ஈரோடு:
தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து நவம்பர்12 ஆம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பள்ளிகளைத் திறப்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. 45 சதவீத பெற்றோர்கள் மட்டுமே இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பள்ளிகளைத் திறப்பது குறித்து விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பிறகு, நவம்பர் 12-ஆம் தேதி இறுதி முடிவு அறிவிக்கப்படும். இடையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டியபணிகள் உரிய வகையில் முறையாக நடைபெறும்.பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவசச் சீருடைகள், புத்தகங்கள் மற்றும் காலணிகள் தயார் நிலையில் உள்ளன. 16,300 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்து நீட் தேர்வுக்காகப் பயிற்சி பெற்று வருகின்றனர். நீட் தேர்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு.இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.