tamilnadu

img

கொதிகலன் வெடித்து 6 தொழிலாளர்கள் பலி

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் துயரம்:   17 தொழிலாளர்கள் படுகாயம்

கடலூர், ஜூலை 1-  கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தில் புதன்கிழமையன்று கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 17 தொழிலாளர்கள் பலத்தக் காயமடைந்தனர்.  என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை தொழி லாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி நிகழிடத்திலேயே உயிரிழந்த னர். 17 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். பத்மநாபன், சிலம்பரசன், அருண்குமார், இளவரசன், இளங்கோவன், செல்வராஜ் ஆகிய ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே கருகி பலியாகினர்.

இதுகுறித்து தகவலறிந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தி, மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த ரவிச்சந்திரன் (43), சுரேஷ் (50), சிவக்குமார் (53), வைத்திய நாதன் (48),ஜோதிராமலிங்கம், கே.ரவிச்சந்திரன் (இவர்கள் அனைவரும் நிரந்தரத் தொழிலாளர்கள்), இளங்கோ, செல்வ குமார் (23), செல்வராஜ், செங்கோலை, ஜெயசீலன்(55),  அனந்தபத்மநாபன்(50), மணிகண்டன், வேல்முருகன், கோவிந்தன் (43), மோகன்ராஜ் (25), வெங்கடேசன் (இவர்கள்  அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்) ஆகிய 17 தொழி லாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர். இவர்களில் மோகன்ராஜ் என்எல்சி பொது மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். மற்ற அனைவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தொழிலாளர் களின் உறவினர்கள், தொழிற்சங்க தலைவர்கள்  மருத்துவ மனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  போலீசார்  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடரும் விபத்துக்கள்...

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி அனல் மின் நிலையம் 2-ல், 6-ஆவது அலகில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காய மடைந்தார். கடந்த மே மாதம் 7-ஆம் தேதி இதே அலகில் நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 3 பேர்  காயமடைந்தனர். இந்நிலையில், இதே அனல் மின்நிலைய த்தின் 5-ஆவது அலகில் புதன்கிழமை  தீ விபத்து ஏற்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாகவே என்எல்சி நிறுவனத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அங்குள்ள பாதுகாப்பு துறை செயல்படாத துறையாக உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் பாதுகாப்பு வாரத்தை கூட சுருக்கிவிட்டனர் என்கின்றனர். விபத்துக்குள்ளான அனல்மின் நிலையம் 30 ஆண்டுகள் பழமையானது என்பது முக்கியமான காரணங்களில் ஒன்று. அதேபோல், வருடத்திற்கு ஒருமுறைசெய்யப்படும் பழுது பார்க்கும் பணியையும், தெர்மலில் நிலக்கரியை சுத்தம் செய்யும் பணியையும் ஒழுங்காக மேற்கொள்ளாமல்,  உற்பத்தி யை மட்டுமே கருத்தில்கொண்டு நிர்வாகம்  செயல்படுவதா ல்தான் இப்படியான விபத்துகள் தொடர்ச்சியாக நிகழ்கின்றன என்று தெரிவிக்கின்றனர். 

பொது மேலாளர் சஸ்பெண்ட்

கவனக்குறைவாக செயல்பட்டதால் என்எல்சி நிறுவன பொது மேலாளர் கோதண்டம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள் ளார். இந்த சம்பவம் குறித்து தெர்மல்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் விபத்துக்கான  காரணங்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைத்திடுக!

மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை,ஜூலை 1-  நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தொடர் விபத்துக்கான  காரணங்களை விசாரிக்க உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஜூலை 1 ஆம் தேதியன்று காலை 2-வது அனல் மின்நிலையத்தில், 5-வது யூனிட்டில் பாய்லர் வெடித்து ஆறு தொழிலாளர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 16-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என கிடைக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. இதே இரண்டாவது அனல் மின் நிலையத்தில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 6-வது யூனிட் பாய்லர் வெடித்து, நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், ஆறு பேர் படுகாயமடைந்தனர். இந்த காயம் ஆறுவதற்கு முன்பே, மீண்டும் இந்த கொடூரமான விபத்து நடந்துள்ளது. நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துக்கள் பல தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு நெய்வேலி நிறுவனத்தின் நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும்.

பாய்லர் பராமரிப்பு இல்லாததால் விபத்து

குறிப்பாக, அனல் மின் நிலையத்தில் பாய்லர்கள் பராமரிப்பு பணியை பொதுத்துறை நிறுவனமான திருச்சி ஃபெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாறாக, தனிப்பட்ட காண்ட்ராக்டரிடம் ஒப்படைத்துள்ளனர். தனிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இந்த பாய்லர்களை முறையாக பராமரிக்காத காரணத்தினாலேயே இந்த கோர விபத்துகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என தெரிய வருகிறது. இந்த ஒப்பந்த ஏற்பாடுகளில் ஊழல் - முறைகேடுகளும் இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக கருத வேண்டியுள்ளது.

துயரத்தில் வாடுகிற உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். நெய்வேலி நிறுவனம் இறந்துபோன தொழி லாளர்களுக்கு தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணியும், படுகாய மடைந்தவர்களுக்கு பூரண குணமடையும் வரை உயர் சிகிச்சையளிப்பதோடு தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும். மேலும், மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துக்கள் தொடர்பாக உயர்மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், அதில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். இத்தகைய விபத்துகள் தொடர்ந்து நடைபெறாத வண்ணம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அக்குழு விசாரித்து அளிக்கும் சிபாரிசுகள் மீது, நெய்வேலி நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.