இலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் இன்று மீண்டும் குண்டு வெடிப்பு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று 8 இடங்களில் தொடர்குண்டு வெடிப்பு நடந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் சுமார் 359 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் மேலும் சில இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று, காலை கொழும்பு நகரிலிருந்து, கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் பின் பகுதியில், உள்ள காலி இடத்தில் குப்பைகள் கொட்டும் இடத்தில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதி என்பதால், இந்த குண்டு வெடிப்பில், யாருக்கும் காயம் இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.