tamilnadu

img

ஊரடங்கில் குடும்ப வன்முறையால் ஆயிரம் பெண்கள் படுகொலை?

மெக்சிகோ சிட்டி,மே 6- கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மெக்சிகோ நாட்டில் கடந்த 3 மாதங்களில் குடும்ப வன்முறையில் சுமார் ஆயிரம் பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெக்சிகோ நாட்டில்  மார்ச் மாதம் இரண்டாவது வாரத்துக்கு பிறகு கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி யது. இதனைத்தொடர்ந்து அந்நாட்டின் ஜனாதிபதிலோபஸ் ஒப்ரடார் ஊரடங்கை அறிவித்தார்.  இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஊரடங்கால் மக்கள் வெளியே செல்ல முடியாததால் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இது, பல்வேறு வழிகளில் குடும்ப வன்முறையை அதிகரிக்க செய்துள்ளது. கணவன் மனைவி, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோர் தினமும் சண்டை பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற மோதல்களால் கடந்த 3 மாதங்களில் மட்டும் சுமார் ஆயிரம் பெண்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் மெக்சிகோவில் 988 குடும்பத் தலைவிகள், இளம்பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மெக்சிகோ நாட்டின் மகளிர் அமைப்புகள், சமூக தொண்டு நிறுவனங்கள் தெரிவிக்கையில், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளும், கொலைக்குற்றங்களும் நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க ஜனாதிபதி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆனால் மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடார் இதை மறுத்துள்ளார். “பெண்களுக்கெதிரான குற்றங்கள் எப்போதும் போல நடந்தவாறுதான் உள்ளது. ஊரடங்கு காலத்தில்தான் பெண்கள் அதிகமாக படுகொலை செய்யப்படு வதாக கூறுவது தவறு” என்றார்.

;