tamilnadu

பொள்ளாச்சி போல ஈரோட்டிலும் கொடூர சம்பவம் கல்லூரி மாணவிகளை ஆபாச படமெடுத்து பாலியல் வன்கொடுமை- ஒருவர் கைது

ஈரோடு, ஏப். 28-பொள்ளாச்சி சம்பவத்தைப்போல் ஈரோட்டிலும் இளம் பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு அருகே திண்டலில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த 17 வயதுடைய மாணவிக்கு, ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி இவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் பரிசு கொடுப்பதாக, மேற்குறிப்பிட்ட மாணவியை ஏமாற்றி ஏற்காடு மலைக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு அம்மாணவியை மிரட்டி ஆபாச படங்களை எடுத்ததுடன், அதைக் காட்டி மிரட்டி பலமுறை பாலியல் வல்லுறவு செய்துள்ளார். அதனையும் வீடியோவாக எடுத்து, அம்மாணவியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால், அம்மாணவி இருமுறை கர்ப்பமடைந்த நிலையில், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த பெண்ணின் கைபேசியில் இருந்து அவருடன் பயிலும் சக மாணவிகளின் எண்களையும் மிரட்டி வாங்கி, அவர்களையும் ஆபாச படமெடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இச்சூழலில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று மேற்குறிப்பிட்ட மாணவியை மீண்டும் மிரட்டி ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார். அப்போது அம்மாணவியை பாலியல் வல்லுறவு செய்ததுடன், அவருடைய நண்பர்களையும் வரவழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிவந்த அம்மாணவி ஈரோடு அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில், காவல்துறையினர் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல், ஆபாச படம் எடுத்து மிரட்டல், கட்டாய கருக்கலைப்பு செய்தல் என நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சனியன்று ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

இதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்துள்ளனர்.செல்போனில் 600 பெண்களின் எண்கள்இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணனிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ராதாகிருஷ்ணனிடமிருந்து கைப்பற்றிய செல்போனை ஆய்வு செய்தபோது, அதில் 600க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் சேமித்து வைத்து இருந்ததாகவும், அதில் பெரும்பாலானவை பெண்களுடையவை என்பதும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இந்நபரால் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.யார் இந்த ராதாகிருஷ்ணன்?ஈரோடு வில்லரசம்பட்டி சேர்ந்த ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமாக வில்லரசம்பட்டி உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் காலியிடங்கள் உள்ளன. மேலும், இவருக்குச் சொந்தமான கட்டிடங்களில் அரசு மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவை இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாதந்தோறும் கிடைக்கும் வாடகை பணத்தை கொண்டு ராதாகிருஷ்ணன் ஆடம்பரமாக செலவழித்து வந்துள்ளார். குறிப்பாக, பண ஆசையை காட்டியும், மிரட்டியும் பல பெண்களை அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி யிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெண்கள் பலமுறை புகார்கள் அளித்தும், தனது பண செல்வாக்கு மற்றும் அரசியல் கட்சியினரின் பல முக்கிய பிரமுகர்களின் தலையீடு காரணமாக வழக்கிலிருந்து தப்பி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. “ஈரோட்டில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ராதாகிருஷ்ணன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்; அவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, ராதாகிருஷ்ணன் இவ்வாறு செய்வதற்கு யார் யார் உதவினார்கள் என கண்டறிய முழுமையாக விசாரணை குழு அமைக்க வேண்டும்; மேலும், இந்த பாலியல் சீண்டல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தெரிவித்தார்.

;