ஹத்ராஸ் என்னுமிடத்தைச் சேர்ந்த மனீஷா என்னும் இளம்பெண், மிகவும் கொடூரமான முறையில் பாலியல் கூட்டுவன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து சுயேச்சையான நீதி விசாரணை நடத்தப்பட்டு, கயவர்கள் அடையாளம் காணப்பட்டு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குழுவைச் சேர்ந்த சீத்தாராம் யெச்சூரி, து.ராஜா, பிருந்தாகாரத், அமர்ஜீத் கவுர், ஹீராலால் யாதவ்,
கிரிஷ் ஷர்மா, முதலானவர்கள், ஹத்ராஸ் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சென்று சந்தித்தனர். அதன்பின்னர் சீத்தாராம் யெச்சூரி ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குழுவினராகிய நாங்கள் இப்போது இங்கே வந்திருக்கிறோம். மிகவும் கொடூரமான முறையில் பாலியல் கூட்டு வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டு, அன்றிரவே எரிக்கப்பட்டுவிட்ட பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்தோம். உண்மையில் இப்போது நாங்கள் அவர்களின் வீட்டில்தான் இருக்கிறோம். இவை அனைத்தும் 21ஆவது நூற்றாண்டில் கேள்விப்படாத விஷயமாகும். இவை அனைத்தும் நம் அரசமைப்புச்சட்டம் நமக்கு அளித்துள்ள உத்தரவாதங்களை அப்பட்டமாக மீறிய ஒன்றாகும்.
இக்கொடுமைக்கு எதிராக அவருடைய குடும்பத்தினருக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கவே நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். மாறாக அவர்களுக்கு அனுதாபம் கூறுவதற்காக வரவில்லை. நாங்கள் அவர்களிடம், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடுவோம் என்று தெரிவித்திருக்கிறோம். உங்கள் மகளுக்கு நீதி கிடைக்கும் வரை, அரசமைப்புச்சட்டத்திற்கு நீதி கிடைக்கும்வரை நாங்கள் போராடுவோம் என்று தெரிவித்திருக்கிறோம்.
எனவேதான் இந்தக் கொடூர சம்பவம் குறித்து, சுயேச்சையான நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் கயவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும், அவர்களைச் சட்டத்தின்கீழ் தண்டித்திட வேண்டும் என்றும் கோருகிறோம்.
அரசுத்தரப்பில் இப்போது புதிய வாதங்கள் மிதக்கவிடப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் வர்க்க மோதல்களாம், அந்நியநாட்டு சதி இதன் பின்னே இருக்கிறதாம். அவற்றையும் விசாரியுங்கள். ஆனால் இவை எதுவும் நீதியைத் தாமதப்படுத்துவதற்கு, நீதியை மறுப்பதற்கு, ஒரு சாக்குப்போக்காக அனுமதிக்க முடியாது. முன்னுரிமை என்பது நீதி வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும்.
இந்தப் பிரச்சனை இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்திற்குள்ளான ஒன்று அல்ல. இந்தப் பிரச்சனை இப்போது நாட்டிலுள்ள அனைவரும் கவலைப்படக்கூடிய ஒன்றாக மாறியுள்ள பிரச்சனையாகும். எனவே இது ஓர் அகில இந்தியப் பிரச்சனையாகும்.
எனவே உத்தரப்பிரதேச மாநில அரசு இதன் மீதான கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது. சுயேச்சையான நீதித்துறை விசாரணையை மேற்கொண்டு, கயவர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.