சீன மார்க்சிய சிந்தனையாளர் லியோசோஷி “சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எவ்வாறு ?” என்ற நூலில் சிறந்த கம்யூனிஸ்ட்டுகளுக்குரிய விளக்கங்களை அளித்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள அத்துணைஇலக்கணங்களுக்கும் பொருந்தக் கூடி
யவராக தோழர் தங்கவேல் வாழ்ந்துள்ளார்.ஒருகம்யூனிஸ்ட் தனது சொந்த நலன்களை விட கட்சியின் நலன்களை மேலானதாக கருத வேண்டுமென்ற கருத்தை லியோசோஷி விளக்கியுள்ளார்.அதனை வாழ்க்கை நெறியாகவே கடைப்பிடித்து வாழ்ந்தவர் தோழர் கே.டி.ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எதிர்நோக்கும் பிரச்சனைகள், அதன் தொடர்பாக வருகிற சர்ச்சைகள்போன்றவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து லியோசோஷி வழிகாட்டுகிறார். கோட்பாடு மற்றும் கொள்கை சார்ந்திருக்கிற பிரச்சனைகளில் சமரசம் இல்லாத, சரணாகதி அடையாத உறுதியோடு, கட்சி கோட்பாடுகளை பாதுகாக்க போராட வேண்டும். அதே நேரத்தில் கொள்கை, கோட்பாடுகள் தொடர்பில்லாத சாதாரண நடைமுறை சர்ச்சைகள் வந்தால், கூடிய வரை சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வழிகாட்டினார்.
இந்த அணுகுமுறைக்கு ஒரு வாழும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் தோழர் தங்கவேல். தமிழகத்தில் மார்க்சிய அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயங்குவதற்கு பக்குவமும் முதிர்ச்சியும் கொண்ட ,அனுபவம் வாய்ந்த பல தோழர்களின் வழிகாட்டுதல்களும், அவர்களது அயராத உழைப்பும்தான் முக்கியக் காரணம். கொள்கைகளில் குறிப்பாக, உழைக்கும் வர்க்க நலன் சார்ந்த, இயக்க நலன் சார்ந்த பிரச்சனைகளில் சமரசமற்ற போராளிகளாக கம்யூனிஸ்ட்டுகள் எப்போதுமே செயல்பட்டு வந்துள்ளனர். தமிழகத்தில் இந்த பாரம்பரியத்தை வலுப்படுத்த எத்தனையோ தலைவர்கள் பங்காற்றியுள்ளனர். அவர்களில் முக்கியமான ஒருவராக தமிழக கட்சி வரலாற்றில் தோழர் தங்கவேல் கருதப்படுவார்.
தோழர் கே.தங்கவேல் அவர்களின் எளிமை, அமைதி, அடக்கம், உழைப்பு, திட்டமிட்டசெயல்பாடு, தன்னை முன்னிறுத்தாமல் இயக்கத்தை முன்னிறுத்தும் பாங்கு என அவரது குண நலன்களை பற்றிச் சொல்வதற்கு நிறையஉண்டு. மாணவர் இயக்கத்தில் நான் செயல்பட்டபோது, அவர் ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளர். பெரும் பொறுப்பு இருந்தாலும், இளைஞர், மாணவர்களோடு நெருக்கத்துடன் பழகி அவர்களை வளர்த்தெடுக்கும் பணியை அக்கறையுடன் மேற்கொள்வார்.2009 நாடாளுமன்ற தேர்தலின்போது சாதிய அறைகூவல் மக்களை பிளவுபடுத்தி பிரிக்கும் நிலை வந்த போது, அது உழைக்கும் மக்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை விளக்கி, ஒற்றுமையை ஏற்படுத்த அவர் முயன்றது மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. அந்த பிளவு சக்திகள் அவர் மீது கோபம் கொண்டு எதிர்த்தபோதும், அப்பணியை அவர் விடாமல் முன்னெடுத்தார். தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் உழைக்கும் வர்க்க ஒற்றுமை காப்பதில் அக்கறை கொண்டிருந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனம் என்பது இதரகட்சிகளை போன்றதல்ல. ஸ்தாபன கோட்பாடுகளைத் துல்லியமாகப் பின்பற்றினால்தான் அது கம்யூனிஸ்ட் கட்சி. எங்கே தடம் மாறுகிறது என்பதை ஸ்தாபன விவாதங்களில் தோழர் கே.டி. எடுத்துரைக்கும்போது, அதிலும் மிக நுட்பமான விஷயங்களை மிக எளிமையாக, வாழ்க்கை அனுபவங்களுடன் அவர் பேசுகையில் வியப்பாக இருக்கும். அப்போதெல்லாம், மார்க்சிய லெனினியத்தின் கோட்பாடுகளை எப்போது, எப்படி கற்றார் என்ற கேள்வி தோன்றும். வர்க்கப் போராட்டம் அவருக்கு அதனை கற்றுத் தந்திருக்கிறது. அத்துடன் பரந்த வாசிப்பும் அவரிடம் சேர்ந்திருந்தது. அதனால்தான் பிரச்சனைகளை நுட்பமாக ஆராய்ந்து தெளிவாக்கிடும் திறன் கொண்டவராக தோழர் கே.டி.திகழ்ந்தார். தோழர்கே.டியின் எளிமை என்பது தோற்றத்தில், பழகுவதில் மட்டுமல்ல; சிக்கலான சூழ்நிலைகளை சரியாகப் புரிந்து, எளிமையாக விளக்கி, மார்க்சியஉள்ளுணர்வோடு வழிகாட்டுதல் அளிப்பதில்தான் அவரது எளிமை பளிச்சிடும்.அவர் வெளிப்படுத்தும் நகைச்சுவையும் எளிமையானது. அன்றாட வாழ்க்கை, நிகழ்வுகளை வைத்து அவரது நகைச்சுவை வெளிப்படும். அது வெடிச்சிரிப்பை கூடி இருப்பவர்களிடம் வரவழைக்கும். பிரச்சனைகளை இவ்வாறு நகைச்சுவையுடன் விளக்கி, முக்கிய கொள்கை பிரச்சனைகளை எளிமையாக எடுத்துரைத்து, கட்சி தோழர்களுக்கு புரிதலை ஏற்படுத்துவார்.
கிளர்ச்சி, பிரச்சார செயல்பாடுகளில் கே.டி.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிளர்ச்சி, பிரச்சாரம் என்ற இரு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதுண்டு. மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகிற அன்றாடப் பிரச்சனைகளில், ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மையமாக வைத்து தலையிடுவதை “கிளர்ச்சி” குறிக்கிறது. அதில் அரசின் மெத்தனப் போக்கு, மக்கள் விரோதப் போக்கு என அனைத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தும் பணி கிளர்ச்சி எனப்படுவது. தோழர் கே.டி. அவர்கள் வளர்ந்த திருப்பூர், கோவை மாவட்டங்களில் அவ்வப்போது எழுந்து வந்த மக்கள் பிரச்சனைகளில் இடையறாது கட்சி தலையிட வழிகாட்டி வந்துள்ளார். அதேபோன்று அவர் பொறுப்பாக இருந்து வழிகாட்டிய பல மாவட்டங்களிலும் மக்களின் பிரச்சனைகளில் கட்சி தலையிட செய்து வழிகாட்டி வந்துள்ளார்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் கிளர்ச்சியுடன் இணைந்ததாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டப்பட்டுள்ளது. இங்கு சாதாரண அர்த்தத்தில் “பிரச்சாரம்” என்கிறசொல் பயன்படுத்தப்படுவதில்லை. பிரச்சாரம் என்பதற்கு ஒரு உயரிய பொருளுண்டு. பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பிட்ட பிரச்சனையையொட்டி, திரட்டி, அரசுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு நின்றுவிடாமல், அந்தப் பிரச்சனைக்கு பின்னணியாகஉள்ள முதலாளித்துவ அமைப்பை அம்பலப்படுத்த வேண்டும். அந்த அமைப்பு உழைக்கும்பாட்டாளி வர்க்கத்திற்கு எந்த அளவிற்கு எதிரானது என்றும், லாப வேட்டை நடத்துவதையே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்பதுபோன்ற கருத்துக்களை கொண்டு செல்வதுதான் பிரச்சாரம் எனப்படுவது. கம்யூனிஸ்டுகள் கிளர்ச்சியாளர்களாக மட்டும் இருக்கக்கூடாது; பிரச்சாரம் செய்யும் சித்தாந்த ஆசிரியர்களாகவும் இருக்க வேண்டும் என்றுலெனின் வலியுறுத்தியுள்ளார். அதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் தோழர் கே.தங்கவேல்.
கட்சி கல்விக்கு பங்களிப்பு
மக்கள் பிரச்சனைகளில் தலையிட கட்சிக்கு வழிகாட்டுதலோடு கட்சி உறுப்பினர்களுக்கு கட்சி கல்வி புகட்டும் பெரும் முயற்சிகளை தோழர் தங்கவேல் மேற்கொண்டார். பலமுறை தமிழகத்தினுடைய கட்சியின் மாநில கல்வி குழுவில் அங்கம் வகித்து பணியாற்றியுள்ளார். மாவட்டங்களில் ஏராளமான வகுப்புகளை எடுத்துள்ளார். அதில் குறிப்பாக ஸ்தாபன செயல்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆழமான வகுப்புகளை அவர் எடுத்துள்ளார்.
கட்சிக்குள் ஜனநாயகம், மத்தியத்துவம் மற்றும் விமர்சனம், சுயவிமர்சனம் போன்ற கோட்பாடுகள் உண்டு. இதர கட்சிகளில் தனிநபர் அல்லது தனிநபர்களை மையமாக வைத்தே செயல்பாடுகள் இருக்கும். ஆனால் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஜனநாயகரீதியாக விவாதம் நடத்தி கூட்டாக விவாதித்து முடிவுஎடுக்கப்படும். ஜனநாயகரீதியான விரிவானவிவாதம் நடத்தி முடிவு எட்டப்பட்ட பிறகு அனைவரும் ஒரு மனதோடு ஒரே குறிக்கோளோடு, ஒரே இலக்கோடு செயலாற்றும் சிறப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமே உண்டு.
இந்தக் கோட்பாடுகளை எளிமையாக, வாழ்க்கை நடப்புகளில் இருந்து பல உதாரணங்களை பயன்படுத்தி மிகச்சிறப்பாக வகுப்பெடுப்பார். அவர் நேர நிர்வாகம் பற்றி எடுத்த வகுப்புகள் வெறும் முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்வாக தலைவர்களுக்கு மட்டுமல்ல; முதலாளித்துவ நிறுவனங்கள் சொந்த லாபத்துக்காக நேரம் தவறாமையை கடைப்பிடிக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுகள் மக்கள் பிரச்சனைகளில் தலையிடுவது, இயக்கம் கட்டுவது, சோசலிச மாற்றம் போன்ற இலட்சியங்களை கொண்டிருப்பதால் நேரம் அவர்களுக்கு மிக முக்கியமானது; அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி அதற்கான வழிமுறைகளை மிக எளிமையாக தோழர் கே.டி. விளக்குவார்.
அர்ப்பணிப்பு உணர்வு, கம்யூனிச இலட்சியங்களின் மீதான அவருடைய பற்று போன்றவை தோழர் கே.டியின் மேலான பண்புகள். அவரது அயராத உழைப்பு,கட்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மாண்பு, கம்யூனிசக் கோட்பாடுகளை பின்பற்றும் உறுதி ஆகியன என்றென்றும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்டும் வரலாறாக அமைந்திடும்.
===என்.குணசேகரன்===
மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)