அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டிருப்பது அரசமைப்புச்சட்டத்தை மீறிய செயலாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:
“அரசாங்கமே ஆளுநர், உத்தரப்பிரதேச முதல்வர் முன்னிலையில் கோவில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருப்பது இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சங்களை மறுதலித்துள்ள நடவடிக்கையாகும்.
மேலும் இது இப்பணியை ஓர் அறக்கட்டளை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீறிய செயலுமாகும்.
பூமி பூஜை நடத்தியிருப்பது, பாபர் மசூதி இடிப்பை பின்தேதியிட்டு சட்டபூர்வமாக்கியிருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம், மிக மோசமான சட்டமீறல் என்று வர்ணித்திருப்பதுடன் இதனைச் செய்தவர்கள் தண்டடைக்கு உரியவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. அவ்வாறு எவ்விதமான தண்டனையும் வழங்கப்படுவதற்கு முன்பே கட்டுமானம் தொடங்கிவிட்டது.
பூமி பூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை, ஒருதலைப்பட்சமாக அரசியல் நோக்கங்களுக்காக அப்பட்டமாகப் பயன்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையாகும். இது அரசமைப்புச்சட்டத்தை கூச்சநாச்சமின்றி மீறிய செயலுமாகும்.
பூமி பூஜை நிகழ்வு தொடர்பாக பிரதமரின் அயோத்தி நிகழ்வு அரசின் தூர்தர்ஷன் மூலமாக உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இது அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் உறுதிசெய்கிறது.
இந்த நிகழ்வு, மத்திய உள்துறை அமைச்சகம் கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வெளியிட்டுள்ள விதிமுறைகளையும் மீறிய செயலாகும். உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளில் மதஞ்சார்ந்த கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
து. ராஜா
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இது தொடர்பாக, “பூமி பூஜை நிகழ்வும் மற்றும் அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் பங்கேற்றிருப்பதும் இந்த அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.
(ந.நி.)