சென்னை, ஆக.7- கங்கை கொண்ட சோழபுரம் கோவிலுக்கு அருகே 4 வழிச் சாலை எதிர்ப்பை பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் அருகில் திருச்சி சிதம்ப ரம் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நான்கு வழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க கோரி கங்கை கொண்ட சோழபுரம் வளர்ச்சிக் குழும அறக்கட்டளை தலைவர் கோமகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு புதனன்று (ஆக.7) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தொல்லியல் துறையாலும், யுனெஸ்கோ அமைப்பாலும் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் 4 வழிச்சாலை அமைக்கப்படுவதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து காரணமாக கோவிலுக்கு பாதிப்பு ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த சாலையை அமைக்க தொல்லியல் துறையி டம் தடையில்லா சான்று பெறப்பட்ட தாக தெரியவில்லை. இந்த திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு பரிசீலிக்கப்பட வில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்ட னர்.