tamilnadu

img

தூத்துக்குடி: மாணவரை தாக்கிய கல்லூரி ஆசிரியர்களை கைது செய்யக்கோரி போராட்டம்

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் செயல்பட்டு வரும் காமராஜ் கல்லூரியில் பேராசிரியரின் தவறை தட்டிக்கேட்ட மாணவரை தாக்கிய கல்லூரி ஆசிரியர்களை கைது செய்யக்கோரி மாணவர்களின் போராட்டம் வெடித்தது.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் செயல்பட்டு வரும் காமராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்னல் தேர்வு இன்று நடைபெற்றது வகுப்பறையில் அமர்ந்து தேர்வு எழுதிய மாணவர்களின் வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில் வகுப்பறையில் உள்ள கரும்பலகையிலிருந்ததால் உற்சாகமான மாணவர்கள் கரும்பலகையைப் பார்த்து தேர்வை எழுதியுள்ளனர்.
இதையடுத்து மாணவர்கள் கரும்பலகையைப் பார்த்து தேர்வு எழுதியதை அரிந்த ஆசிரியர்கள் சுரேஷ் மற்றும் சீனிவாச மணிகண்டன் ஆகியோர் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களிடம் தேர்வை காப்பியடித்துள்ளீர்கள் அதனால் இடைநீக்கம் செய்ய உள்ளதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு இருந்த காமராஜர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவரும், இந்திய மாணவர் சங்க நிர்வாகியுமான நேசமணி மாணவர்களை எதற்கு சார் திட்டுகிறீர்கள் இது உங்களின் தவறு எனக் கூறி சக மாணவருடன் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து  ஆத்திரமடைந்த ஆசிரியரான சுரேஷ் மற்றும் சீனிவாச மணிகண்டன் மாணவர் நேசமணியை கடுமையாக தாக்கியதுடன் தரக்குறைவாகவும் திட்டியுள்ளனர். மேலும் மாணவர்களிடம் தங்களுக்கு இந்த கல்லூரி இல்லை என்றால் வேறு கல்லூரியில் நாங்கள் வேலை பார்ப்போம். எங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டி உள்ளனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் தாக்குதலில் காயமடைந்த மாணவர் நேசமணி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய மாணவர் சங்க நிர்வாகியான கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரண்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்களை காவல்துறை கைது செய்யக் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் கோரிக்கையை காவல்துறை ஏற்காததைத் தொடர்ந்து, அநாகரீகமாக நடந்து கொண்டு குண்டர்கள் போல் மாணவரை தாக்கிய ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாணவரை தாக்கிய ஆசிரியர்களை கைது செய்யக்கோரி இன்று கல்லூரிகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.