உலகளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 4,027 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் உகான் நகரத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த நோய் தொற்று காரணமாக சீனாவில் 3,136 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகின்றது. உலகம் முழுதும் பலியானோரின் எண்ணிக்கை 4,027 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், 1,14,422 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் சீனாவை தொடர்ந்து, இத்தாலியில் அதிகபட்சமாக 463 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் 237 பேர் பலியாகி உள்ளனர். வட கொரியாவில் 54 பேரும், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் தலா 30 பேரும், அமெரிக்காவில் 27 பேரும், ஜப்பானில் 9 பேரும் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக, சர்வதேச பொருளாதாரத்தில் 2 டிரில்லியன் டாலர்கள் வரை சரிவு ஏற்படும் என்றும், சில நாடுகளின் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்றும், சர்வதேச ஆண்டு வளர்ச்சி விகிதம் 2.5 சதவீதத்திற்கு கீழ் சரிவடையும் என்றும் ஐ.நாவின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.