உலகின் எம்மொழியிலும் காணாத தனிச்சிறப்பு தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. இலக்கிய இலக்கண வளம் பெற்ற உலகின் ஒரே மொழி தமிழ் தான். அப்படிப்பட்ட இலக்கிய, இலக்கணத்தை நம் திரைப்படங்களில் எவ்வாறு எளிதாக கையாண்டுள்ளனர் என்பதைப் பற்றி காண்போம். முதலில் திருக்குறளைக் கொண்டு திரைப்படப்பாடல்கள் எவ்வாறு வெளிவந்துள்ளன.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
(இன்பத்துப்பால் - குறிப்பறிதல் - 1094)
நான் அவளைப் பார்க்கும் போது அவள் கீழே குனிந்து தரையைப் பார்ப்பாள். நான் பார்க்காதபோது அவள் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்வாள்.
இதையே கவிஞர் கண்ணதாசன் “வாழ்க்கைப்படகு” திரைப்படத்தில்,
உன்னை நான்பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே
நேரிலே பார்த்தால் என்ன?
நிலவென்ன தேய்ந்தா போகும்
புன்னைகை புரிந்தால் என்ன?
பூமுகம் சிவந்தா போகும்
என மிக அழகாக எளிய வடிவிலே கையாண்டுள்ளார்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்
(இன்பத்துப்பால் - புணர்ச்சிவிதும்பல் - 1289)
இதனையே நமது பட்டுகோட்டையார் “நாடோடி மன்னன்” திரைப்படத்தில் குறளின் முதல் அடியினை கையாண்டு,
கொஞ்சிப் பேசும் கிளியே! நல்
இன்பம் தரும் ஜோதியே
மானே! மலரினும் மெல்லியது காதலே!
மகிழ்வோம் நாமே! புதுமை வாழ்விலே!
என எழுதியுள்ளார்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
(நலம் புனைந்துரைத்தல் - 1118)
சந்திரனே! இம்மாதரின் முகம் போல ஒளிவீச உன்னால் முடியுமானால் நீயும் என் அன்பிற்குப் பாத்திரமாவாய். நீ வாழ்வாயாக. இந்தக் குறளின் கருத்தை அப்படியே எடுத்து “தெய்வத்தாய்” திரைப்படத்தில்,
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை -
என்றார் கண்ணதாசன்
மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண்
பலர்காணும் பூஒக்கும்
என்று நெஞ்சமே! நாம் காணும் மலர்கள் எல்லாம் இவள் கண்களோ ஒத்திருக்கின்றன என்பதால் அம்மலர்களைக்கண்டு நீ தவறாக மயங்குகின்றாய். “அவள் கண்ணைப் பார்த்து மலரைப்பார்த்தேன் மலரில் ஒளியில்லை” என அடுத்த வரியையும் தொடர்ந்தார்.
மேலும்,
வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை; சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து (காதல் சிறப்புரைத்தல் 1124) இந்த ஆயிழையாள் (ஆராய்ந்தெடுத்த அணிகளை அணிந்தவள்) என்னுடன் இருக்கும்போது என் உயிர்க்கு வாழ்வைத் தருகின்றாள். நீங்கும்போது அவ்வுயிர்க்கு சாவையே தருகின்றாள்.
இதையே அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை என்று பாடினார் கண்ணதாசன். மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வான்முகத்தைப் பங்கயமென்றெண்ணிப்படி வண்டைச் செங்கையால் காத்தாளக் கைமலரைக் காந்தளெனப் பாய்தலுமே வேர்தனைக் காணென்றான் வேந்து (நளவெண்பா - 184)
மலர்கொய்யச் சென்ற மங்கை ஒருத்தியின் அழகு முகத்தை தாமரை மலரென்று எண்ணி வண்டுகள் வட்டமிட அவற்றைத் துரத்தும் நோகோடு, தன் அழகிய கரத்தை முகத்தருகே கொண்டுவர விரல்களை காந்தள் மலரென்று நினைத்த வண்டுகள் இப்போது விரல்களை நோக்கிப்பாய செய்வதறியாது அப்பெண் பயத்தில் வேர்த்து நின்றாளாம். இந்த உவமையின் ஒருபாதி “இரு வல்லவர்கள்” திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது.
பொன் வண்டொன்று மலரென்று
முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே
மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி
மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம்
உண்மைகூற
அதுமட்டுமா!
வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோய கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ
(கலிங்கத்துப் பரணி)
இதனை கவிஞர் கண்ணதாசன் “அன்னைஇல்லம்” திரைப்படத்தில்,
வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
சாயும் நிலவின் மழையிலே
காலம் நடக்கும் உறவிலே
என எளிய நடையிலே எழுதினார்.
இவையன்றி
விடுமின் எங்கள்துகில்
விடுமின் என்றுமுனி
வெகுளி மென் குதலை
துகிலினைப்
பிடிமின் என்ற பொருள்
விளைய நின்றருள் செய்
பெடைந லீர்கடைகள்
திறமினோ
(சயங்கொண்டான் - கலிங்கத்துப்பரணி)
கலிங்கத்துப்பரணி) சயங்கொண்டானின் இந்தப் பாடலை “சினேகிதி” என்ற படத்துக்காக கொண்டுவந்தார் கண்ணதாசன்.
ஆடை தொட்டு இழுக்கும்
போது
போதும் போதும் என்பதில்
இன்னும் வேண்டும் என்பதன்றி
வேறு
அர்த்தம் காண முடியுமா?
இது சயங்கொண்டானின் பாடலின் மறு உருவமே.
முலைமீது கொழுநர்கைந்
நகமேவு குறியே
முன் செல்வ மில்லாத
அவர்பெற்ற பொருள்போல்
கலைநீவி யாரேனு மில்லாவிடத்தே
கண்ணுற்று நெஞ்சங் களிப்பீர்
கடைதிறமினோ
(சயங்கொண்டான் - கலிங்கத்துப்பரணி)
இந்தச் செய்தியை “எங்கள் தங்கராஜா” படத்துக்காக பாட்டு எழுதும்போது கையில் எடுத்து கண்ணதாசன், இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை என்ற பாட்டினிலே
காலைநேரத்தில் காயங்கள்
பார்த்துக்
களிப்ப தென்பது கவிதையின்
விளக்கம்
கவிஞர் சொன்னது கொஞ்சம்
இனிமேல்
காணப் போவதோ மஞ்சம்
சயங்கொண்டாரின் பாடல்வரிகளை அழகாக கையாண்டுள்ளார். உலக இலக்கியங்களில் மேகம் தொடங்கி மனம் வரை தூதுவிட்டிருக்கிறார்கள். அந்த தூது இலக்கணத்தை கண்ணதாசன் நாலே வரியிலே கச்சிதமாக தந்துவிட்டார்,
ஓடும், உனைநாடும் எனை
உன்சொந்தம் என்று கூறும்
திரும்பும், எனை நெருங்கும், உந்தன்
பதில் கொண்டு வந்துபோடும்
நாலே வரியில் தூது இலக்கணம் முழுவதையும் கச்சிதமாய் தந்தவர்தான் கண்ணதாசன். கம்ப ராமாயணத்தில் ஒருபாட்டு, கல்லாக இருந்த அகலிகை ராமரின் பாதம்பட்டதும் உயிர்பெறுகிறாள். அப்போது விசுவாமித்திரர் ராமனைப்பார்த்து,
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி
இந்த உலகுகெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில் மழை
வண்ணத்து அண்ணலே உன்
கை வண்ணம் அங்கு கண்டேன்
கால் வண்ணம் இங்கு கண்டேன்
என கூறுவதுபோல கவிச்சக்கரவர்த்தி எழுதியதை நம் கவியரசு,
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்பெண் வண்ணம் நோய்கொண்டு
வாடுகிறேன்
என்று “பாசம்” திரைப்படத்திற்காக எழுதினார்.
வண்ணம் திரிவும் மனக்குழைவும்
மானமிலாமையும் வாய்
வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உன்மெலிவும்
ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண் அம் துழாய் என்னும் மாலை
கொண்டு சூட்டத்தணியும்!
ஆண்டாள் பாசுரத்தின் ஒரு பகுதியினை கண்ணதாசன் “கர்ணன்” திரைப்படத்தில்,
இனமென்ன, குலமென்ன
குணமென்ன அறியேன்
ஈ டொன்றும் கேளாமல் என்ன அங்கு
கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர்
கொண்டு நடந்தான்
குறைகொண்ட உடலோடு நான்
இங்கு மெலிந்தேன்!
என்று காதல் வேகத்தை எளிய வார்த்தைகளால் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். புகழேந்தி எழுதிய நளவெண்பாடலில்
நால்குணமும் நால்படையா,
ஐம்புலனும் நல் அமைச்சா,
ஆர்க்கும் சிலம்பே அணி முரசா,
வேல்படையும்
வாளுமே கண்ணா, வதனமதிக்
குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு!
நால்குணமும் நால்படையா, ஐம்புலனும் நல் அமைச்சா, ஆர்க்கும் சிலம்பே அணி முரசா, வேல்படையும் வாளுமே கண்ணா, வதனமதிக் குடைக்கீழ் ஆளுமே பெண்மை அரசு!
குலுங்கும் முந்தானை
சிரிக்கும் அத்தானை விரட்டுவ(து)
ஏனடியோ?
உந்தன் கொடி இடை இன்று
படை கொண்டு வந்து கொல்வதும்
ஏனடியோ!
என “போலீஸ்காரன் மகள்” திரைப்படத்திற்காக எளிய நடையிலே எழுதிவைத்தார்.
நதியின் பிழை அன்று நறும்புனல்
இன்மை அற்றே
பதியின் பிழை அன்று பயந்து நமைப்
புரத்தாள்
மதியின் பிழை அன்று மகன் பிழை
அன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கு என்னை
வெகுண்டது?
என்றான் கம்பன். (அயோத்தியா காண்டம்/நகர்நீங்கு படலம் பாடல் 129) இதனை “தியாகம்” என்ற திரைப்படத்தில் எத்தனை எளிதாகச் சொல்லிவிட்டுப் போகிறார் பாருங்கள், நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா?
இவைமட்டுமா? தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள்
அடுக்குத்தொடர்
ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
இரட்டைக்கிளவி
ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி
சல சல எனச் சாலையிலே
சினைப்பெயர்
பூப்பூவா பறந்துபோகும்
பட்டுப்பூச்சி அக்கா
பொருட் பெயர்
கண்ணன் என்னும் மன்னன்
பெயரைச் சொல்லச் சொல்ல
இடப்பெயர்
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காலப்பெயர்
வெள்ளிக்கிழமை விடியும் வேளை
வாசலில் கோலமிட்டேன்
குணம் அல்லது பண்புப்பெயர்
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
தொழில்பெயர்
ஆடலுடன் பாடலைகேட்டு
ரசிப்பதிலேதான் சுகம்! சுகம்!
இறந்தகாலப் பெயரெச்சம்
வந்தநாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
எதிர்காலப் பெயரெச்சம்
ஓடும் மேகங்களே ஒரு சொல்
கேளீரோ?
இடவாகு பெயர்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி
எதிர்மறைப் பெயரெச்சம்
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
குறிப்புப் பெயரெச்சம்
அழகிய தமிழ்மகள் இவள் - இரு
விழிகளில் எதிய மடல்!
ஈறுகெட்ட எதிர்மமறைப் பெயரெச்சம்
வாசமில்லா மலரிது
வசந்தத்தைத் தேடுது
வன்றொடர்க் குற்றியலுகரம்
முத்துப்பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பென்னவோ
நெடில் தொடர்க்குற்றியலுகரம்
நாடு அதைநாடு அதை
நாடாவிட்டால் ஏது வீடு
உயிர் தொடர்க் குற்றியலுகரம்
ஞாயிறு ஒளிமழையில்
திங்கள் குளிக்கவந்தாள்
இரண்டாம் வேற்றுமை உருபு
நிலவைப் பார்த்து வானம்
சொன்னது என்னைத் தொடதே
மூன்றாம் வேற்றுமை உருபு
உன்னால் முடியும் தம்பி! தம்பி!!
பெயர்ப் பயனிலை
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
இப்படி இன்னும் சொல்லிகொண்டே போகலாம். தமிழ்த் திரைப்படங்களில் பழைய, புதிய என பல படங்களில் தமிழின் இலக்கண, இலக்கிய வளங்கள் அதிகமாக கையாளப்பட்டுள்ளன. பலர் கூறிய கருத்துக்களை இங்கு தொகுத்தளித்துள்னே. பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு இலக்கணப் பகுதியினை தெளிவாக புரியவைப்பதற்கு இவை போன்ற விவரங்களைத் தந்தால் மாணவர்களுக்கு இலக்கணத்தைக் கற்றுகொள்ளும் பயம் விலகி எளிதாக ரசனையுடன் கற்றுகொள்வார்கள் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடுமில்லை.