இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காடுகள் நிறைந்த பகுதியான போர்னியோ தீவு, நாட்டின் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தா, நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகமாக ஏற்படும் இடமாக உள்ளது. வரும் 2050-ஆம் ஆண்டிற்குள் ஜகார்த்தா நகரின் மூன்றில் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இயற்கை பேரழிவுகள் குறைவாக உள்ள கிழக்கு கலிமன்டான் மாகாணத்தில் உள்ள போர்னியோ தீவு, புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தற்போது தலைநகராக இருக்கும் ஜகார்த்தாவில் ஆட்சி, வணிகம், நிதி, வர்த்தகம் போன்றவற்றை நிர்வகிப்பது மிகவும் மிகவும் கடினமாக உள்ளது. மேலும் ஜகார்த்தா கடலில் மூழ்கி வரும் நகரங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த நடவடிக்கைக்கான மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்லும். இந்த திட்டத்திற்கு சுமார் 466 டிரில்லியன் ரூபியா (33 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.