tamilnadu

img

அமெரிக்காவின் கூடுதல் பொருளாதார தடைகளுக்கு ஈரான் பதிலடி

ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே, அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பாக நிலவி வரும் மோதல் காரணமாக, அமெரிக்கா ஈரான் மீது கடும் பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் அந்நாட்டில் பெரும் பொருளாதார பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதை அடுத்து, ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருந்தது. இதை தொடர்ந்து, ஹோர்மஸ்கான் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. 

இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடையை விதித்துள்ளது. மேலும், ஈரானிய தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான நிறைவேற்று ஆணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 

இதை தொடர்ந்து, வளைகுடா பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியது. இந்நிலையில், ஈரான் மக்கள் மீது கூடுதல் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் நாட்டின் ஐ.நா தூதர் மஜித் தாகத் ராவாஞ்சி கூறியதாவது: ”ஈரான் மக்கள் மீதான பொருளாதார போரை அமெரிக்கா நிறுத்த வேண்டும். மிரட்டும் போக்கு தொடரும் பட்சத்தில், பேச்சுவார்த்தையை தொடங்க முடியாது. அச்சுறுத்தல் இருக்கும் வரை, ஈரானும் அமெரிக்காவும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை தொடங்க எந்த வழியும் இல்லை. அத்தகைய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை. 

மேலும், பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். இந்த விஷயத்தில் ஐநா தனது பங்களிப்பை வழங்கும்படி கேட்டுள்ளேன்.” இவ்வாறு அவர் கூறினார்.