tamilnadu

img

இந்நாள் பிப். 26 இதற்கு முன்னால்

1606 - ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் தரையிறங்கிய ஐரோப்பியராக, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின், வில்லெம் ஜான்ஸூன் ஆனார். நெதர்லாந்திலிருந்து, 1598இல், அப்போது டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள் என்றழைக்கப்பட்ட இந்தோனேஷியாவிலிருந்த, டச்சுக் குடியேற்றத்திற்கு வந்த ஜான்ஸூன், 1602இல்  டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியில் அலுவலராகியிருந்தார். (ஆஸ்திரேலியாவின் வடக்கிலுள்ள) நியூகினியா தீவின் கடற்கரைப் பகுதிகளில், வணிக, பொருளாதார வாய்ப்புகள் குறித்து அறிவதற்காக, டவ்க்கென் என்ற கப்பலில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி இவரை அனுப்பியது. 1605 செப்டம்பரில் ஜாவாவிலிருந்து புறப்பட்ட இவர், நவம்பரில் நியூகினியாவின் மேற்குப் பகுதியை அடைந்துவிட்டார். அந்த நிலப்பகுதியிலிருந்து, பெரும் செல்வம் கிடைக்க வாய்ப்பிருப்பதாக நவம்பர் 18இல் குறிப்பு எழுதிய அவர், தொடர்ந்து பயணித்து, ஆஸ்திரேலியாவின் (தற்போதைய) க்வீன்ஸ்லாந்தின் மேற்குக் கரையான, யார்க் தீபகற்ப முனையில் தரையிறங்கினார்.

அங்கிருந்த குடாக்கள் வழியே பயணித்தபோது, (தற்போதைய) ஆர்ச்சர், வாட்சன் ஆறுகளுக்கு டபல்ட் ரெவ்(டச்சு மொழியில் இரட்டை ஆறு) என்றும், டுகாலி ஆற்றுக்கு விஸ்ச் (மீன்) என்றும் கூட பெயரிட்டார். 1644இல் வந்த ஏபெல் டாஸ்மேன் என்ற டச்சுக்காரர்தான், இந்தப் பெரும் தீவின் மேற்கு, வடக்கு கடற்கரைப் பகுதிகளுக்கு ‘நியூ ஹாலந்து’ என்ற பெயரையும் சூட்டினார். தென்கோடி நிலப்பரப்பு என்று பொருள்படும் டெர்ரா ஆஸ்ட்ரேலிஸ் என்பதி லிருந்து, ஆஸ்திரேலியா என்ற பெயரை, 1824இல் ஆங்கிலேயர்கள் சூட்டும்வரை, இந்த நியூ ஹாலந்து என்ற பெயராலேயே ஆஸ்திரேலியா அழைக்கப்பட்டது.

பெயர்க ளெல்லாம் சூட்டினாலும், டச்சுக் காரர்கள் இங்குக் குடியேற்றங்கள் எதையும் உருவாக்கவில்லை என்பதால், 1770இல் ஜேம்ஸ்குக் வருகைக்குப்பின், 1783இல் அமைக்கப்பட்ட ஆங்கிலேய குற்றவாளிகள் குடியிருப்புகள், இதை ஆங்கிலேயக் குடியேற்றமாக்கிவிட்டன. உண்மையில், ஆஸ்திரேலியாவையும், நியூகினியாவை யும் பிரிக்கும் டாரஸ் நீரிணை இருப்பதையே ஜான்ஸூன் கண்டுபிடிக்கவில்லை என்பதால், நியூகினியாவின் ஒரு பகுதியாகவே ஆஸ்திரேலியாவை அவர் எண்ணிக் கொண்டு திரும்பிவிட்டார். ஆனால், அவ்வாண்டின் ஜூனிலேயே இப்பகுதிக்கு வந்த ஸ்பெயினைச் சேர்ந்த, லூயிஸ் டாரஸ் இந்த நீரிணையைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, இது டாரஸ் நீரிணையென்றே பெயரிடப்பட்டது. அதனால், 1770இல் ஜேம்ஸ்குக் வரும்வரை, டச்சுக்காரர்களிடமிருந்த நிலப்படத்தில்(மேப்) டாரஸ் நீரிணையே இல்லை. டாரஸ் நீரிணையையும், நியூகினியாவையும் சரியாகக் காட்டிய ஸ்பானியர்களின் நிலப்படத்தில் ஆஸ்திரேலியாவே இல்லை!

- அறிவுக்கடல்

;