tamilnadu

img

நீர்நிலை மின்மோட்டாரை இயக்க சைக்கிள் துடுப்பு படகு

விழுப்புரம்,டிச.11- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாலப்பட்டு ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக வறண்டு கிடந்த ஏரிக்குள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. கிணற்றின் அருகே சிமெண்டு தளம் உயரமாக அமைத்து மின்மோட்டார் மூலம் பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக ஊரின் மையப் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, தினந்தோறும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மழைக்காலங்களில் ஏரிக்கு தண்ணீர் வந்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மின்மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.இதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் செஞ்சி பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர்மழை காரணமாக பாலப்பட்டு ஏரி நிரம்பியது. இதனால் ஏரிக்குள் சென்று மின்மோட்டாரை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டதோடு, குடிநீர் வினியோகம் செய்யும் பணியும் பாதிக்கும் நிலை உருவானது. இதையடுத்து பாலப்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணி புரிந்து வரும் பாலமுருகன் என்பவர் ஏரிக்குள் சென்று மின்மோட்டாரை இயக்கி விட்டு வர ஏதுவாக சைக்கிள் மாடல் படகு ஒன்றை தனது சொந்த செலவில் தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி செஞ்சியில் உள்ள ஒரு இரும்பு பட்டறையில் பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு தண்ணீரில் சென்று வர சுழலும் துடுப்புகளுடன் சைக்கிள் படகு ஒன்றை வடிவமைத்தார். அதன் மூலம் தண்ணீரில் சென்று ஏரியில் உள்ள மின்மோட்டாரை இயக்கி பொதுமக்களுக்கு தற்போது தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதற்கான  ரூ.13 ஆயிரத்து,600 செலவாகியுள்ளது, இந்த சைக்கிள் படகை சைக்கிள் ஓட்டுவதுபோல் மிதிக்கும் போது செயின் சுற்றுவதோடு, துடுப்பு நகர்ந்து தண்ணீரை தள்ளியபடி செல்கிறது. சைக்கிள் படகு விபத்து ஏற்பட்டால் தற்காத்துக் கொள்ள டியூப் ஒன்றும் படகில் வைத்து உள்ளனர்,சைக்கிள் படகு உருவாக்கிய ஊராட்சி செயலாளர் பாலமுருகனை செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அறவாழி மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.