தரங்கம்பாடி, மே 23-செம்பனார்கோவில் அருகே முக்க ரும்பூரில் கெயில் நிறுவனம் ஷேல் கேஸ் குழாய் பதிப்பதை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி விவசாயிகள் விஷ மருந்து பாட்டில்களுடன் வயலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மாதானம்- முதல் மேமாத்தூர் வரை 29கிமீ தூரத்திற்கு கெயில் நிறுவனம் விளை நிலங்களை நாசப்படுத்தி ஷேல் கேஸ் எடுத்துச் செல்லும் குழாய்களை பதிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அதனை அரசு கண்டு கொள்ளாமல் காவல்துறை உதவியுடன் விவசாயிகளை அச்சுறுத்தி கெயில் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அளித்து வருவதால் குழாய் பதிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகா முக்கரும்பூர் ஊராட்சியில் 50 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி பயிர்கள் தற்போது காய வைத்துள்ள நிலையில் அந்த செடிகளை அழித்து குழாய் பதிப்பு பணிகளை மேற்கொண்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முக்கரும்பூர் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் தங்கள் வயல்களில் விஷ மருந்து பாட்டில்களுடன் இறங்கி கெயில் குழாய் பதிப்பை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முக்கரும்பூர் ஊராட்சியில் 50 ஏக்கருக்கு மேல்பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் குறுவை நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் எந்தவித முன்னறிப்புமின்றி கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. பயிர்களை நாசப்படுத்தி குழாய் பதிக்கும் பணிகளை மேற்கொண்டால் விவசாயிகள் அனைவரும் வயலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழித் தெரியவில்லை. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் விவசாயிகள், பெண்கள், கையில் விஷ மருந்து பாட்டில்களுடன் பருத்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். விளை நிலங்களை நாசப்படுத்தி குழாய் பதிப்பதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.