1980ல் இடுவாய் கிராமத்தில் வாலிபர் சங்க கிளை துவங்கப்பட்டது. குடிநீர் பிரச்சனைக்காக களத்தில் போராடுவது, நிதி சேகரித்து லாரிகளில் தண்ணீர் கொடுப்பது, இரவுப் பாட சாலை என இடுவாய் கிராமத்தில் வாலிபர் சங்கத்தின் பணிகள் சிறப்பாக நடைபெற்றது. தோழர்.இரத்தினசாமி 1982-ல் வாலிபர் சங்கத்தின் இடுவாய் கிளையின் செயலாளராகவும் பின்னர் ஒன்று பட்ட திருப்பூர் தாலுகா பொருளாளராகவும் பணியாற்றினார். பொதுமக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஊருக்கு நடுவே இருக்கும் சாராயக் கடை அகற்றியது, ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மட்டுமே குடிநீர் பைப் இருந்தது என்ற நிலையை மாற்றி அனைத்து மக்களுக்கும் அந்த வசதியை ஏற்படுத்தியது வாலிபர் சங்கம். தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த போராட்டம் என இடையறாது இயங்கியது வாலிபர் சங்க கிளை. இதில் முன்னணித் தலை வராக தோழர் இரத்தினசாமி நின்றார். இப்படி 4 ஆண்டுகள் கழித்து 1986 ல் உள்ளாட்சி மன்ற வார்டு உறுப்பினராக போட்டியிட இயக்கம் வழிகாட்டியது. குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போகிறார். “நாங்கள் மக்களுக்காகப் போராடுகிறோம், இந்த பொறுப்பு கிடைத்திருந்தால் அதைப் பயன்படுத்தியிருப்போம்” என சொல்லிக்கொண்டே தோல்வி குறித்த எந்த வித அவ நம்பிக்கையும் இல்லாமல் மக்களை நேசத்துடன் அணுகியவர்.
1996 – ல் 781 வாக்குகள் பெற்றும் 2001 – ல் 1532 வாக்குகள் பெற்றும் இரண்டு முறை இடுவாய் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் தோழர் இரத்தினசாமி. இடுவாய் ஊராட்சியில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து வெளியே விற்பனை செய்வதைத் தடுத்து விவ சாயத்தைப் பாதுகாத்தார். புறம்போக்கு நிலத்தை சாதி ஆதிக்க வாதிகள் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர். அதைக் கைப்பற்றி 1200 தலித் குடும்பங்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்து பட்டா வாங்கிக் கொடுத்தார். மகாகவி பாரதியார் மீது கொண்ட பற்றால் அப்பகுதிக்கு பாரதிபுரம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். இதே கால கட்டத்தில் தாழ்த்தப்பட்ட பகுதி மக்கள் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்பை முழுமையாக செய்து கொடுத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை வைத்துப் போராடுகின்ற இடத்தில் இருந்த தோழர் இரத்தினசாமி தற்போது நிறைவேற்றுகின்ற இடத்தில் செவ்வனே செய்து முடித்தார்.
தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தொகுப்பு வீடுகள் கடந்த காலங்களில் இருந்த பஞ்சாயத்து தலைவர்களால் மறுக்கப்பட்டது. தோழர் இரத்தினசாமி தொகுப்பு வீடுகளுக்கான நிதியை வீடற்ற தலித் மக்களுக்கு ஒதுக்கி வீடு கட்டிக் கொடுத்தார். ரேசன் கடை, கிராம நிர்வாக அலுவலகம் கட்டிக் கொடுத்தார். பழுதடைந்து கிடந்த இடுவாய் ஊராட்சி நடுநிலைப்பள்ளிக்குச் சுற்றுச் சுவர் எழுப்பத் திட்டமிட்டார். ஆனால் பள்ளியைச் சுற்றி யுள்ள பகுதியை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதை மீட்டு பள்ளி வளர்ச்சிக்குழு ஒன்றை உருவாக்கி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் காட்டினார்.
முதல்முறை தோழர் இரத்தினசாமியின் மீதான தாக்குதல் இப்படித்தான் துவங்கியது. இது குறித்து இவரது சகோதரரும் வாலிபர் சங்க முன்னாள் தாலுகா குழு உறுப்பினருமான தோழர் கருப்பசாமி விவரிக்கிறார். “அண்ணன் தொடர்ந்து ஹரிஜன் மக்களுக்கு சேவை செய்து வந்தார். அது உள்ளூரில் இருக்கின்ற மற்றவர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. இதே போன்று இரவு நேரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கணக்கு விபரங்களை எழுதிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மொபெட்டை நிறுத்தியுள்ளனர். ஒருவன் வண்டி அருகே நின்று கொண்டு மற்றொருவன் உள்ளே வந்து வண்டி ரிப்பேர் ஆகி விட்டது. ஸ்க்ரு ட்ரைவ் இருந்தால் கொடுங்கள் என கேட்டான். அண்ணனும் அலுவலகத்தில் தேடிப் பார்த்துவிட்டு இல்லை என்று கூறி விட்டு சேரில் அமர்ந்து எழுதத் தொடங்கி விட்டார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த நபர் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பி யால் ஓங்கி தலையில் அடித்துள்ளார். நிலைகுலைந்த அண்ணண் கண்ணில் பொறி சுற்றுவது போல் கண்கள் கலங்கி கீழே விழுந்துள்ளார். கடுமையாக அடித்துத் துவைத்துள்ளனர். பிறகு இறந்துவிட்டார் என எண்ணி அவரது கை கால்களை கட்டி அருகில் உள்ள சோளக் காட்டிற்குள் தூக்கி எறிந்துள்ளனர். அடுத்த நாள் காலையில் சோளக்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த விவசாய தொழிலாளி முருகன் என்பவர் பார்த்து ஊருக்குள் வந்து சொல்லி நாங்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றோம். மக்கள் மீதும் இயக்கத்தின் மீதும் தீராத பற்றுக் கொண்டவர் என்பதை அன்றுதான் நாங்கள் அறிந்தோம். தங்கள் குடும்பத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி விட்டால் அந்தக் குடும்பம் எவ்வளவு சோகத்தில் மூழ்குமோ அவ்வளவு துக்கத்தில் எங்கள் பகுதி மக்கள் மருத்துவ மனையில் கூடியிருந்தனர். அவர் மீண்டு வந்தார். எந்தவித பாதிப்பு களும் அவரின் சேவையைத் தடுக்கவில்லை. வழக்கம் போல் தனது பணிகளை செய்து வந்தார். ஆனால் இனி அண்ணன் தனியாகச் செல்லக்கூடாது என இயக்கத் தோழர்கள் வழிகாட்டினர். அது முதல் எங்கு சென்றாலும் தோழர்கள் உடன் சென்றனர்.”
நான்கு வருடம் கழித்து கோயம்புத்தூர் வரைக்கும் ஊருக்கான லைட் பிரச்சனை சம்மந்தமாக கலெக்டரைச் சந்திக்கச் சென்றார். அன்று தோழர்கள் அவருடன் செல்ல முடியவில்லை. அன்று (2002- மார்ச்-12) நள்ளிரவு கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டி, கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். ‘இவர் செய்த தவறுகள்’ என்று எட்டு காரணங்களை ஒரு வெள்ளைத்தாளில் எழுதிய பாலித்தீன் பையில் போட்டு அவரின் கழுத்தில் தொங்கவிட்டுச் சென்றார்கள் கயவர்கள்.
1. ஆக்கிரமிப்பை அகற்றச் செய்த அராஜகம்
2. தலித் மக்களுக்கு சப்போர்ட் செய்தது
3. அன்று சாகாமல் தப்பித்தது
4. கிறிஸ்தவர்களுக்கு சப்போர்ட் செய்தது
5. கவுண்டர்களை மதிக்காதது
6. இந்துக்களுக்கு எதிராய் இருந்தது
7. மீண்டும் ஜெயித்தது
8. கம்யூனிஸ்டாய் இருப்பது
தோழர் இரத்தினசாமியின் குடும்பம் துவண்டு விடவில்லை. அவரது குடும்பம் இன்றைக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் முழு ஆதரவளித்து வருகிறது.
பெரணமல்லூர் சேகரன்
இடுவாய் ரத்தினசாமி நினைவுநாள் (மார்ச் 13)