ஈரோடு, ஜூன் 4-நம்பியூர் அருகே கெட்டிச்செவியூர் பகுதியில் கோழிப்பண்ணைஅமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், கெட்டிச்செவியூர் ஊராட்சிக்குட்பட்ட அரசன் கோட்டை புதூர் பகுதியில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான பணிகள் நடந்து வந்துள்ளது. சுமார் எட்டு ஏக்கர் பரப்பளவில்,லட்சத்திற்கும் மேலான கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டகோழி பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்த கோழிப்பண்ணை அமைந்தால் சுற்றுவட்டாரத்தில் 5 கிராமத்திற்கு உட்பட்ட 72 ஊர்களில் சுகாதார சீர்கேடு, துர்நாற்றம் ஏற்படும். இதனால் இப்பகுதியில் கோழிப்பண்ணை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கோழிப் பண்ணை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாலை 3 மணி அளவில் சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் வட்டாட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து மேற்கொண்டு பண்ணை அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார். அதனடிப்படையில் காலை 7 மணி முதல் நடைபெற்ற போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.