tamilnadu

img

காஷ்மீரில் சமூக வலைத்தள  கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

காஷ்மீரில் சமூக வலைதள கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஜம்மு காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ , கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி மோடி அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, காஷ்மீரில் மக்கள்  நடமாட்டத்துக்கும் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி  உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டுள்ளனர். 
பிற மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள் ஜம்மு காஷ்மீர் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டைம்ஸ் பத்திரிகை ஆசிரியர் அனுராதா பாசின் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கூறுகையில், “இணையம் என்பது கருத்துரிமையின் ஒரு பகுதி. தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் காக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
இணையதளத்தின் மூலம் கருத்துக்கள் தெரிவிப்பது அடிப்படை உரிமை.  இணையதள கட்டுப்பாடுகள் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். காஷ்மீரில் தகவல் தொடர்புக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஒரு வாரத்திற்குள் மீளாய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.