tamilnadu

img

1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் காய்ச்சல் இந்தியாவை எவ்வாறு மாற்றியது - லாரா  ஸ்பின்னி

பாரிஸில் வாழ்ந்து வருகின்ற எழுத்தாளர் மற்றும் அறிவியல் பத்திரிகையாளர். ‘பேல் ரைடர்: 1918ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் காய்ச்சல் மற்றும் அது உலகை எவ்வாறு மாற்றியது’ என்ற அவரது மிகச் சமீபத்திய  புனைகதை அல்லாத  புத்தகத்தை ஜொனாதன் கேப்  2017 இல்  வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் இந்தியா குறித்து எழுதப்பட்ட பகுதி.

image.png

1918ஆம் ஆண்டில், நிராலா அல்லது "விசித்திரமானவர்" என்று அழைக்கப்பட்ட 22 வயதான கவிஞர் சூர்யகாந்த் திரிபாதி துரதிர்ஷ்டத்தை எதிர்கொண்டார். "டால்மாவில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று அங்கே நான் காத்திருந்தேன்" “இறந்த உடல்களால் கங்கை வீங்கிப் பெருத்திருந்தது. என் மாமியார் வீட்டில் இருந்த என்னுடைய மனைவி காலமாகி விட்டார் என்பதை அறிந்து கொண்டேன்”  என்று  தன்னுடைய ’எ லைஃப் மிஸ்பெண்ட்’ (வீணாக்கப்பட்ட வாழ்க்கை) என்ற நினைவுக் குறிப்பில் எழுதியிருந்தார். நிராலாவின் குடும்பத்தில் இருந்தவர்களில் பலரும் இறந்து போயிருந்தனர். அவர்களைத் தகனம் செய்வதற்குப் போதுமான மரம் கிடைக்கவில்லை. "அது என் வாழ்க்கையில் மிக கொடூரமான  நேரமாக இருந்தது"   “ஒரு கண் சிமிட்டலில் என்னுடைய குடும்பம் முழுதும் காணாமல் போய் விட்டது.  எங்களுடைய நிலக் குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும், என் உறவினருக்காக பணிபுரிந்த நான்கு பேரும், எனக்காகப் பணியாற்றிய இருவரும் இறந்து விட்டனர். எனது உறவினரின் மூத்த மகனுக்கு பதினைந்து வயது, என் இளம் மகளுக்கு ஒரு வயது.  எந்த திசையில் திரும்பினாலும் இருளையே நான் கண்டேன்” என்று பின்னர் ஒருமுறை அவர்  நினைவு கூர்ந்தார். இந்த மரணங்கள் அனைத்தும் தற்செயலாக அந்த கவிஞருக்கு  மட்டுமே நடந்த தனிப்பட்ட துயர நிகழ்வு அல்ல. பிறரோரும் அவை தொடர்பு கொண்டிருந்தன. “தொற்றுநோயின் பேரழிவுகளைப் பற்றி  செய்தித்தாள்கள்  எங்களுக்குத்  தெரிவித்தன” என்று நிராலா எழுதினார்.

உண்மையில் துணைக் கண்டத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையுமே பாதித்த தொற்றுநோயாக அது இருந்தது. அந்த இன்ஃப்ளூயன்ஸா நோய், உலகளவில் 5 கோடி முதல் 10 கோடி உயிர்களைப் பறித்தது. இரண்டு உலகப் போர்களிலும் ஏற்பட்டதை விட,  அந்த நோயால் அப்போது ஏற்பட்ட உயிர்ப்பலி  கூடுதலாக இருக்கக்கூடும். அந்த மரணத்தின்  மிகப்பெரிய சுமையைச்  சுமந்த  நாடாக இந்தியா இருந்தது. மேற்கு சமோவா (இப்போது சமோவா) 22 சதவீத மக்கள்தொகையை பறிகொடுத்தது. மற்ற நாடுகளும் தங்கள் மக்கள்தொகையை அதிக அளவில் இழந்திருந்தன. ஒப்பீட்டளவில் இந்தியாவில் 6 சதவீதம் பேர் மரணமடைந்திருந்தனர். இந்திய மக்கள்தொகையின் பெருமளவு காரணமாக, அந்த 6 சதவிகிதம் என்பது அதிர்ச்சியூட்டும் வகையில் மிகப் பெரும் எண்ணிக்கையாக இருந்தது. 1918 மற்றும் 1920க்கு இடையில், இன்ஃப்ளூயன்ஸா அல்லது அது ஏற்படுத்திய பிரச்சனைகளால் 1.8 கோடி இந்தியர்கள் உயிரை இழந்தனர். இறப்பின் அடிப்படையில், அந்தப் பேரழிவின் மையப் புள்ளியாக இந்தியா  இருந்தது.  ஒட்டுமொத்த ஆசியக் கண்டத்தில் மிக அதிகமான காய்ச்சல் தொடர்பான இறப்பு அந்த ஆண்டுகளில் ஏற்பட்டிருந்தது என்றாலும், அந்த நோய்  ஆசியக் கண்டத்தை எவ்வாறு அழித்திருந்தது என்பது குறித்து அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை. 1918ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த காய்ச்சல் தொற்றுநோய் "மறந்துபோன" தொற்றுநோய் என்றே அழைக்கப்படுகிறது. அந்த நோயை முழுமையாக மறந்து விட்ட அந்தக் கண்டம்தான், அந்த நோயின் தாக்கத்தை முழுமையாகத் தாங்கிக் கொண்டிருந்தது என்பது முரண்பாடாக உள்ளது.

ஒரு மரணம் என்பது சோகம், ஒரு கோடி மரணங்கள் என்பது புள்ளிவிவரம் என்று ஸ்டாலின்  சொல்லியிருந்ததைப் போல இருக்கலாம். அதனாலேயே மலட்டு  எண்களை  மனித அனுபவமாக  மொழிபெயர்க்கச் சொல்லி, அந்தக் கொடூரமான தருணத்தில் வாழ்வது எப்படி இருந்தது என்று கேட்டு அந்த கவிஞரிடம் நாம் செல்கிறோம். இப்போது நிராலா நவீன ஹிந்தி இலக்கியத்தில் முன்னணி நபராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். பல இந்தியர்களைப் போலவே அவர் மீதும் அந்த 1918 காய்ச்சல் தொற்று ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. சில சமயங்களில் அந்த தொற்றுநோய் அவ்வாறு அறியப்பட்டிருந்தாலும், அந்த நோய் உண்மையில் ஸ்பெயினுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்ற வாதங்களை ஸ்பானிஷ் காய்ச்சல் குறித்த எனது புத்தகத்தில் நான் முன்வைத்திருக்கிறேன். அந்த நோயால் ஏற்பட்ட பேரழிவு  இந்தியாவில் சமூக பதட்டங்களை அதிகரித்திருந்தது, வன்முறைகள் வெடிக்க பங்களிப்பு செய்தது மற்றும் சுதந்திர போராட்ட இயக்கத்தை  கணிசமாக  வலுப்படுத்தியது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. அது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள, பொதுவாக காய்ச்சல் தொற்றுநோய்களின் தன்மையைப் புரிந்துகொள்வது அவசியம்.  குறிப்பாக இந்த 1918 காய்ச்சல் தொற்றுநோய் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் மனிதர்கள் மட்டுமல்லாது, பல விலங்குகளையும் பாதிக்கிறது. இந்த வைரஸ் எளிதில் திடீர் மரபணு மாற்றங்களுக்கு ஆளாவதாக இருப்பதால், அதிக தீங்கு விளைவிப்பதாக இருக்கிறது. இந்த திடீர் மாற்றங்களால், முன்னர் இருந்திராத புது வகை வைரஸ் தோன்றி, அது உயிரிகளுக்கு இடையிலான தடையைத் தாண்டுகிறது. விலங்குகளிலிருந்து, பெரும்பாலும் பறவைகளிலிருந்து மனிதனுக்குப்  பரவுகிறது. மீண்டுமொரு திடீர் மரபணு மாற்றம் மூலமாக மனிதர்களிடையே எளிதில் கடந்து செல்லுகின்ற திறனை அந்த புதிய வகை வைரஸ் பெறுகின்றது என்று கொள்வோம். அதற்கு முன்னர் எந்தவொரு உயிருள்ள நபரும் அந்த புதிய வகை வைரஸின் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்ததில்லை என்பதால், ஒட்டுமொத்தமாக மனிதர்களிடம் அந்த வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும். எனவே  மாற்றத்திற்குள்ளான அந்த புதிய வகை வைரஸ் மனிதரிடையே தொற்றுநோயைத் தூண்டக்கூடும். காலப்போக்கில், ஆதார உயிரியான மனிதனுடன்  மிகவும் இணக்கமான சமநிலையில் வாழ்வதற்காக, தன்னுடைய வீரியத் தன்மையை அந்த புதிய வகை வைரஸ் மிதப்படுத்திக் கொள்கிறது. அது அறிந்தே இந்த நோக்கத்துடன் இதனைச் செய்யாது. இயற்கைத் தேர்வு  செயல்முறையின் மூலமாக, தன்னுடைய ஆதார உயிரியான மனிதனை நீண்ட காலம் உயிரோடு வைத்திருப்பதற்காக, இந்த வைரஸ்  பிறழ்வுகள், அந்த மனிதனை உயிரோடு சுற்றித் திரிய வைக்கின்றன. விளைவாக கூடுதலாக மற்ற மனித ஆதார உயிரிகளைப் பெற்று, அவை பாதிப்பை ஏற்படுத்த முடியும். அந்த வைரஸ் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்து, அதன் மூலம் தன்னுடைய நகல்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிக் கொள்ள முடியும். தொற்றுநோய்  குறைந்தாலும்,  அதை ஏற்படுத்திய புதிய வகை வைரஸ் மனிதர்களிடையே தொடர்ந்து  வைரஸ் பருவகால  காய்ச்சலாகப்  பரவிக் கொண்டே இருக்கும்.

ஆக இந்த காய்ச்சல் தொற்றுநோய் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏற்படுகிறது. கடந்த 500 ஆண்டுகளில் இவ்வாறான 15 காய்ச்சல்கள் நிகழ்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் அவற்றைப் பற்றி மற்றொரு விஷயத்தையும் கண்டுபிடித்துள்ளனர். ஓரளவிற்கு அவை வெளிப்படுகின்ற மனிதர்களாலேயே, அந்த வைரஸ்களின் தீவிரம் தீர்மானிக்கப்படுகிறது. 1890களில் இருந்து மனிதகுலம் எதிர்கொண்ட ஐந்து காய்ச்சல் தொற்றுநோய்களில், 1918 நிகழ்வைத் தவிர வேறு எதுவும் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றதில்லைஎனவே 1918ஆம் ஆண்டில் ஏற்பட்ட தொற்று நோய்  சற்றே முரண் கொண்டதாக இருக்கிறது. அந்த நேரத்தில் உலகில் இருந்த நிலை, குறிப்பாக அப்போது இருந்த யுத்த நிலை, அதனுடன் ஏராளமான தொடர்பு  கொண்டிருந்திருப்பதாக  ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

1918ஆம் ஆண்டு முதல் உலகப் போரின் கடைசி ஆண்டாகும்.  ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடந்த அந்தப் போரின் தாக்கம், பிற நாடுகளிலும் உணரப்பட்டது. இந்தியர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்இந்தியாவில் வளர்க்கப்பட்ட உணவு வகைகள் பிரிட்டிஷ் போரின் போது பயன்படுத்தப்பட்டன. மோசமான பொருளாதார நிலைமை, சுதந்திர போராட்டம் போன்ற காரணிகள் தொற்றுநோயையும், அதனால் ஏற்பட்ட இந்திய  அனுபவத்தையும் வடிவமைக்க  உதவின.

பட்டினி என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. உணவு விநியோகத்தில் இருந்த குறைபாடுகளால், 1918ஆம் ஆண்டில்  உலகின் பல பகுதிகளிலும் பட்டினி அதிகமாக இருந்தது. காசநோய் மற்றும் டைபஸ் போன்ற பிற தொற்று நோய்களும் மனிதர்களிடையே ஊடுருவின. தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களை வழக்கத்திற்கு மாறான புதிய சுவாசமண்டல நோய்த்தொற்றுக்கு, போரால் ஏற்பட்டிருந்த இடையூறுகளைப் பயன்படுத்திஅவை ஆளாக்கின. ராணுவத் துருப்புக்கள் மற்றும் அகதிகள் என்று ஏராளமான மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருந்தது, ஒருவகையில் அந்த நோய்த்தொற்றைப் பரப்புகின்ற சிறந்த வாகனமானது. இதற்கிடையில் அந்த ஆண்டு இயக்கமின்றி ஓரிடத்தில் தங்கியிருந்த இருந்த ஏதாவொரு குழு, இந்த ஆபத்தான கிருமி பெருகுவதற்கு உதவியிருக்கலாம். அல்லது  குறைந்தபட்சம் ஆபத்தான நிலையில் அந்த கிருமியை நீண்ட காலம் தன்னுடன் வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்பிரான்ஸை, பெல்ஜியத்திலிருந்து சுவிஸ் எல்லைக்கு வெளியேற்றிய, அந்த 16 கிலோமீட்டர் அகல அகழிகள் கொண்ட மேற்கு எல்லைப் பகுதியை வைரஸ் சென்றடைந்தவுடன்வாரங்கள் அல்லது மாதங்களாக எங்கும் செல்லாமல் அந்த அகழிகளில் அடைக்கப்பட்டு இருந்த ஏராளமான இளைஞர்களை அது எதிர்கொண்டது. இதுபோன்ற விதிவிலக்கான நிலைமைகளின் கீழ்வைரஸ் கொண்டிருந்த, அந்த வைரஸை மிதப்படுத்துவதற்கான  பரிணாம அழுத்தம் நீக்கப்பட்டிருக்கலாம் என்று  கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் பால் எவால்ட்தன்னுடைய வாதத்தை முன்வைக்கிறார். ஆதார உயிரி வைரஸ்  உறவு  அடுத்த உயிரியிடம் நகருவதாக மாற்றமடைந்து, அந்த அகழிகள்  வழியாக  ஓடிய போது, போகும்பாதையில் பலரையும் கொன்றது.

காய்ச்சல் தொற்றுநோய்கள் சிறப்பியல்பைக் கொண்டுள்ளன. அவை இந்த உலகத்தை  அலைகளாக வந்து மூழ்கடிக்கும்ஹெரால்ட் அலை என்று அழைக்கப்படுகிற முதல் அலைபெரும்பாலும் மிதமானது. அது பருவகாலக் காய்ச்சலைப் போன்று இருக்கும்அது மிகவும் ஆபத்தான இரண்டாவது அலையைத் தோற்றுவிக்கும். சில சந்தர்ப்பங்களில்மாறுபட்ட தீவிரம் கொண்ட அடுத்தடுத்த அலைகள் உருவாகும். 1918இல் ஏற்பட்ட காய்ச்சல் தொற்றுவழக்கத்திற்கு மாறான தீவிரத்துடன் ஏற்பட்டிருந்தாலும்இந்த விஷயத்தில் அது மாறுபட்டிருக்கவில்லை. 1918ஆம் ஆண்டின்  வசந்த காலத்தில், பூமியின் வடக்குகோளப் பகுதியில் லேசான  ஹெரால்ட் அலை  இருந்தது. அந்த ஆண்டின் பிற்பகுதியில் மிகவும் ஆபத்தான இரண்டாவது அலைமற்றும் 1919இன் துவக்க மாதங்களில் இறுதியாக மீண்டுமொரு அலை தோன்றியது. 1919ஆம் ஆண்டு தோன்றிய அந்த இறுதி தோற்றம் மற்ற இரண்டு தோற்றங்களுக்கு இடையிலான தீவிரத்துடன் இருந்ததுதெற்கு கோளப் பகுதியிலும் இவ்வாறான அலை மீண்டும் மீண்டும் ஏற்பட்டது. ஆனால் அது வடக்கில் இருந்ததைப் போன்று இருக்கவில்லை. அதாவது அங்கே அலைகள் சற்று தாமதமாகவே தாக்க முனைந்தனபொதுவாக இந்த தொற்றுநோய் 1920 மார்ச் மாதத்திற்குள் முடிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது என்றாலும், பசிபிக் தீவுகளில் மற்றொரு வருடத்திற்கு அந்த தொற்று நோய் இருந்ததாகவும், 1921 ஜூலையில் நியூ கலிடோனியாவில் நோய் குறித்து பதிவாகி இருந்ததாகவும் பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ள டென்னிஸ் ஷாங்க்ஸ் மற்றும் அவரது சகாக்கள்  தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் முதன்முதலில் 1918 காய்ச்சல் ஜூன் மாதம் தோன்றியது. பம்பாய் நகரம் வழியாக அது நுழைந்திருந்ததுஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அங்கிருந்து பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாணங்களுக்கு (இன்றைய உத்தரப்பிரதேசம்பரவியதுஅந்த அலை பின்வாங்குவதற்கு முன்பாக,செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் இரண்டாவது அலை வெடித்தது. அப்போது அந்த காய்ச்சல் ஏற்கனவே வந்திருந்த அதே நோயாக அடையாளம் காணப்படவில்லைஒருவேளை வசந்த காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடையில், அந்த மேற்கு எல்லைப் பகுதியில் இருந்த அகழிகளில் அந்த வைரஸ் முக்கியமான மாற்றத்திற்கு உள்ளாகி மிகவும் ஆபத்தானதாக மாறியிருக்கலாம்  என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அந்த அலை அக்டோபரில் உச்சத்தை அடைந்து டிசம்பரில் குறைந்தது. 1919ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது அலை ஏற்பட்டது. "நாட்டின் எந்தப் பகுதியும் அந்தத் தொற்று நோயிலிருந்து தப்பவில்லை ... அது சிம்லாவின் மலை உச்சிகளாக இருந்தாலும் சரிஅல்லது பம்பாய் போன்ற நவீன நகரங்களின் ஆரோக்கியமான சுகாதார நிலையங்கள் அல்லது அகமதாபாத்தின் சேரிகள் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக இருந்தாலும் சரிஎன்று மும்பை பல்கலைக்கழகத்தின்  மருத்துவ வரலாற்றாசிரியர் மிருதுளா ராமண்ணா, இந்திய காய்ச்சல் அனுபவம் குறித்து, அப்போதிருந்த  அறிவு நிலை குறித்து தொகுத்து 1998ஆம் ஆண்டு  எழுதிய போது குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் நாட்டின் அனைத்து பகுதிகளையும் அந்த நோய் சமமாகப்  பாதிக்கவில்லை  என்பதுவும்  தெளிவாகியுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுகாதார பொருளாதார நிபுணர் சித்தார்த் சந்திரா கிழக்கு லான்சிங்கில் உள்ள மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆசிய ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அப்போது, 1918 காய்ச்சல் தொற்றுநோயைப் பற்றி அவரிடம் எந்தவிதமான சிந்தனையும் இருந்திருக்கவில்லை. அபினி உள்ளிட்ட பிற போதைப் பொருள்கள் கிடைப்பதை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவும், வருவாயை உயர்த்தவும் அரசாங்கங்கள் வரலாற்று ரீதியாக எவ்வாறு பயன்படுத்திக் கொண்டுள்ளன என்ற முற்றிலும் மாறுபட்டதொரு கேள்விக்கு பதிலளிக்கக் கூடிய தரவுகளை அவர் தேடத் தொடங்கினார். அவரது கவனம் முழுவதும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கால டச்சு கிழக்கு இந்தியா அல்லது இந்தோனேசியா மீதே இருந்தது.  அதே காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகை தரவு மிகவும் விரிவாக இருந்தது என்பதை உணர்ந்து கொண்ட அவர், தனது கவனத்தை இந்தியா மீது திசைதிருப்பினார். விரைவிலேயே வித்தியாசமான ஒன்றை அவர் கவனித்தார்: 1911, 1921ஆம் ஆண்டுகளில் காலனித்துவ அதிகாரிகள் நடத்திய மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்கு இடையில், இந்திய மக்கள்தொகை  எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை என்பதைக் கண்டறிந்தார். அந்த காய்ச்சலே அதற்கான காரணமாக இருக்கலாம் என்று அவர்  சந்தேகம் கொண்டார்.

"அந்த நேரத்தில் 1918ஆம் ஆண்டு ஆசியாவில் ஏற்பட்ட காய்ச்சல் குறித்து மிகக் குறைவான ஆய்வுகள் மட்டுமே இருந்தன. உலக மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் தற்போது ஆசியாவில் வாழ்ந்து வருகின்றனர்" "பெரும்பாலான ஆய்வுகள் பணக்கார நாடுகளிலேயே மேற்கொள்ளப்பட்டன" என்று சந்திரா என்னிடம் கூறினார். அவ்வாறு ஆய்வுகள் விடுபட்டுப் போயிருப்பதைச் சரிசெய்யவும், அதற்கான முதல் படியாக இந்திய நல்வழ்வு ஆணையரின் 1918ஆம்ஆண்டு அறிக்கையின் நகலை வாங்கவும் அவர் முடிவு செய்தார்.  "அது மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. ஒரு நாள் இரவு முழுவதும் நான் அங்கேயே தங்கியிருந்து, முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை அந்த அறிக்கையை முழுமையாகப் படித்தேன்" என்று கூறினார். கங்கை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்த ஆறுகள் சடலங்களால் நிறைந்து போனதாக அவர் கண்டறிந்தார். அதிலிருந்த தெளிவான விளக்கங்கள் அதிர்ச்சியூட்டும் வகையில் இருந்தன. அந்த அறிக்கையில் சில மிகப் பெரிய எண்களும் இருந்தன.

பிரபல அமெரிக்க மக்கள்தொகை அறிஞரான கிங்ஸ்லி டேவிஸ், 1918ஆம் ஆண்டு தொற்றுநோயால் இழந்த இந்திய உயிர்களின் எண்ணிக்கையை, கணக்கெடுப்பு  தரவுகளின் அடிப்படையில் கணக்கிட்டு, சுமார் 2 கோடிக்கும் அதிகமான பேர் இறந்து போனதாக, 1951ஆம் ஆண்டு கண்டடைந்தார். தொற்றுநோய்க்கு முன்னும், பின்னும் மக்கள்தொகை ஒரே விகிதத்தில் வளர்ந்து வந்ததாக டேவிஸ் கருதினார். "அந்த அனுமானத்திற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதை இன்றைக்கு நாங்கள் அறிந்திருக்கிறோம். உண்மையில், அந்த தொற்றுநோய்க்கு முன்பாக மக்கள்தொகை மிக மெதுவாகவே  வளர்ந்து கொண்டிருந்தது ” என்று சந்திரா கூறினார்.

அந்த முரண்பாட்டைச் சரிசெய்த சந்திராவும் அவரது சகாக்களும், சுமார் 1.4 கோடி இந்தியர்கள் தொற்றுநோயால் இறந்து போயிருந்ததாக 2012இல் தெரிவித்தனர். அவர்களின் மதிப்பீடு 1918ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இந்தியப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்தது. பிரிட்டிஷார் பினாமியாக ஆட்சி செய்து வந்த சமஸ்தானங்களை அது கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.  இந்திய மக்கள்தொகையில் சுமார் 80 சதவீதம் பேர் நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தனர். சமஸ்தானங்களில் ஏற்பட்ட இழப்புகளையும் எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்த இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 1.8 கோடியாக இருந்திருக்கும் என்பது ஒரு நியாயமான மதிப்பீடாகும் என்று சந்திரா கூறினார். மக்கள்தொகையில் சுமார் 6 சதவிகிதமாக இருந்த அது மிக அதிக அளவிலான தேசிய இறப்பு விகிதமாக இருந்திருக்கவில்லை என்றாலும், 1 சதவிகிதம் அல்லது அதற்கும் குறைவாக இறப்பு விகிதம் என்று பல  பணக்கார, வளர்ந்த நாடுகள் அனுபவித்ததை விட மிகமிக அதிகமாகவே  இந்தியாவில் ஏற்பட்டிருந்த இறப்பு இருந்தது.

அந்த தொற்றுநோய் எவ்வாறு இந்தியாவில் பரவியது என்பதை வரைபடமாக்குவதற்கு சந்திராவின் குழு முயற்சித்தது.  இப்போது அவர்கள் புதிரான ஒன்றைக் கண்டுபிடித்தனர். பம்பாயில் 1918 செப்டம்பரில் ஐரோப்பாவிலிருந்து திரும்பி வந்த ஒரு பாதிக்கப்பட்ட துருப்பு கப்பலுடன் காய்ச்சலின் இரண்டாவது அலை வந்தபோது, இறப்பு விகிதம் பெரிய அளவிற்கு பம்பாய் மாகாணத்தில் அதிகரித்தது. மேற்கு எல்லைப்பகுதி வழியாக அந்த தொற்றுநோய் விரைவாகவும் ஆபத்தானதாகவும் கடந்து வந்திருப்பதையே இது குறிக்கிறது. ஆனால் அது வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி பரவிய போது ஏற்படுத்திய தாக்கத்தின் அளவு குறைந்து, பரவலாகப் பெருகியதாகத் தோன்றுகிறது. மேலும் நோய் மெதுவாக நகர்கிறது என்பதையும், பாதிக்கப்பட்டவர்களில் சிறிய பகுதியினரை மட்டுமே அது கொன்றதையும் குறிக்கிறது. கிழக்கே கல்கத்தாவைச் சென்றடைந்தபோது, பம்பாயில் இருந்ததை விட மிகவும் குறைவான அளவிலேயே அந்த நோய் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

சந்திராவின் கூற்றுப்படி, இந்த விளைவை விளக்குவதற்கு தற்போது மூன்று கோட்பாடுகள் உள்ளன. முதலாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிய வெவ்வேறு காலநிலை நிலைமைகள் தொற்றுநோயை வடிவமைத்திருக்கலாம்.  இரண்டாவதாக, தொற்றுநோய் வருவதைப் பார்த்து, கிழக்கே  வாழ்ந்த மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தங்களுடைய நடத்தைகளை மாற்றிக் கொண்டிருக்கலாம். எச்சரிக்கை எதுவும் இல்லாததால் மேற்கே இருந்தவர்கள் செய்ய முடியாத சிலவற்றை உதாரணமாக, வீட்டுக்குள்ளேயே இருப்பது போன்றவற்றை அவர்கள் செய்திருக்க முடியும். “தொற்றுநோய் நாடு முழுவதும் பரவும் போது, மிகவும்  மிதமானதாகிற செயல் வைரஸில் உருவாகி வருவதை நீங்கள் காண முடியும்” என்ற மூன்றாவது கோட்பாடு  மிகவும் கவர்ந்ததாக இருப்பதாகத் தோன்றினாலும், அது சோதித்தறியப்பட வேண்டியது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். :

"தரவுகளில் இருந்த சில வடிவமைப்புகள் பரந்த போக்குகள் இருப்பதைக் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டாவது அலை முதன்முதலில் பம்பாய் நகரில் தோன்றியிருந்தாலும், அந்த நேரத்தில் வடக்கே ஒரு பெரிய அரண் இருந்ததால், அது விரைவிலேயே தென்கிழக்கு கடற்கரையில் மெட்ராஸில்  வெடித்தது. மெட்ராஸும் அரண் கொண்ட நகரமாக இருந்தாலும், அது ரயில் மூலமாக அல்லது ஒரு துருப்புகப்பல் வழியாக இணைக்கப்பட்டுள்ள பம்பாயிலிருந்து காய்ச்சலைப் பெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. கிழக்கு கடற்கரையில் புனித ஹிந்து தளமான பூரி நகரில் இருந்த நோயின் ஆரம்பகாலத் தாக்கம், மேற்கிலிருந்து வந்த யாத்ரீகர்களிடம்  இருந்து பெறப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. இப்போதும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய மாநிலங்களில் ஒன்றாக இருக்கின்ற உத்தரப்பிரதேசத்தில் முப்பது லட்சம் பேர் இறந்தனர். அந்த நோய் சென்ற பாதையை மாநிலத்தின் புவியியல் மற்றும் நிலவியல் பாதித்தது. அந்த நேரத்தில் நிராலா மற்றும் பிரபல எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் ஆகிய இருவரும் வசித்து வந்த அந்த மாநிலம் கங்கையால் பிரிக்கப்பட்டுள்ளது. “பொதுவாக, அனைத்து முக்கிய ரயில் பாதைகளும் ஓடிய ஆற்றின் தெற்குப் பகுதியில் காய்ச்சல் வந்ததற்குப் பின்னரே, ஆற்றின் வடக்கே மலைகளுக்கு நெருக்கமாக இருந்த பகுதிகளில் வந்தது” என்று சந்திரா கூறினார்.

பிற இடங்களைப் போலவே, நிலப்பரப்பு மற்றும் மனிதர்களால் மாற்றப்பட்டிருந்த நிலப்பரப்பு போன்றவை இந்தியாவிலும் அந்த தொற்றுநோயை உருவாக்கின. வைரஸ் வேகமாகப் பரவுவதை ரயில் பாதைகள் உறுதிசெய்தன. அந்த ரயில் பாதைகளால் நன்றாக இணைக்கப்பட்டிருக்கும் நகரங்களில் அதிக அடர்த்தியாக மக்கள் வசிப்பதால், பொதுவாக கிராமப்புறங்களை விட மிக மோசமாக அவை பாதிக்கப்பட்டன. சமூக, பொருளாதார காரணிகளும்  தங்களுடைய அடையாளத்தை விட்டுச் சென்றன. தேவையான நேரத்தில் காலனித்துவ அதிகாரிகளால் செய்யப்பட்டிருந்த பொது சுகாதார ஏற்பாடுகள் செயலிழந்து போயிருந்தன. மருத்துவர்கள் அங்கே இல்லாமல் போயினர். அந்த 1918 ஆம் ஆண்டு கடுமையான காய்ச்சலைச் சமாளிக்க மேற்கத்திய  மருத்துவம் போதாததாகவே இருந்தது.

அந்த நேரத்தில் வைரஸ் என்பது புதியதொரு கருத்தாக இருந்தது. பெரும்பாலான மருத்துவர்கள் இந்த நோய் பாக்டீரியாவால் உருவாகியிருக்கும் என்றே நம்பினர். பணக்கார நாடுகளில்கூட, பலனளிக்கின்ற தடுப்பூசிகள் இல்லை. வைரஸ் தடுப்பு மருந்துகளோ, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோரைக் கொன்ற இரண்டாவது பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருந்திருக்க கூடிய நுண்ணுயிர்க் கொல்லிகளோ, அவை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், அப்போது இருந்திருக்கவில்லை. அதிசய மருந்தான ஆஸ்பிரின் கிடைத்தால் அதைப் பயன்படுத்துவது, இல்லாவிடில் விரக்தியடைந்து சந்தேகத்திற்குரிய  பல வண்ணமயமான மருந்துகளின் மீது போய் அனைவரும் விழுந்தனர். மேற்கத்திய மருத்துவம் இந்தியாவில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதால், நோய்வாய்ப்பட்ட பெரும்பாலான மக்கள் ஆயுர்வேத சிகிச்சை நோக்கி திரும்பினர். சில நேரங்களில் அவ்வாறான சிகிச்சைகள் ஏற்படுத்திய மோசமான விளைவுகளைத் தவிர, அவற்றில் எவை காய்ச்சலுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவனமாக மேற்கொள்ளப்பட்ட செவிலியமே, சில நேரங்களில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையில் தெளிவான வித்தியாசத்தை ஏற்படுத்திய ஒரே விஷயமாக இருந்தது. ஆனாலும் செவிலியம் என்பது இந்தியாவில் அப்போது ஆரம்ப நிலையிலேயே இருந்தது.

"இந்தியா எதிர்கொள்ளத் தயாராக இல்லாத நேரத்தில், இந்த தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கியது." என்று 1998ஆம் ஆண்டு ராமண்ணா குறிப்பிட்டார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல பகுதிகளிலும் பஞ்சத்திற்கான சூழ்நிலைகள் இருந்தன என்றும், 1918ஆம் ஆண்டு பருவமழை  தோல்வியடைந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்றும் நியூசிலாந்தின் வெலிங்டன் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் சேகர் பாண்டியோபாத்யா குறிப்பிடுகிறார். செப்டம்பர் மாதத்திற்குள், இரண்டாவது அலை வெடித்தபோது, நாடு கடுமையான  வறட்சியின் பிடியில் இருந்தது. ’மக்கள் தண்ணீருக்காக தவித்தார்கள்’, ’தண்ணீர் பெறுவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்; அவர்கள்  தண்ணீரைத் திருடினார்கள்’ என்று அமெரிக்க மிஷனரி ஒன்று தெரிவித்திருந்தது.

அப்போது பயிர்களின் வருடாந்திர முதல் அறுவடை செய்யப்படவிருந்தது. இரண்டாவது விதைப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நோயுற்றவர்கள் இந்த பணிகளைச் செய்து முடிக்கும் மனித ஆற்றல் அற்றவர்களாக இருந்தனர். ” உள்நாட்டு பற்றாக்குறையைப் போக்குவதற்கு எந்தவிதமான சலுகைகளையும் காலனித்துவ அதிகாரிகள் அளிக்கவில்லை. இலையுதிர்காலத்தில் துருப்புக்களுக்குத் தேவையான உணவை அளிப்பதற்காக கோதுமை மற்றும் அரிசியை தொடர்ந்து அவர்கள் ஏற்றுமதி செய்து வந்தனர். குறிப்பாக உணவு தொடர்பான பணவீக்கம் உயர்ந்தது. 1914ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் 147 ஆக இருந்த விலைக் குறியீடு, 1920ஆம் ஆண்டு 281ஆக உயர்ந்தது. இது எந்த சமூகத்திற்கும் அழிவையே ஏற்படுத்தும்" என்று பாண்டியோபாத்யா விளக்கியிருந்தார். 1918  அக்டோபரில், தொற்றுநோயின் இரண்டாவது அலை உச்சத்தை அடைந்தபோது, சரக்கு ரயில்களில் ஏறி மக்கள் தானியங்களைத் திருடத் தொடங்கியிருந்தனர். பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் அகதிகளாக பம்பாய் நோக்கி விரைந்தனர்.

"அனைத்து பகுதிகளிலும் அதிருப்தி உணர்வுகள் வலுவாக இருந்த காலகட்டம் அது " என்று பாண்டியோபாத்யாய் கூறுகிறார். இந்த அதிருப்தி அனைத்துப் பகுதிகளிலும் இருந்தாலும், மற்ற பகுதிகளை விட சில பகுதிகளை மட்டுமே அந்த காய்ச்சல் கடுமையாகத் தாக்கியது. சாதாரண காய்ச்சலைப் போன்று, முதியவர்களை, இளையவர்களை மட்டுமல்லாது, உலகெங்கிலும் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களை, குறிப்பாக  ஆண்களைக் குறிவைத்து அந்தக் காய்ச்சல் தாக்கியது. அந்த தாக்குதலிலிருந்து பெண்கள் பாதுகாப்புடன் இருந்ததாகத் தோன்றினாலும், அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. கர்ப்பமாக இருந்த பெண்கள் கருச்சிதைவுகளுக்கு ஆளாகி அதிர்ச்சியூட்டும் அளவில் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். நோய் குறித்து இருந்த பாலினச் சார்பு சில வயதினரிடையே உலகின் சில பகுதிகளில் தலைகீழாக மாறியிருந்தது என்றாலும், இந்தியாவில், ஒவ்வொரு வயதினரிடமும் அது தலைகீழாக மாறியிருந்தது. வேறுவிதமாகக் கூறினால், இந்திய ஆண்கள் மற்றும் சிறுவர்களைப் போன்று ஒரே மாதிரியாகவே இந்திய பெண்களும், சிறுமிகளும், பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கும்  காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் இது குறித்து முன்மொழியப்பட்ட விளக்கங்கள் இவ்வாறு இருந்தன:  ஒரு குடும்பத்தில் இருக்கின்ற வளங்களின் மீது ஆண்களுக்கு அதிக உரிமை உண்டு. அந்த வளங்களில் பற்றாக்குறை ஏற்படும்போது, பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதனாலேயே அதிக பாதிப்புக்குள்ளாகி, பட்டினியுடன் இருந்த பெண்கள், வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள்.

அந்த நேரத்தில் மற்றொரு உலகளாவிய பாதிப்பு எவ்வாறு இருந்ததென்றால், பணக்காரர்களைவிட ஏழைகளும் தொழிலாளர்களும் காய்ச்சலால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். அதற்கு இனமேம்பாட்டியல் அறிஞர்கள் கூறுவதைப் போல அவர்கள்  இயல்பிலேயே தாழ்ந்தவர்களாக இருந்தது காரணம் அல்ல.  வெளித்தெரியாமல் மறைந்திருக்கும் நோயைக் கொண்டிருப்பது, பட்டினியுடன்  இருப்பது, நெரிசலான மற்றும் ஆரோக்கியமற்ற  தங்குமிடங்களில் தங்கியிருப்பது, மருத்துவம் அல்லது  செவிலிய வசதிகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே அதற்கான காரணங்கள் ஆகும். சமூக விலக்கும் தன்னுடைய பங்கைக் கொண்டிருந்தது. குஜராத்தில் தொலைதூரத்தில் காடுகள் நிறைந்த டாங்ஸ் பகுதி, பெரும்பாலான இந்திய நகரங்களை விட அதிகமாக தன்னுடைய மக்கள்தொகையை இழந்தது என்று 2012ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர் டேவிட் ஹார்டிமன் குறிப்பிட்டுள்ளார். இது ’கிராமப்புறத்திற்கென்று இருந்த நன்மை’ விதியை மீறியிருந்தது. காரணம், டாங்ஸ் ஆதிவாசிகளின் தாயகமாக இருந்தது. பிரிட்டிஷார் மற்றும்  பிற இந்தியர்கள் அவர்களை காட்டில் வாழுகின்ற பின்தங்கிய பழங்குடியினராகவே கருதினர்.

தொற்றுநோய் கடந்து சென்ற பிறகு, இது ஒரு “தேசிய பேரிடர்” என்பதை இந்திய நல்வழ்வு ஆணையர் உணர்ந்தார். ஆனால் அது உச்சத்தில் இருந்த போது, அதைச் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்த அரசாங்கம் உதவிக்கு வேண்டுகோள் விடுத்தது. தேசிய சுதந்திரப் போராட்டத்துடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த குஜராத் சபா போன்ற அமைப்புகளிடமிருந்து சரியான உதவி வந்து சேர்ந்தது. பலர் சமூக சீர்திருத்தத்தில் தீவிரமாக இறங்கி, உள்ளூர் சாதி மற்றும் சமூக அமைப்புகளை அணிதிரட்டினர். உதாரணமாக, குஜராத்தின் சூரத் மாவட்டத்தில், சுதந்திர போராளிகளான கல்யாண்ஜி, குன்வர்ஜி மேத்தா என்ற இரண்டு இளம் சகோதரர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆதிவாசிகள் மற்றும் பிற சுதந்திரப் போராளிகளுடன், குறிப்பாக தயால்ஜி தேசாய் போன்றோருடன் தொடர்பு கொண்டு, அவர்களுடைய காய்ச்சல் நிவாரணப் பணிகள் நடைபெற்றன. தங்களுடைய முயற்சிகளுக்கு நிதியளித்த தேசிய சுதந்திர இயக்கத்துடனான உறவை அவர்கள் வலுப்படுத்திக் கொண்டனர். மிகக்குறைவான மதிப்பீட்டில், சூரத்தில் மட்டும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் மற்றும் தலித்துகள் உட்பட 10,000 பேருக்கு அவர்கள் உதவியதாகக் கூறப்படுகிறது.

அறிவார்ந்த வட்டாரங்களில் 1918வாக்கில், தேசத்தின் எதிர்காலத் தலைவராக காந்தி காணப்பட்டார், ஆனால் அவருக்கு அடிமட்ட ஆதரவு இருக்கவில்லை. அந்த வசந்த காலத்தில், தனது சொந்த மாநிலமான குஜராத்தில், அவர் தனது முதல் இரண்டு சத்தியாக்கிரகங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பெரும் எண்ணிக்கையில் இல்லை என்றாலும், ஆயிரக்கணக்கான மக்கள் அவற்றில் கலந்து கொண்டனர். இலையுதிர்காலத்தில் மீண்டும் காய்ச்சல் திரும்பியபோது, அவரது ஆசிரமத்தைப் பகிர்ந்து கொண்ட சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் மற்ற முன்னணி உறுப்பினர்களான, குறிப்பாக வல்லமைமிக்க நூற்பு ஆசிரியர் கங்காபென் மஜ்முந்தர், ஆரம்பகால சத்தியாக்கிரகங்களில் ஒன்றை ஒழுங்கமைக்க உதவிய சங்கர்லால் பரிக் ஆகியோருடன், காந்தியும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.  பேசவோ படிக்கவோ முடியாத அளவுக்கு காந்திக்கு காய்ச்சல் இருந்தது. பேரழிவு உணர்வை தாங்கிக் கொள்ள முடியாத அவர், "வாழ்க்கை மீதான அனைத்து ஆர்வமும் தொலைந்து போனது" என்று பின்னர் தனது சுயசரிதையில் எழுதினார்.

நவம்பரில், தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் விளைவாக, ஐரோப்பாவில் போர்  முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.  காந்தி இன்னும் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தார். பின்னோக்கி கண்டறிதல் என்பது மிகவும் நம்பமுடியாதது என்றாலும், அவரது நுரையீரலில் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று ஏற்பட்டதன் விளைவாக நிமோனியா உருவாகியதால், அவரது நோய் இவ்வளவு காலத்திற்கு நீடித்தது என்றே கொள்ளலாம். ரௌலட் அறிக்கை வெளியிடப்பட்டது. வைஸ்ராயின் சட்டமன்றக் குழுவில் இருந்த நீதிபதி சிட்னி ரௌலட், ராணுவச் சட்டத்தை அமைதிக்காலத்திற்கும் நீட்டிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார். யுத்த காலம் முழுவதும், குடிமை உரிமைகள் இடைநிறுத்தப்பட்டன. அதாவது குற்றச்சாட்டுக்கள் எதுவுமின்றி இந்தியர்கள் கைது செய்யப்பட்டு, நடுவர் மன்றம் இல்லாமல் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். தேசத்துரோகம், பயங்கரவாதம் போன்றவை அவ்வாறான சூழல்  இருப்பதை யாயப்படுத்துவதாக ரௌலட் கண்டறிந்தார். அதிக சுதந்திரத்தை எதிர்பார்த்திருந்த இந்தியர்களுக்கு அதிக  அளவிலான அடக்குமுறையே கிடைத்தது. இது அவர்களை அதிக அளவிற்கு ஆத்திரமூட்டுவதாகவே இருந்தது. "1918 முதல் இந்தியா முழுவதும் சமூக மற்றும் அரசியல் அமைதியின்மை இருந்தது. அந்த அமைதியின்மையின் சமூகப் பின்னணிகளில் ஒன்றாக இந்த தொற்றுநோயும், பஞ்சமும் இருந்தன" என்று பாண்டியோபாத்யாய்  குறிப்பிடுகிறார்.

1919 பிப்ரவரியில் ரௌலட் மசோதா  சட்டமாக நிறைவேற்றப்பட்டது. காந்தி  இன்னும் பலவீனமாகவே இருந்தார்: “அந்த  நேரத்தில் கூட்டங்களில் என்னால் குரல் எழுப்பி பேச முடியவில்லை. கூட்டங்களில் நின்று கொண்டு பேசுவதற்கு இயலாமை தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. எனது உடல் முழுதும் நடுங்கும், நீண்ட நேரத்திற்கு நின்று பேசும் போது, கடும் துடிப்பு ஏற்படும்” என்று எழுதியது, அவர் அந்த சந்தர்ப்பத்தை சரியாக எதிர்கொள்ளவில்லை என்ற பொருளைத் தராது. ’கறுப்புச் சட்டம்’ என்று அவர் அழைத்த சட்டத்திற்கு எதிரான தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, சத்தியாகிரகத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார். சூரத்தில் தயாள்ஜி தேசாய், கல்யாண்ஜி மேத்தா ஆகியோர் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டனர். பொதுவாக சாதித் தடைகளால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த இருவரும், “தாலு-காலு” என்ற புனைபெயரில் இப்போது சுயராஜ்யத்திற்கான அந்தப் போராட்டத்தில்  ஒன்றிணைந்திருந்தனர்.

1919 ஏப்ரல் 13 அன்று ரௌலட் சட்டத்திற்கு எதிராக அமிர்தசரஸில் நடைபெற்ற சத்தியாக்கிரகம், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்ட் டையர் தனது படைகளை ஜாலியன்வாலா பாக் தோட்டத்திற்கு அனுப்பி, நிராயுதபாணியாக நின்றிருந்த கூட்டத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற துயர நிகழ்வுகளில் முடிவுற்றது. 1920இல், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சிறப்பு அமர்வு கல்கத்தாவில் நடைபெற்றது. பம்பாயிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயிலில் காந்தியுடன் சென்றவர்களில், இந்த மேத்தா சகோதரர்களும் அடங்குவர். நாடு தழுவிய சத்தியாக்கிரகத்திற்கான தனது அழைப்பை காங்கிரஸ் ஆதரிக்குமேயானால், ஓராண்டிற்குள் சுயராஜ்யம் கிடைத்து விடும் என்று காந்தி அளித்த உறுதியால், குன்வர்ஜி மேத்தா ஈர்க்கப்பட்டர். குஜராத்திற்குத் திரும்பிய அவர், அதற்காக ஐந்து நகரங்களில் உரையாற்றினார். 1921ஆம் ஆண்டு 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பலரும் கலந்து கொண்டனர். காந்தியின் வாக்குறுதி சற்று முன்கூட்டியே  கூறப்பட்டதாக மாறியது. ஆனாலும் 1921வாக்கில், அவருக்கு அடிமட்ட ஆதரவை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக, லட்சக்கணக்கான சாதாரண இந்தியர்களுக்கு நிவாரணத்தைக் கொண்டு வந்த  சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு  நன்றி தெரிவிக்க வேண்டும்.

அமிர்தசரஸில் நடந்த கொடூரமான சம்பவங்களுக்குப் பத்து நாட்களுக்குப் பிறகு, சுதந்திரத்திற்கு ஆதரவாக இருந்து வந்த யங் இந்தியா இதழில் தலையங்கம் எழுதப்பட்டது. ’பொது சுகாதாரம்’ என்ற தலைப்பில், இன்ஃப்ளூயன்ஸாவால் பம்பாய் தெருக்களில் 60 லட்சம் மக்கள் – அந்த இழப்பின் சமகால இந்திய மதிப்பீடு – ’நாதியற்று எலிகள் போன்று’ இறந்து போக  அனுமதித்த  அரசாங்கத்தார் இன்னும் சிலர்  துப்பாக்கி குண்டுகள் மூலம் இறந்தாலும் கவலைப்பட மாட்டார்கள் என்றிருந்த  அந்த தலையங்கம் நாட்டின் இருண்ட மனநிலையை பிரதிபலித்தது. 1921ஆம் ஆண்டில், அதே  மனநிலையை நிராலா  தனது வழியில்  வெளிப்படுத்தினார். அவர் ’பிச்சைக்காரர்’ என்ற தலைப்பில் கவிதை எழுதினார். அதில் பின்வரும் வரிகள் இருந்தன:

’அவர்களின் உதடுகள் பட்டினியால் சுருங்கும்போது

என்ன கூலி கிடைக்கும்

பெருந்தன்மையுள்ள இறைவனிடமிருந்து?

சரி, நீங்கள் உங்கள் கண்ணீரைக்  குடிக்கலாம்’.

உலகம் கொடூரமானது, உணர்ச்சிவசப்படுவதற்கு அதில் இடமில்லை என்று நிராலா அறிந்து கொண்டிருந்தார். அவரது சக எழுத்தாளரும், காய்ச்சலில் இருந்து தப்பியவருமான முன்ஷி பிரேம்சந்த், நாட்டில் உள்ள சாதாரண மக்களுடைய வாழ்க்கையின் கடுமையான யதார்த்தங்களை விவரித்து தனக்கான இடத்தை பெற்றுக் கொண்டவர்.  அவரது கதைகள் திருத்தப்படாத மற்றும் சில நேரங்களில் கவனிக்கப்படாத அநீதிகளால் நிரம்பியிருந்தன. 1918ஆம் ஆண்டில், ஐக்கிய மாகாணங்களில் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தபோது, அவர் சுயமான ’கிராம வாழ்க்கை வரலாற்றாசிரியர்’ ஆனார்.

கலை, அரசியல் இரண்டிலும் தன்னுடைய தடயத்தை விட்டுச் சென்ற தொற்றுநோய், இந்தியாவை இன்னும் ஆழமான முறையில் வடிவமைத்துச் சென்றது. அந்தப் பேரழிவில்  எத்தனை இந்தியர்கள் இறந்தார்கள் என்பதைக் கணக்கிட்ட சந்திரா, நோய்க்கு முன்னர் இருந்த குறைவாக இருந்த மக்கள்தொகை வளர்ச்சி, நோய்க்குப் பின்னர் அதிகரித்திருப்பதைக் கண்டுபிடித்தார்.  பொதுவாக வறட்சி, பஞ்சம் மற்றும் போர் ஆகியவை முந்தைய மந்தநிலைக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால் 1920களில் மக்கள்தொகை வளர்ச்சியை ஏதோவொன்று துரிதப்படுத்தியிருந்தது. அந்த காரணி 1918 காய்ச்சல்  தொற்றுநோயாக இருக்குமா?

அது ஒன்றும் கேள்விக்குரியதாக இருக்கவில்லை. 1919ஆம் ஆண்டு நாட்டில் பிறப்பு 30சதவிகிதம் குறைவை சந்தித்திருந்த போதிலும், கருவுறுதல் 1920இல் தொடங்கி காய்ச்சலுக்கு முந்தைய நிலைக்கு திரும்பியது மட்டுமல்லாமல், அது முந்தைய அளவையும் தாண்டியது. இவ்வாறு குழந்தை பிறப்பு அதிகரிப்பு என்பது உலகின் பிற பகுதிகளிலும் காணப்பட்டது.  அந்த எல்லைப் பகுதியில் இருந்து ஆண்கள் திரும்பி வந்ததைத் தொடர்ந்து இவ்வாறு நடந்தது என்று இது குறித்து புதிய கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்டன. ’காசநோய், மலேரியா மற்றும் பிற நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த, உடற்தகுதியவற்றவர்களை அந்த காய்ச்சல் அழித்து நீக்கி விட்டதன் மூலம், சிறிய ஆனால் ஆரோக்கியமான மக்கள்தொகையை விட்டுச் சென்றிருக்கலாம். அவ்வாறு உயிர் பிழைத்தவர்கள் தங்களிடமிருந்த உறுதியான ஆரோக்கியத்தின் காரணமாக, அதிக விகிதத்தில் இனப்பெருக்கம் செய்யக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள். 1920களில் இந்தியாவில் தொடங்கிய மக்கள்தொகைப் புரட்சிக்கும் இதுவே காரணமாக இருந்திருக்கலாம்’ என்பது ஆய்வாளர்கள் தற்போது ஆராய்ந்து வருகின்ற மற்றொரு கோட்பாடாக இருக்கிறது. .

அந்த ஆண்டுகளில் நடந்த அனைத்தையும் தனிப்பட்ட சோகம், கூட்டு பின்னடைவு ஆகிய இரண்டும் வடிவமைத்தன, எனவே 1918 இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோய் நமக்கு வேறு பல பாடங்களை, குறைந்தபட்சம் எந்தவொரு தேசமும் தொற்று நோய்க்கிருமிகள் குறித்து கவலைப்படாத தனித்தீவாக இருக்க முடியாது என்ற பாடத்தைக். கற்பித்துக் கொடுத்துள்ளது. மற்றுமொரு காய்ச்சல்தொற்று தவிர்க்க முடியாதது என்பதை நாம் நன்கு அறிவோம். அறிவியலாளர்களும், பொது சுகாதார நிபுணர்களும்  தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றாலும், அது எப்போது அல்லது  எங்கே வெளிப்படும், எவ்வளவு மோசமாக அது இருக்கும் என்பதை அவர்களால் இன்னும் கணிக்க முடியவில்லை. தொற்றுநோய் என்பது உயிரியல் மற்றும் சமூக நிகழ்வு என்பதே 1918 நமக்குக் கற்பித்துச் சென்றிருக்கும் மிக முக்கியமான பாடமாகும்.  அந்த நோய் ஏற்படுத்தியிருந்த உயிரியல் மற்றும்  சமூக விளைவுகள் என்ற பரிமாணங்களில் ஒன்றை  நாம் புறக்கணித்தாலும், அவ்வாறு  செய்ததற்கான விளைவுகளுக்கான முழு பொறுப்பும் நம்மைச் சார்ந்ததாகவே இருக்கும்.  

 

;