உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
கோவிட் -19 வைரஸ் தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு, சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டது என்றும், சரியான முறையில் சிக்கலை கையாளவில்லை என்றும் குற்றம் சாட்டிய அதிபர் ட்ரம்ப், அமெரிக்க அரசு அளித்து வந்த நிதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் முடக்கினார்.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்புக்கு ட்ரம்ப் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உலக சுகாதார அமைப்பு அடுத்த 30 நாட்களுக்குள், கொவிட்-19 தொற்று தொடர்பான அடுத்தகட்ட ஆதாரப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிதியை, நிரந்தரமாக நிறுத்த நேரிடும் என்று ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவது குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.