tamilnadu

img

இந்நாள் ஆகஸ்ட் 03 இதற்கு முன்னால்

1946 - தற்காலத்திய உலகின் முதல் கேளிக்கைப் பூங்காவாக(தீம் பார்க்) குறிப்பிடப்படும் ‘சாண்டாகிளாஸ் லேண்ட்’, அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்திலுள்ள சாண்டாகிளாஸ் என்ற இடத்தில் திறக்கப்பட்டது. உண்மையில் ஓய்வுபெற்றோர் குடியிருப்பு அமைப்பதற்காகவே, ஓய்வுபெற்ற தொழிலதிபரான லூயிஸ் கோச், 1941இல் இங்கு பணிகளைத் தொடங்கினார்.  ஒன்பது குழந்தைகள் பெற்றவரான கோச், முதியோரைப் பார்க்க வரும் குழந்தைகள், இங்கு வந்தபின் ‘சாண்டா கிளாசை (கிறிஸ்துமஸ் தாத்தா) காணாமல் ஏமாற்றமடை வார்கள் என்று கருதினார். அதனால், குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அமைப்புகளை உருவாக்கினார். இரண்டாம் உலகப்போரால் கட்டுமானம் தடைப்பட்டதால், 1946இல்தான் இது திறக்கப்பட்டது. அப்போது இதற்குக் கட்டணமில்லை. பல புதிய அமைப்புகள் சேர்க்கப்பட்டபின் 1955இல்தான் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டதுடன், 1984இல் ‘ஹாலிடே வோர்ல்ட் (அண்ட் ஸ்ப்ளாஷ்-இன் சஃபாரி)’ என்று பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

1133இல் லண்டனில் தொடங்கப்பட்டு, ஒவ்வோராண்டும் நடத்தப் பட்ட ‘பார்த்தலேமு ஃபேர்’ என்ற பொருட்காட்சி, இடைக்காலத்தில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகளின் தொடக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. 1583இல் லண்டனில் தொடங்கப்பட்ட ‘பேக்கன்’, பல்வேறு விளையாட்டு, பொழுது போக்கு வசதிகள்கொண்ட ‘மனமகிழ் தோட்டங்கள்’ என்பவற்றின் தொடக்கமாக அமைந்தது. 1851இல் உலகத் தொழிற்துறைப் பொருட்காட்சிகள் நடத்தும் வழக்கம் தொடங்கியபின், அவை நடத்தப்படும் இடங்களில் பொழுதுபோக்கு அமைப்புகள் நிரந்தரமாக அமைக்கப்படுதல் தொடங்கியது. இந்த மூன்றுவகை அமைப்புகள்தான் தற்காலத்திய கேளிக்கைப் பூங்காக்களுக்கான அடிப்படைகளாக அமைந்தன. 1800களின் பிற்பகுதியில் ஏற்பட்ட தொழிற்துறை முன்னேற்றங்கள், நீராவியால் இயங்கும் இயந்திர ராட்டினங்கள் முதலானவை உருவாகக் காரணமாயின. ‘கில்டட் ஏஜ்(பொன் முலாமிட்ட காலம்!)’ என்றழைக்கப்படும் 1860களுக்குப் பிந்தைய காலத்தில், அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு பணிநேரம் குறைந்ததுடன், அடிப்படைத் தேவைகளுக்குப்போக மீதமிருக்குமளவுக்கு ஊதியமும் கிடைத்ததால், பொழுதுபோக்கிற்கு அவர்கள் செலவிடத் தயாராக இருந்தனர். இதைப் பயன்படுத்திக்கொண்டு பொழுதுபோக்கு வளாகங்கள் உருவாயின. 1895இல் அமெரிக்காவின் கோனீ  தீவில், ஒரே நிறுவனத்துக்குச் சொந்தமான நிரந்தர பொழுது போக்கு வளாகம் அமைக்கப்பட்டது. இக்காலத்தில்தான், நுழைவுக்கட்டணத்தோடு, உள்ளிருக்கும் பொழுதுபோக்கு அமைப்புகளுக்குத் தனித்தனியாகவும் கட்டணம் செலுத்தும்முறை தொடங்கியது. பொருளாதாரப் பெருமந்தம், இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றால் பின்னடைவு ஏற்பட்டாலும், அவற்றுக்குப்பின், பல்வேறு புதுமைகளுடன் கேளிக்கைப் பூங்காக்களாக உருவாகி, மிகப்பெரிய துறையாக வளர்ச்சியடைந்தது.