tamilnadu

img

புலிக்கு கொரோனா தொற்று...! -பாதிப்புள்ளவர்கள் விலங்குகளிடம் செல்ல வேண்டாம்

அமெரிக்காவில் தற்போது 4 வயது புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயதான நாடியா என்றழைக்கப்படும் பெண் புலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய கால்நடை சேவை ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் 
சில நாட்களாக பூங்காவில் உள்ள சிங்கங்கள் மற்றும் புலிகளுக்கு மூச்சு தொடர்பான நோய் அறிகுறி தென்பட்டது. இதில் 4 வயதான புலிக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பூங்காவில் பணியாற்ற ஊழியர் மூலம் இந்த நோய் விலங்குகளுக்கு தொற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை பூங்காவில் இருக்கும் பிற விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் பிற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமா என்ற முடிவை விலங்குகள் நலத்துறை எடுக்கும். இந்த முடிவுகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்று இருக்கும் மனிதர்கள் யாரும் குணமடையும் வரை கால்நடைகள், செல்லப் பிராணிகள், விலங்குகளோடு நெருங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.