tamilnadu

img

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிஎஸ்பி கட்சியின் தலைவர் மாயாவதி மீதான தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது. மேலும் ’இப்போது அதிகாரம் கிடைத்துவிட்டதா’ என்று தேர்தல் ஆணையத்திடம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கேள்வி எழுப்பினார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் மத, சாதி உணர்வுகளை தூண்டும் விதமாக பிரச்சாரத்தில் பேசியதாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதை அடுத்து, “2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல்வாதிகள் சாதி, மதரீதியாக மக்களிடத்தில் வெறுப்புணர்வையும், பிளவுபடுத்தும் வகையில் பேசுவதும் அதிகரித்துள்ளது.

இதைத் தடுக்க அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும், கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராகவும் ஊடகங்களில் பேசினாலும், சமூக ஊடகங்களில் கருத்துகள் தெரிவித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் சர்மா, "தேர்தல் ஆணையத்துக்கு வேறு எந்த அதிகாரமும் இல்லை. வெறுப்புணர்வோடு பேசும் வேட்பாளரை தகுதி நீக்கம் கூட செய்ய முடியாது. இதுதான் எங்களின் அதிகாரம்" என்று தெரிவித்தார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், ”அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒரு பல் இல்லாத அமைப்பு, மதரீதியாக, சாதிரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை என்று கூறுகிறீர்கள். அடுத்த 24 மணி நேரத்துக்குள் வெறுப்புணர்வு பேச்சைப் பேசிய வேட்பாளர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நடத்தை விதிமுறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று காலை மாயாவதி, ஆதித்யநாத், ஆசம் கான் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை விதித்து எடுத்துள்ள நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி கோகய், "தேர்தல் ஆணையம் தன்னுடைய அதிகாரங்கள் என்ன என்று தெரிந்துகொண்டு விழித்துக் கொண்டுவிட்டது. தேர்தல் ஆணையம் சரியான, தகுந்த நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆதலால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை" எனத் தெரிவித்தார்.


;