tamilnadu

img

பெரியகுளம் தூர்வாரும் பணிக்கு நிதியுதவி வழங்கல்

தஞ்சாவூர் ஜூலை.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள 550 ஏக்கர் பரப்பளவுள்ள பெரியகுளம் கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்மேடிட்டு காணப்பட்டது. மேலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து, அரசை எதிர்பார்க்காமல் தங்கள் சொந்தப் பணத்தை கொண்டும், நன்கொடை மூலமாகவும் பெரியகுளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர். கடந்த 13 தினங்களாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முக்கிய தலைவர்களில் ஒருவரான பண்ணவயல் சு.ராஜாத்தம்பியின் மகனான, பேராவூரணி டாக்டர் ஆர்.சந்திரசேகரன் தனது பிறந்த நாளான வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தார். பின்னர் பெரியகுளம் சென்று தூர்வாரும் பணியை பார்வையிட்டு, அங்கிருந்த கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம், ஒரு நாள் தூர்வாரும் பணிக்கு ஆகும் செலவான ரூ29 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார்.