பள்ளி மாணவர்கள் இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்தோனேஷிய அரசு ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களையும், இணையங்களை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. சாதாரண தகவல் தொலைத்தொடர்பு சாதனமாக அறிமுகமான செல்போன் இன்று சகலத்தையும் சாதிக்க வல்லதாக உள்ளது. இந்த சூழலில், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் இணையம் மற்றும் கம்ப்யூட்டர் கேம்களுக்கு அடிமையாகி உள்ளனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் இணையம் மற்றும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாவதை தவிர்க்க இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டங் நகரில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 2 ஆயிரம் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நகர மேயர் டேனியல் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் மூலம் குழந்தைகள், இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன்களில் கேம்களில் இருந்து விலகி, கோழிக்குஞ்சுகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவர். குஞ்சுகளை வளர்ப்பது மாணவர்களுக்கு மதிப்புமிக்க திறன்களை கற்பிக்கும் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும். கோழிக்குஞ்சுகளை நன்கு வளர்க்கும் குழந்தைகளுக்கு பரிசும் வழங்கப்படும்’, என கூறினார்.