தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமான கோவையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள்அதிகம் பதிவாகி வருகின்றன. கோவை மாநகரில் மட்டும் ஜனவரி முதல் செப்டம்பர்மாதம் வரை 52 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 26 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டும் ஏறத்தாழ 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டுஜனவரி முதல் டிசம்பர் வரை மொத்தமாகவே 40 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போக்சோ வழக்கு பாயவில்லை – பதியப்படுகிறது
இதுகுறித்து யுனிசெப் அமைப்பைச்சேர்ந்த தேவநேயன் கூறுகையில்,இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது என எழுதப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த சட்டம் பாயவில்லை. வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்யப்படுகிறது அவ்வளவுதான். நூறு வழக்குகளில் 14 வழக்குகளில் கூட குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை. இதர வழக்குகள் எல்லாம் நீர்த்துப்போய்விடுகிறது.தமிழகம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. பீகார், ஒரிசாவைக்காட்டிலும் பின்தங்கி உள்ளோம் என்பது வேதனை. 18 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உள்ளது.மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம் போல் சட்டம் சார்ந்த ஆணையமாக இந்த ஆணையம் உள்ளது. இது குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், வளர்ச்சி, அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை அனைத்தையும் கண்காணிப்பது இந்த ஆணையத்திற்கு முக்கிய பணி. இந்த ஆணையத்திற்கு சுயமாகவே அதிக அதிகாரம் உள்ளது. கடந்தஓராண்டுக்கு முன்பு கேரளாவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சுகாதாரத்துறை அமைச்சரையே நேரில் வரவழைத்து விசாரணை செய்துள்ளது. அந்த அளவிற்கு கேரளாவில் இவ்வமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிராக அரசு திட்டம் வகுத்தாலும் இதில் தலையீடு செய்கிற அளவிற்கு அதிகாரம் உள்ள அமைப்பாக இது உள்ளது.
தலைவர் இல்லா தமிழக ஆணையம்
ஆனால், தமிழகத்தில் கடந்த ஜனவரியில் இருந்து இவ்வமைப்பிற்கு தலைவரேகிடையாது. மே மாதத்தில் இருந்து உறுப்பினர்களே கிடையாது. மார்ச் 23 ஊரடங்குக்கு பிறகு இந்த ஆணையத்தின் செயல்பாடு அறவே இல்லை என்கிற நிலைதான் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் மட்டும் 1500 குழந்தைகள் திருமணம்நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுபோக பாலியல் வன்முறை சம்பவங்கள் அன்றாடம் அதிகரித்து வருகிறது.பதியப்படும் போக்சோ வழக்குகள் பலவீனமடைந்தது என்பது குறித்தெல்லாம் கண்காணிக்க வேண்டிய இந்த ஆணையத்திற்குத்தான் தலைவரும் இல்லை; உறுப்பினர்களும் இல்லை.ஆகவேதான் குழந்தைகள் பாதுகாப்பிற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. உண்மையில் இங்கு என்ன நடக்கிறது என்றால் ஏதாவது ஒரு இடத்தில் ஒருகுழந்தை மரணித்துவிட்டால் அங்கு கூடுவார்கள். யூனியன் ஜஸ்டிஸ் அமைப்பு, குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பு, சைல்டு லேபர், சைல்டு அன்டு வெல்பர் போலீஸ், குழந்தைகள் உரிமைகள் அமைப்பு என பல்வேறுமுகமூடிகளை அணிந்து கொண்டு வருவார்கள். மக்களின் வரிப்பணத்தில் செயல்படுகிற இந்த அமைப்புகள் களத்தில் குழந்தைகளின் நிலை குறித்த எந்த உருப்படியானநடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. குழந்தைகள் திருமணத்தை தடுப்பதற்கோ, குழந்தை தொழிலாளர்களாக இருப்பது பற்றியோ, பாலியல் வன்முறையை தடுப்பதற்கோ.இதுபோன்ற அவலம் நடப்பதற்கான காரணம் குறித்து ஆய்வதற்கோ களத்தில் செயல்படுவதில்லை. மாறாக ஒரு குழந்தை இறந்துவிட்டால் அங்கு கூடுவதற்கும் அறிக்கை அனுப்புவதற்கும்தான் இவ்வமைப்புகள் எதார்த்தத்தில் செயல்படுகின்றன. இதுபோன்ற அமைப்புகளை கண்காணிப்பதற்கு மாநில அமைப்பே கிடையாது. 16 மாவட்டத்தில்தான் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர்கள் உள்ளனர். 21 மாவட்டங்களில் அலுவலர்களே கிடையாது. இதுதான் தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பின் லட்சணம் என்று தெரிவித்தார்.
பெண்கள் அமைப்பினரின் போராட்டத்தால் விழிப்புணர்வு
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராதிகா கூறுகையில், உண்மையில் பெண்குழந்தைகளின் மீது நடத்தப்படும் பாலியல்வன்முறைகள் காவல் நிலையங்களில் வழக்குகளாக பதிவாகி இருப்பதை விட அதிகம் இருக்கும். பல்வேறு அழுத்தம், நிர்ப்பந்தம் போன்ற தடைகளை கடந்துதான் இவ்வளவு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. பொது முடக்க காலத்தில் பெண்கள்,குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதற்கு காவல்நிலையங்களில் பதிவாகியுள்ள போக்சோ வழக்குகள் உதாரணம் என்றார்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காவல் நிலையங்களில் புகார் அளிப்பதற்கே தயக்கம் அல்லது பயம் இருந்த சூழல்தற்போது மாறியுள்ளது. இது தொடர்ச்சியான பெண்கள் அமைப்பினரின் போராட்டங்களும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதுமே காரணம். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியில் தெரியாது என்பதை உணர்ந்துள்ளதால் தைரியமாக புகார் அளிக்கின்றனர். இருப்பினும் புறநகர் மற்றும் ஊரக பகுதிகளில் இது போன்று புகார்கள் கொடுப்பது குறைவாக இருக்கிறது.குழந்தைகளிடையே தொடர்ந்து தொடுதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக புகார்கொடுக்க பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். பெண் குழந்தைகள் மீது அதிகரிக்கும்பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
**********************
மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களின் நிலை என்ன?
கல்வி கற்க வேண்டிய காலத்தில் குடும்பத்தின் வறுமை காரணமாக குழந்தைகள் தொழிற்சாலை உள்ளிட்ட பகுதியில் உடல் உழைப்பிற்கு தள்ளப்படுகின்றனர். இவ்வாறான குழந்தைகள், தொழிலாளர் நலத்துறையின் மூலம் மீட்கப்பட்டு அவர்களுக்கு கல்வி கற்பதற்கான சூழலை அரசு உருவாக்கித்தருகிறது. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.400 வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு முதல் மத்திய பாஜக அரசு இதற்கான நிதியை பல மாவட்டங்களுக்கு ஒதுக்கவில்லை. தமிழகத்தில் 2019-2020 ஆண்டில் ரூ.47 லட்சம் முதல் பகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரண்டாவது பகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதுவும் 2020-2021 ஆண்டிற்கான ஒரு பைசா நிதிகூட ஒதுக்கப்படவில்லை. இதற்கான அறிவிப்புகூட இடம்பெறவில்லை. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களுக்கென 23 மையங்கள் செயல்படுகிறது. இதில் 23 ஆசிரியர்கள், 23 நிர்வாக பணியாளர்கள், 5 தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் 5 உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் ஏப்ரல் 2019 ஆம் ஆண்டு முதல் தரப்படவில்லை. இதேபோன்று 473 குழந்தை தொழிலாளர்களுக்கு ரூ.400 மத்திய அரசு வங்கியில் செலுத்தி வந்த நிதியுதவியும் 2019 ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் எங்கு இருக்கிறார்கள் என்கிற தகவல்களே அரசிடம் இல்லை. கொரோனா அச்சத்தின் காரணமாக புலம்பெயர்ந்தவர்கள் சிலர் குழந்தைகளோடு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர் என இத்துறையை சார்ந்தவர்கள் தெரிவித்தாலும், உண்மையில் பலர் மீண்டும் குடும்பத்தின் வறுமை காரணமாக தொழிலுக்கு திரும்பியுள்ளனர். இதுகுறித்து குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்டு கல்வி கற்று வந்த சிறுமி ஒருவர் தற்போது கரும்பத்தம்பட்டி பகுதியில் உள்ள சிறு பஞ்சாலையில் பணியாற்றி வருவதே இதற்கு சான்று.யுனிசெப் தேவநேயன் கூறுகையில், குழந்தை தொழிலாளர்கள் நிலை குறித்து அரசிடம் எந்த தரவுகளும் இல்லை. ஆய்வுகள் இல்லை, கண்காணிப்பும் இல்லை. இவ் விவகாரத்தில் தொழிலாளர் நலத்துறை மிகப்பெரிய அலட்சியத்தோடு உள்ளது. குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட குழந்தைகள் கல்வித்துறையோடு இணைந்து இந்த பணிகளை செய்ய வேண்டும். ஆனால் கண்காணிப்பு முறையாக இல்லாததால் இருவரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். கல்வித்துறைக்கு பொறுப்பு உண்டு என்றாலும், முதன்மை பொறுப்பு தொழிலாளர் நலத்துறைக்கும் உண்டு. கல்வித்துறை இணைப்பு பள்ளியில் வைத்துள்ளோம் என்கிற பட்டியல் வைத்திருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் இருக்கிறார்களா இல்லையா, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த எந்த தரவுகளும் இல்லை. நிதி மட்டும் செலவு செய்யப்படுகிறது என்றார்.
அம்மாவின் அரசு என அமைச்சர்கள் திரும்பத்திரும்ப சொன்னாலும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கே தலைவரை நியமிக்காத அரசு எப்படி அம்மாவின் அரசாக இருக்க முடியும். ஆன வரையிலும் சுருட்டும் அரசாகவே இது இருப்பதாக கூறும் பொதுமக்களின் குற்றச்சாட்டு மறுப்பதற்கில்லை.
===அ.ர.பாபு===