ஈரான் மூத்த அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்க அதிபர் டிரம்ப் நேற்று நடவடிக்கை மேற்கொண்டார் என்று வெள்ளை மாளிகை ஒரு பிரகடனத்தில் தெரிவித்துள்ளது.
ஈரான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கிறது, அமெரிக்க குடிமக்களை தன்னிச்சையாக தடுத்து வைக்கிறது, அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறது மற்றும் இணைய தாக்குதல்களை நடத்துகிறது என்று இந்த பிரகடனத்தின் மூலம் அமெரிக்க மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
”ஈரானின் இந்த நடத்தை மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதால், ஈரானின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புலம்பெயர்ந்தோர் அல்லது குடியேறாதவர்கள் என எவ்வாறாக இருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இது அமெரிக்காவின் நலனுக்காகவே என்று நான் தீர்மானித்தேன்” என டிரம்ப் பிரகடனத்தில் கூறியுள்ளார்.
பிரகடனத்தின் மூலம் யார் உள்ளடங்கப்படுவார்கள் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை டிரம்ப் மாநில செயலாளருக்கு வழங்கியுள்ளார். இந்த பிரகடனம் சட்ட பூர்வமான அமெரிக்க நிரந்தர குடியிருப்பாளர்கள், தஞ்சம் வழங்கப்பட்டவர்கள் அல்லது ஏற்கனவே அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட அகதிகளுக்கு பொருந்தாது என்று விதிவிலக்குகளையும் அவர் வழங்கினார். மேலும் முக்கியமான சட்ட அமலாக்க நோக்கங்களுக்காக நுழைந்தவர்களுக்கும் அவர் விதிவிலக்கு வழங்கினார். இந்த பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் கலந்துகொள்ள இருக்கும் ஈரானிய வெளியுறவுத்துறை அதிகாரிகளை பாதிக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஐ.நா. தலைமையக ஒப்பந்தத்தின் கீழ், வெளிநாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையை அணுக அமெரிக்கா பொதுவாக அனுமதிக்க வேண்டும். ஆனால் பாதுகாப்பு, பயங்கரவாதம் மற்றும் வெளியுறவுக் கொள்கை காரணங்களுக்காக விசாக்களை மறுக்க முடியும் என்று அமெரிக்கா கூறுகிறது.