுவரையிலும் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத ஏபிவிபி என்கின்ற காவி கும்பல் சொன்னதைக் கேட்டு தான்தோன்றித்தனமாக துணைவேந்தர் இந்தச்செயலில் இறங்கியுள்ளார். இந்துத்துவ கும்பல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு கல்வித் துறையின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு கேரளாவில்கூட இதுபோன்ற ஒரு பிரச்சனையைக் கிளப்பினார்கள். ஆனால் அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு அவர்களின் கோரிக்கை ஏற்காமல் உறுதியாக இருந்தது. அத்தகைய உறுதி தமிழகத்தில் இருக்கிற எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இல்லை. 10 பேர் கூட இல்லாத ஒரு அமைப்பு கொடுத்த மனுவுக்காக பயப்படுகிற அரசாக இந்த அரசு இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் தனித்தன்மையை இழக்க அனுமதிக்கக்கூடாது. தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டும் . இந்துத்துவ கும்பலின் இதுபோன்ற செயலுக்கு பணிந்து போவது ஒரு அறிவார்ந்த சமூகத்திற்கு ஆபத்தானதாகும். தமிழக அரசு உடனே மீண்டும் பாடத்திட்டத்தில் அருந்ததி ராயின் புத்தகத்தை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 பேராசிரியர் நாகராஜன் 
பல்கலைக்கழகங்களுக்கு என்று ஜனநாயகத்தன்மை உள்ளது. அதனை காப்பாற்ற வேண்டும். பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரையில் எல்லா முடிவுகளும் ஆட்சிமன்ற குழு, நிலைக்குழு சிண்டிகேட் என மூன்றும் சேர்ந்துதான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் அத்தகைய நடைமுறை இந்த விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அது ஒரு தேச விரோத நூல் என்றால் அரசாங்கமே தடை செய்யலாமே? ஆனால் ஒரு துணைவேந்தருக்கு பாடத்திட்டத்திலிருந்து ஒன்றை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த நடைமுறை நிச்சயம் தடுத்துநிறுத்தப்பட வேண்டும். இன்று வரையிலும் துணைவேந்தரின் முடிவுக்கு சிண்டிகேட் ஒப்புதல் தரவில்லை. எனவே நமது போராட்டத்தின் மூலம் துணைவேந்தரின் இந்த உத்தரவை தடுத்து நிறுத்த முடியும். நமது பாடத்திட்டத்தின் மீது கை வைக்கும் இந்துத்துவ கும்பலின் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். துணைவேந்தர் தாமாகவே ஒரு குழுவை போட்டு முடிவை எடுத்து அமல்படுத்திஇருப்பது பல்கலைக்கழக ஜனநாயகத்தின் குரல்வளையைநெறிக்கும் செயலாகும். அரசு தலையிட்டு மீண்டும் பாடத்திதிட்டத்தில் அந்நூலை சேர்க்கவேண்டும். 

பத்திரிகையாளர் ஆர்.விஜயசங்கர் 
இது நாம் தொடர்ந்து போராட வேண்டிய ஒரு காலமாக இருக்கிறது. எதிர் கருத்துக்களை, கேள்வி கேட்பதை காலங்காலமாக எதிர்க்கும் ஒரு கூட்டத்திடம் நாடு இப்போது சிக்கிக் கொண்டிருக்கிறது. எதிர் கருத்துக்கள் சொல்வதையே கிரிமினல் நடவடிக்கையாக பார்க்கிற கூட்டம் இது. இந்தக் கும்பலிடம் மதம் மட்டும்தான் இருக்கிறது. அதன்மீது கேள்வி கேட்டால் கூட பயப்படுகிறார்கள். ஒரு மூடர் கூட்டத்திடம் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும்.கல்வி நிலையங்களில் பேச வருபவர்கள் யார் என்பதைக்கூட இவர்கள் கண்காணிக்கிறார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திப்பதோ, அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்பதோ இவர்களுக்கு ஏற்புடைய செயலல்ல. நாட்டின் ஒட்டுமொத்த அறிவுத்திறனையும் சுருக்கிவிடும் ஆபத்தை இந்துத்துவ கும்பல் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. சிந்திக்க முடியாத, கேள்வி கேட்க முடியாத, அறிவியல் சிந்தனையற்ற, தங்களின் இந்து ராஷ்டிராவுககு தேவையானஒரு தலைமுறையை உருவாக்குவதுதான் இவர்களின் நோக்கம். இதனால்தான் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் மூக்கை நுழைக்கிறது. தமிழகத்திற்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது . அந்த எதிர்ப்புணர்வு பாரம்பரியத்தை முன்னெடுத்து இவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். 

 சு.வெங்கடேசன்  எம்.பி 
இந்துத்துவ கும்பல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் கல்வித்துறைக்குள் ஊடாட்டங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையில் அது தொடர்ந்து தலையிடுகிறது. கல்வித்துறை இன்றைக்கு மிகக்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவை, நிலைக்குழுவை, பாடத்திட்ட குழுவைக் கூட்டாமல், அவர்களின் கருத்துக்கள் எதையும் கேட்காமல் தன்னிச்சையாக துணைவேந்தர் இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால் இவ்வளவு பெரிய அழுத்தம் அவருக்கு எங்கிருந்து வருகிறது? தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு துணைவேந்தரின் முடிவை ரத்து செய்து மீண்டும் நீக்கப்பட்ட பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

மதுக்கூர் ராமலிங்கம் 
பல்கலைக்கழகத்தில் என்ன பாடம் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் அதிகாரத்தை ஏபிவிபியிடம் தமிழக அரசு கொடுத்துவிட்டதா? மாணவர்களுக்கு அனைத்துசிந்தனைகளையும் சொல்லித்தர வேண்டும் . இந்த புத்தகம் இயற்கை வளங்களை எப்படி எல்லாம்  கொள்ளையடிக்கிறார்கள் என்பதை சொல்லுகிறது . எனவே அதனை தடுக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். கல்வியை காவிமயமாக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இந்த புத்தகத்திற்கு மாணவர்களோ, பேராசிரியர்களோ எதிர்ப்பு தெரிவிக்காத போது அதை நீக்கியது கண்டிக்கத்தக்கது. இது கல்வி நிலைய ஜனநாயகத்தை பாதிக்கும். தமிழக அரசு உடனே இதில் தலையிட்டு மீண்டும் அந்த புத்தகத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 

ஆதவன் தீட்சண்யா 
2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த புத்தகம் பாடத்திட்டத்தில் இருக்கிறது என்பது இப்போதுதான் அந்த துணைவேந்தருக்கு தெரிந்திருக்கிறது. தனக்கு கீழ் இயங்கும் பல்கலைக்கழகத்தில் என்ன பாடம் இருக்கிறது என்றுகூட தெரிந்து கொள்ளாத லட்சணத்தில்தான் துணைவேந்தர் இருக்கிறார் என்பது கொடுமையானது. இப்போது திடீரென்று அறிவிப்பின் மூலம் துணைவேந்தர் இதை நீக்கி இருந்தாலும் இது ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு ஏற்பாடுதான். இதுபற்றி ஏபிவிபி அமைப்பு ஒரு புகார் கொடுத்து அந்தச் செய்தி சில தினங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஆர்கனைசர் பத்திரிகையில் வெளிவந்த பிறகுதான் இந்த நடவடிக்கை நடந்து இருக்கிறது. ஏபிவிபிஅமைப்பு ஏற்கனவே வெண்டி டோனிகரின் ஒரு புத்தகத்தையும் இப்படி தடை செய்ய போராடினார்கள். அறிவியல்பூர்வ விஷயங்களை நீக்குவது, தடுப்பது என தொடர்ந்துஇவர்கள் கல்வித்துறைக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இது. பாடத்திட்டத்தில் அந்த நூலை மீண்டும் சேர்க்கும் வகையில் தமுஎகச தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு அவர்கள் பேசினர். பின்னர் அருந்ததிராய் நூலை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வலியுறுத்தும் தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா முன்மொழிந்து பேசினார்.400க்கும் மேற்பட்டோர் கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டனர். நாறும்பூநாதன் நன்றி தெரிவித்தார். 

தொகுப்பு:  கருப்பு கருணா, தமுஎகச துணைப் பொதுச் செயலாளர்

;