tamilnadu

img

குமார், ஆனந்தன் நினைவு நாள் - காலத்தை வென்றவர்கள்

1999ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி யின் அந்த கொடூர இரவு இப்போ தும் மறக்க முடியாத இரவாய் அசைந்தாடிக் கொண்டே இருக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழி யர்களுக்கும் அந்த இரவு மறக்கமுடியாத இரவுதான். இரண்டு போராளிகள், அதுவும் இளம் தோழர்கள், அவர்கள் குடும்பத்தின் எதிர்காலக் கனவுகள், அவர்களின் காதல் கதைகள், அவர்கள் சந்ததியின் தொடர் கண்ணிகள் அறுபட்டது, தேசத்தின் அடையாளமான கூலிப் பட்டாளத்தால் கருவறுக்கப்பட்ட கதை இது. சமூகத்தின் மீது ஆளும் வர்க்கத்தின் அக்கறையற்ற அரசியல் விளையாட்டின் அத்தாட்சிகள் அவர்கள். காவல்துறை ஏவல்துறையாய் மாறும் என்பதன் இரத்த சாட்சிகள் அவர்கள். அவர்கள், குமார் - ஆனந்தன் என்ற மாவீரர்கள். மக்கள் வாழ்வின் உன்னதத்திற்காக கடலூர் மண்ணில் விதைக்கப்பட்ட வீரிய விதைகள்.  காட்டுநாயக்கர் என்ற இருளர் சமூகத்தில் படித்து முன்னுக்கு வந்த முதல் தலைமுறை இளைஞன் குமார், காவல்துறையில் வேலை கிடைத்து சாதி சான்றிதழ் கிடைக்காமல் காத்திருந்தான்.

ஆனந்தன் சிறுவயதில் தந்தையை இழந்து பள்ளி படிக்கும் பருவத்தில் வேலைக்குச் செல்லும் நிலையில் வளர்ந்தவன். இந்த இரு இளைஞர்களும் கடலூர் புதுப்பாளையம் பகுதியில் நற்பணி மன்றத்தில் பல சமூகச் சேவைகளை செய்துவந்தனர். அப்போது அவர்களுக்கு அறிமுகமான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அவர்களைத் தனது நடவடிக்கையால், போராட்ட குணத்தால் ஈர்த்தது.தெருவை மட்டும் சுத்தம் செய்தால் போதாது. தேசம் முழுவதும் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற அரசியலைப் புரிந்துகொண்ட அந்த இருவரும் சிகப்பு நட்சத்திரம் பொறிக்கப்பட்ட வெள்ளைக் கொடியை கையில் ஏந்தி கடலூர் நகராட்சியின் அவலங்களை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளையும் எதிர்த்துப் போராடக் கற்றுக்கொண்டனர். இந்நிலையில் கெடிலம் ஆற்றின் கரையில், புதுப்பாளையம் பகுதியில் கள்ளச்சராயம் எல்லை மீறி ஓடத்துவங்கியது. பெண்கள் மாலை வேலையில் வெளியே வரவே அஞ்சினர், இளம் தலைமுறை சாராயத்திற்கு அடிமையாகும் கொடூரம் அரங்கேறத்துவங்கியது. வாலிபர் சங்கத் தோழர்கள் காவல்துறையினருக்கு மனுகொடுக்கத் துவங்கினர். காவல்துறை வாரா வாரம் ஒப்பந்தம் போட்டு மாமூல் பெறுவதால் அக்கடைகளை அப்புறப்படுத்துவதுபோல் நடிப்பார்கள். பிறகு மீண்டும் கடைகள் இயங்கத்துவங்கும். மீண்டும் மனு, மீண்டும் காவல்துறை நாடகம் என தொடர்ந்தது. 

ஒருகட்டத்தில் வாலிபர் சங்கத்தின் தொடர் இயக்கத்தால், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலையீட்டால் கள்ளச்சாராய கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். சிலமாதங்கள் அவர்களால் கடைகளை நடத்த முடியவில்லை. கடைகள் மூட காரணமாக இருந்த வாலிபர் சங்கதோழர்கள் மீது கள்ளச்சாராய வியாபாரிகள் வன்மத்துடன் திரிந்தனர்.  வாலிபர் சங்க தோழர் கனகராஜ் 1998ம் ஆண்டு பட்டபகலில் மார்க்கெட் பகுதியில் விரட்டிவிரட்டி கொடூரமாக வெட்டப்பட்டார், அவர் பிழைத்ததே அதிசயமானது. அதைகண்டித்து இயக்கங்கள் நடத்தப்பட்டன. அப்போதே காவல்துறை விழித்துக் கொண்டிருந்தால் ஓராண்டு கழித்து இரண்டு உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும். ஆனால் ஆளும் கட்சி பிரமுகர்கள், காவல்துறை கரும் புள்ளிகள், கள்ளச்சாராய வியாபாரிகள் என்ற முக்கோணக் கூட்டு ஒன்றாய் நின்றதால் உத்வேகம் பெற்ற சமூகவிரோதிகள் கூட்டம் 1999 ஆம் ஆண்டுஜூன் மாதம் கூலிப்பட்டாளத்தைத் தயார் செய்தது.  

ஆனால் காவல்துறையின் மிகமோசமான அலட்சியத்தால், அன்று இரவு, தேசத்தை நேசித்த அந்த இரண்டு இளைஞர்களும் வெட்டி வீழ்த்தப்பட்டனர். இதோ அந்த சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது சாராய கடைகளை அரசாங்கமே ஆகப்பெரும் உற்சாகத்துடன் நடத்திக்கொண்டிருக்கிறது. இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாவது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலையும், கல்வியும் கேட்டு உயரவேண்டிய இளைஞர்களின் கரங்கள் போதையால் நடுங்கிக்கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து மட்டுமல்ல, சாதிய கலவரங்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் மட்டுமல்ல, போதை கலாச்சாரத்திற்கு எதிராகவும் ஆயிரக்கணக்கான குமார் - ஆனந்தன்கள் போராடி வருகின்றனர். 

;